வெள்ளி, 16 மார்ச், 2018

களப்பிரர் காலம் தமிழரின் பொற்காலம்,.. உண்மையில் பார்ப்பனரின் இருண்ட காலம்.

களப்பிரர் காலம், தமிழரின் இருண்ட காலம் அல்ல, பார்ப்பனரின் இருண்ட காலம். உண்மையில் தமிழரின் பொற்காலம்,
Krishnavel T S : களப்பிரர் - தமிழகத்தின் முதல் குடியாட்சி
களப்பிரர் காலம் தமிழ் வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 - 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்.
தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள், மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப் பட்ட காலம் கி.மு. 1 - முதல் கி.பி.5 - ஆம் நுற்றாண்டு வரையே.
ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்ட காலம், களப்பிரர் என்ற வேறு ஒரு இனம் தமிழரை அடிமை படுத்திய காலம் என்று ஏன் கூறுகிறது.
களப்பிரர் வேறு இனம் என்றால் அவர்கள் ஏன், தமிழில் இப்படி பட்ட இலக்கியங்களை படைக்க வேண்டும் அல்லது படைக்க உதவ வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்ப்போம். கி.பி.1ஆம் நூற்றாண்டு மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட முடிவை நெருங்கிய காலம். அந்த கால கட்டத்தில் பெரும் பான்மையான மக்கள் கொண்டிருந்த வழக்கம், முன்னோர் வழிபாட்டு முறையான நடுகல் வழிபாடு(போரில் இறந்த முன்னோருக்கு கல்நட்டு வழிபடுதல்) மற்றும் சாத்தன் வழிபாடு(போரில் இறந்த முன்னோரில் குதிரை ஏறி புரிந்தவர், குதிரை வைத்திருந்த வீரன் சிறு வசதியான குடும்பமாக இருப்பர், அவர்கள் சிறு கோயில் கட்டி வழிபட்டனர்), இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் பல சாதிகளை சேர்ந்தவர்கள் பங்குனி மாதம் உத்திரம் நாளில் தங்கள் குடும்ப சாத்தான் கோயிலுக்கு சென்று வழிபடுவர். அதாவது அவர்கள் பல சாதிகளை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் மூத்த முப்பாட்டன் ஒருவனே என்று பொருள்

இந்த காலங்களில் பாண்டியருக்கும், சோழர்களுக்கும் பார்ப்பன மோகம் பிடித்து ஆட்டிய காலம், எல்லா நேரமும் பார்ப்பனருடன் சேர்ந்து யாகம் வளர்ப்பதே வேலையாக இருந்தனர், தங்களை மற்றவரைவிட சிறப்பாக காட்டி கொள்ள முனைந்தனர்.
இதில் இருவர் சேர வில்லை, ஒருவர் சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன், இவர் தான் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளின் தந்தை, இவர் மகனே கண்ணகிக்கு சிலையை எடுக்க இமயமலை சென்ற இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன். மற்றொருவர் காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், இவன் கரிகால் சோழனுக்கும், ஈழத்து இளவரசிக்கும் பிறந்தவன்.
அதே நேரத்தில் இந்த பார்ப்பன மோகத்தில் மூழ்கி திளைத்த பாண்டியன் பெயர், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, சோழனின் பெயர், ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி. இவர்களின் பெயரே இவர்களின் செயலை நமக்கு புரியவைக்கும். இவ்விருவரும் கணக்கில்லா விளைநிலங்களை பார்ப்பனருக்கு தானமாக கொடுக்க, வேளாண்குடிகளான பொதுமக்களின் மனக்கசப்பிற்கு ஆளானார்கள். ஏனெனில் நிலம் பார்ப்பனருக்கு மன்னன் கொடுத்தால், அங்கே விவசாயம் செய்து வந்த விவசாயி நிலத்தை காலி செய்துகொண்டு எங்காவது கூலி வேலைக்கு தான் போக வேண்டும், அல்லது அந்த நிலம் பெற்ற பார்ப்பனிடம் கூலி வேலை செய்ய வேண்டும்
முடிவு மக்கள் புரட்சி, தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தமக்குள்ள ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து, அவன் தலைமையில், அரசனையும் அவனது படைகளையும் எதிர்த்து போராட தொடங்கினர், போராட்டத்தின் இறுதியில், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி அச்சுதன் என்ற வேளாண்குடி தலைவனால் கொல்லப்படுகிறான். ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியும் கொல்லப்படுகிறான், அவனை வென்ற தலைவன் பேர் தெரியவில்லை. இதில் உற்று நோக்க வேண்டியது என்ன வென்றால், இந்த மக்கள் புரட்சி காஞ்சிலும், சேரநாட்டிலும் நடக்க வில்லை.
இதுவே அரசர்களை எதிர்த்து நடந்த உலகின் முதல் மக்கள் புரட்சி, அனால் நமக்கு இந்த காலம் இருண்ட காலம் என்று பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப் படுகிறது.
உண்மையில் அவர்கள் களப்பிரர் அல்ல, களப்பரர் - கள பறையர், அஃதாவது, வேளாண் களத்தில் பணிசெய்தவர். இந்த புரட்சிக்கு பின் அவர்கள் பல ஊர்களை தலைமையாக கொண்டு அந்த பகுதிகளை ஆட்சி செய்தனர், உண்மையான மக்களாட்சி தான் அவர்கள் செய்தது, அவர்கள் பார்ப்பனருக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யாமல், புலவர்களுக்கு பொருள் உதவி செய்து, பல தமிழ் இலக்கியங்களை உருவாக்க உதவினார்.
முக்கியமான களப்பிர குடியரசு தலைவர்கள் - ஆதாரம் இலங்கை மகாவம்சம்
1. பாவுத்திரை - திரையன் - (Today's dharmapuri)
2. வேங்கடம் - புள்ளி - (Today's Tirupathi)
3. மிலாடு - காழிமலையன் - (Today's Thirukoilur)
4. தொத்தி மலை - வெல்கெழு நல்லிக்கோன் - (Today's Dottabeta - Ooty)
5. முதிரமலை - இளங்குமணன் - (Today's Palani)
6. நடுநாடு - இடக்காலி - (Today's center of Karnataka)
7. எருமையூர் - ஆய் வியங்கோவே -(Today's Mysore)
8. இடைகழினான் II
9. அச்சுதாவி கரந்தன்
10. சேடிவல்லவன்
பார்ப்பனர் வருகைக்கு பின் மக்களுக்கு அவர்களை போல மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தேவைப்பட்டதால், அன்பு நெறி போதித்த சமண மற்றும் பவுத்த மதங்களை ஏற்று கொண்டு, பல கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்படுத்தினர்.
இவர்களின் ஆட்சி கி.பி 220 தொடங்கி கி.பி 550 வரை சுமார் 300 வருடங்கள் நடந்தது, பெரும்பாலும், தனி நகர்ப்புற ஆட்சியாகவே (Like City states of Greece) இருந்தது, பெரிதாக யாரும் அடுத்த நாட்டை பிடிக்க வேண்டும் என்று அலைய வில்லை. மக்கள் அமைதியாக வாழ வழி செய்தனர்.
கி.பி. 300-ல் பாரசீகத்திலிருந்து வந்து தொண்டைமண்டலத்தில் குடியேறிய பல்லவர்கள் சுமார் கி.பி 400-ல் சிம்ஹவிஷ்ணு பல்லவன் காலத்தில் காஞ்சியின் ஆட்சியை கைப்பற்றினர். மகேந்திர பல்லவன் (கி.பி600) எல்லா களப்பிர பகுதிகளையும் கைப்பற்றி ஒருங்கிணைந்த பல்லவ சாம்பிராச்சியத்தை உருவாக்கினான்.
இந்த பல்லவர்களும் முதலில் பவுத்தமத்தை பின்பற்றினாலும், பிற்காலத்தில் மகேந்திர பல்லவன் காலத்தில், சைவ சமயத்துக்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம் மீண்டும் பார்ப்பனர் பலம் பெறலானார்கள்,
இம்முறை பார்ப்பனர் யாகத்துக்கு முதலிடம் கொடுப்பதை விட்டுவிட்டு களப்பிரர் இலக்கியம் மூலம் பவுத்தம், சமணம் வளர்த்த முறையை பின்பற்றி பக்தி இலக்கியம் என்று சிவனின் அற்புதங்கள் திருவிளையாடல்கள், என்று தங்கள் வழிமுறையை மாற்றிக்கொண்டனர்.
தமிழகத்தில் வருணாசிரம முறை வலுவாக காலூன்ற தொடங்கியது இந்த 7-8ஆம் நூற்றாண்டு கால கட்டமே
ஆக மொத்தத்தில்,
களப்பிரர் காலம்,
தமிழரின் இருண்ட காலம் அல்ல,
பார்ப்பனரின் இருண்ட காலம்.
உண்மையில்
தமிழரின் பொற்காலம்,
-------------------------------------------------------------------------------------
“தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” என்ற எனது நூலின் ஒரு பகுதியே மேலே உள்ள கட்டுரை.
-------------------------------------------------------------------------------------
ஐயா சு.ப.வீ அவர்களால், தோழர் மதிமாறன் முன்னிலையில் வெளிடப்பட்டு ஆசிரியர் வீரமணி அவர்களால் பாராட்டப்பட்ட நூல்.
ஐயா சு.ப.வீ அவர்கள் இந்த நூல் குறித்து பேசிய காணொளி இந்த சுட்டியில் காணலாம் https://goo.gl/xzQp6A
-------------------------------------------------------------------------------------
இது போன்ற பல தகவல்கள் கொண்ட எனது இந்த நூல்www.tamilnool.club இணையதளத்தில் கிடைகிறது, Online payment மற்றும் COD முறையில் வாங்கலாம்

கருத்துகள் இல்லை: