செவ்வாய், 13 மார்ச், 2018

ஹால் டிக்கெட்டை கிழித்து ரேகிங்,, பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை... கிருஷ்ணகிரி

tamilthehindu :கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, சக மாணவர்கள் இருவர் ஹால் டிக்கெட்டை கிழித்து ரேகிங் செய்ததால், பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.
தேவிரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் தமிழரசி (17). இவர் அருகேயுள்ள அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் தற்போது நடைபெற்று வரும் பொதுத்தேர்வை எழுதி வந்தார். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன்பின், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாரூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தமிழரசியின் வகுப்பில் பயிலும் சக மாணவர்கள் இருவர் பசுபதி (17), சந்தனபாண்டியன் (17)) திங்கள் கிழமை தமிழரசியின் ஹால் டிக்கெட்டைக் கிழித்து அவரிடம் ரேகிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த மாணவி தமிழரசி வகுப்பில் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி வேதனைப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அவமானம் தாங்க முடியாமலும், அடுத்து நடைபெறும் தேர்வுகளை எழுத முடியாது என்பதாலும் மனமுடைந்து தமிழரசி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
தங்கள் மகளின் தற்கொலைக்கு காரணமான சக மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: