செவ்வாய், 7 ஏப்ரல், 2020

தொகுதி மேம்பாட்டுக்கு வழங்கப்படும் எம்.பி.க்கள் நிதி 2 ஆண்டுக்கு நிறுத்தம்:

தினகரன் : புதுடெல்லி: கொரோனா தடுப்பு பணிக்கு நிதி சேர்ப்பதற்காக,
எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தவும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் சம்பளம், சலுகைகள் ஓய்வூதியங்கள் ஆகியவற்றை ஓராண்டுக்கு 30 சதவீதம் பிடிக்கவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாள் முடக்கம் கடந்த மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல தரப்பினருடன் பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. முடக்கத்துக்குப்பின் நேற்று முதல் முறையாக காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இவ்வாறு காணொளி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடப்பது இதுவே முதல் முறை. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனாவால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை எதிர்த்து போராட போர்க்கால அடிப்படையில் நாம் தயாராக வேண்டும். தொழில்கள் தொடர்ந்து நடப்பதற்காக திட்டத்தை அனைத்து துறை அமைச்சகங்களும் தயாரிக்க வேண்டும். 21 நாள் முடக்கம் முடிந்ததும், ஒவ்வொரு அமைச்சகம் முன்னுரிமை அடிப்படையில் 10 பிரிவுகளில் கவனம் செலுத்தி, 10 முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
கொரோனா அதிகம் பாதிக்காத பகுதிகளில், அனைத்து துறைகளையும் மெதுவாக திறக்க தரமான திட்டத்தை அமைச்சர்கள் தயாரிக்க வேண்டும்.

நாம் பிற நாடுகளைச் சர்ந்திருப்பதை குறைத்து, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க கொரோனாவால் ஏற்பட்டுள்ள இப்பிரச்னை ஒரு வாய்ப்பு. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, புதுமையான தீர்வு காண வேண்டும். மத்திய அமைச்சர்கள் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மாவட்ட அளவிலான திட்டங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். கொரானா பாதிப்பு சவால்களை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பிரதமருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் எம்.பி.க்கள் சம்பளம், படிகள், மற்றும் ஓய்வூதியத்தை ஓராண்டு காலத்துக்கு 30 சதவீதம் குறைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சி  நிதியையும், 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டுகளுக்கு தற்காலிகமாக  நிறுத்தவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.  அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சமூக பொறுப்பு நோக்கில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோர் தாங்களாக முன்வந்து சமபளத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

எம்பிக்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை ஏப்ரல் 1ம் தேதி முதல் ஓராண்டு  காலத்துக்கு, 30 சதவீதம் குறைக்கும் அவசர சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த பணம்,  மத்திய தொகுப்பு நிதிக்கு செல்லும். எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியையும் 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இந்தப் பணம்  கொரோனா பாதிப்பால் மேற்கொள்ளப்படும் சுகாதார சேவைகளை மேற்கொள்ள  பயன்படுத்தப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, எம்.பி.க்களை போன்று ஓராண்டுக்கு தன்னுடைய சம்பளத்திலும் 30 சதவீதத்தை பிடித்துக் கொண்டு மத்திய அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி நாடாளுமன்ற விவகாரத்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜ வரவேற்பு
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமரே எம்.பி.க்கள் ஊதியத்தை குறைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவை காங்கிரஸ் வரவேற்கிறது. இதேபோல், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது, அந்தந்த தொகுதிகளின் வளர்ச்சியை முன்னெடுப்பது. இந்த நிதியை ஒட்டுமொத்தமாக 2 ஆண்டுக்கு ரத்து செய்வது என்பது அதை முடக்குவது போன்றதாகும். மேலும், எம்.பி.க்களின் செயல்பாட்டையும், நடவடிக்கைகளையும் முடக்குவதாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரவித்துள்ளன.

பாஜ தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘மோடி தலைமையிலான அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கது. எல்லாவற்றையும் விட தேச நலனே முக்கியம் என்பதை இது விளக்குகிறுது. பாஜ.வில் உள்ள அனைவரும் இந்த முடிவை மனப்பூர்வமாக வரவேற்பார்கள். தங்களுடைய சம்பளத்தை விட்டுத்தர தாமாக முன்வந்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு எங்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுளளார்.

அரசுக்கு 7,880 கோடி கிடைக்கும்:
எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.க்களும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், பள்ளிக் கட்டிடம், தண்ணீர் தொட்டி, ஆழ்துளை கிணறு, பஸ் நிறுத்த நிழற்குடை உட்பட பல வசதிகளை எம்.பி.க்கள் செய்து கொடுப்பர். தற்போது இந்தப் பணம் 2 ஆண்டு காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு எம்.பி.க்களால் தங்கள் தொகுதியில் எந்த வசதிகளையும் மக்களுக்கு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எம்.பிக்கள். தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டுள்ளதால்,  (மக்களவையில் 543, மாநிலங்களவையில் 245) அரசுக்கு மொத்தம் 7,880 கோடி கிடைக்கும்

கருத்துகள் இல்லை: