செவ்வாய், 7 அக்டோபர், 2014

Traffic ராமசாமி : அதெல்லாம் அபாண்ட கொள்ளையாச்சே! பல வருஷமாவே விசாரணை வேணும்னு கேட்டுட்டேதான் இருக்கேன்.

எதுக்கும் பயப்படாதீங்க!”
பாரதி தம்பி
டிராஃபிக் ராமசாமி...
'அட, அவருக்கு வேற வேலை இல்லைப்பா... சும்மா எதுனா கேஸ் போட்டுட்டே இருப்பார்!’ என அலுத்துக்கொள்வார்கள் சிலர். ஆனால், அந்த ஒரு நபரின் முனைப்புதான், தாதுமணல் கொள்ளை விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தைத் தலையிடவைத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒட்டுமொத்த வில்லங்கத்தையும் மீண்டும் விசாரிக்க வைத்திருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஆரம்ப நாட்களில் விறுவிறுக்கவைத்து, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டவைத்திருக்கிறது. சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என இவர் தொடர்ந்த வழக்குதான், தலைநகரில் விதிமீறல் கட்டடங்களுக்குக் கடிவாளம் போட்டது. நோக்கு வர்மம், களறி சண்டை என சட்டத்தைக் கையில் எடுக்காமல், சட்டரீதியாகப் போராடும் இந்தத் 'தமிழன்’ தாத்தாவுக்கு வயது 82.
''கனிமம், தாதுமணல் கொள்ளைகளின் மீது தங்களின் கவனம் திரும்பியது எப்படி?''
''அதெல்லாம் அபாண்ட கொள்ளையாச்சே!  பல வருஷமாவே அது சம்பந்தமா விசாரணை வேணும்னு கேட்டுட்டேதான் இருக்கேன்.  சல்லிசு விலையில் அரசாங்கத்திடம் குவாரி உரிமம் வாங்கிட்டு, சட்டவிரோதமா கனிம வளங்களைக் கொள்ளையடிக்கிறாங்க. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், அரசின் புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் நிலங்கள்னு ஒரு இடத்தைக்கூட விட்டுவைக்கலை. மதுரையில் சகாயம் கலெக்டரா இருந்தப்போ, கிரானைட் குவாரி கொள்ளை குறித்து ஆராய்ந்து  '16 ஆயிரம் கோடி இழப்பு’னு சொன்னார். ஒரு மாவட்டத்திலேயே அவ்வளவு பெரிய தொகை இழப்புன்னா, மாநிலம் முழுக்க 32 மாவட்டங்கள்ல எவ்வளவு பிரமாண்டமான தொகை இழப்பு இருக்கும்? அதை ஒரு சின்சியர் ஆபீஸர் கண்டுபிடிச்சுச் சொன்னா, அது மேல நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசாங்கம்,  கையைக் கட்டிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கு. அதான், தமிழ்நாட்டின் கனிமக் கொள்ளையை விசாரிக்க குழு அமைக்கணும்னு சொன்னேன். நான் வழக்குப் போட்ட பிறகு, மாநிலம் முழுக்க இருந்து ஆதாரங்களை எனக்கு அனுப்பிட்டு இருக்காங்க. ஓய்வுபெற்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகூட, கனிம முறைகேடுகள் பத்தி ஆவணங்களை அனுப்பியிருக்கார். இது எல்லாத்தையும் விசாரணைக் குழுவிடம் நான் சமர்ப்பிப்பேன். சகாயத்தின் விசாரணையில் கனிம மற்றும் தாதுமணல் கொள்ளையின் முழுப் பரிமாணமும் தெரியவரும்னு நம்புறேன். ஒருவேளை அதுல அரசியல் தலையீடு இருந்தாலும், 50 சதவிகிதப் பிரச்னையாச்சும் வெளியே தெரியும்ல. அதுவும் வெளியே வரலைன்னா, நான் சும்மா விட மாட்டேன். தொடர்ந்து மேல்முறையீட்டுக்குப் போவேன்!''  
''சகாயம் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததே... அதற்கு என்ன காரணம்?''
''வேறு என்ன காரணம்? இந்த அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள், மணல் கம்பெனிக்காரர்களுடன் பேரம் பேசிவிட்டார்கள். எப்படியாவது இந்த விவகாரத்தை அமுக்கப் பார்க்கிறார்கள். இந்த வகையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஒன்றுதான். பேர்தான் தி.மு.க., அ.தி.மு.க.. கொள்ளை அடிப்பதிலும் கொள்ளைக்குத் துணைபோவதிலும் இரண்டும் ஒன்றுதான்!''
''தி.நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீங்கள் வழக்குப் போட்டீர்கள். நீதிமன்றமும் அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்த சில நாட்களுக்கு அது பரபரப்பாக இருந்தது. ஆனால், இப்போது எப்போதும்போல ஆக்கிரமிப்புகள் இருக்கத்தானே செய்கின்றன?''
''அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. நானும் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் மீதமுள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களையும் இடிக்க உத்தரவு பெற்றுவிடுவேன்!''
''நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்க்க முடியாத பிரச்னைகள் என எவற்றைக் கருதுகிறீர்கள்?''
''அப்படி எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தீர்ப்போ, நடவடிக்கையோ கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஆனா, பெரும்பாலான பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தில் தீர்வுகாண முடியும். நீதித் துறையின் மீதான இந்த நம்பிக்கையை, தமிழ்நாடு முழுக்க உருவாக்கி இருக்கேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் இதுவரை 400 வழக்குகள் போட்டிருக்கிறேன்; உச்ச நீதிமன்றத்தில் 25 வழக்குகள். என்னால் ஈர்க்கப்பட்டு, மாநிலம் முழுக்க பலரும் பொதுநல வழக்குகள் போடுகின்றனர். மதுரையில் பாத்திமா என்ற 40 வயது பெண், அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்படும் கட்-அவுட்டுகளுக்கு எதிராகவும், ஆறு மாவட்ட கலெக்டர்களுக்கு எதிராகவும் பொதுநல வழக்குப் போட்டுப் போராடி வருகிறார். இப்படிப் பலர் இருக்கிறார்கள். இவர்களைப்போல இன்னும் பலர் வரவேண்டும்!''  
''எதற்காக இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்?''
''என்னைச் சுத்தி ஏதோ ஒரு விஷயம் சரியில்லைனா, நான்தானே அதைச் சரி செய்யணும். 'என் வீட்டுக்கு வெளியே என்ன நடந்தா எனக்கு என்ன’னு போக முடியுமா? காந்திஜி அப்படி நினைச்சிருந்தா, இப்போ நான், நீங்கள்லாம் இப்படி சுதந்திரமா உலாத்திட்டு இருக்க முடியுமா? இதே சென்னையில்தான் நான் பிறந்தேன்; வளர்ந்தேன். அப்போ எல்லாம் இந்த ஊர் எப்படி இருக்கும் தெரியுமா? பொதுமக்களும் அரசாங்க ஊழியர்களும் எவ்வளவு பொறுப்போடு இருப்பாங்க தெரியுமா? பின்னி மில்லில் வேலை பார்த்தேன். ஓய்வுக்குப் பின்னாடி ஊர்க்காவல் படையில் சேர்ந்தேன். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையைத் தொடங்கினதே நான்தான். இப்போ அது போலீஸுக்கு கமிஷன் வசூலிச்சுத் தரும் அமைப்பா மாறிடுச்சு.
மனைவி, ஒரே பொண்ணு. பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நான் போடும் பொதுநல வழக்குகளால் என் குடும்பத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். வீட்டுக்கே வந்து மிரட்டுவார்கள்; அடிப்பார்கள். அதனால் என் மனைவி பயந்தார். குடும்பமா, சமூகமானு யோசிச்சப்ப, சமூகம்தான் முக்கியம்னு முடிவு எடுத்தேன். இப்போ 12 வருஷமா ஒரு மாடி ரூம்ல தங்கித்தான் என் வேலைகளைப் பார்த்துட்டு இருக்கேன். காலை, மதியம், இரவு... மூணு வேளையும் காபி, மோர், இவைதான் எனக்கு நீர், ஆகாரம் எல்லாம். ரெண்டையும் மாத்தி மாத்திக் குடிச்சுப்பேன். தாம்பரத்தைத் தாண்டினா மட்டும், காலையில் ரெண்டு இட்லி சாப்பிடுவேன். மூணு வேளை சாப்பிட்டு, பல வருஷங்கள் ஆச்சு. ஒருவேளை சாப்பாட்டு மேல ஆசையில்லாம போனாத்தான், சமூகம் மேல அக்கறை வருமோ என்னவோ!''
''உங்களைப்போல நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு, நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?''
''பயப்படாதீங்க. எதுவா இருந்தாலும் விடாப்பிடியா எதிர்த்து நில்லுங்க. எதிர்ப்புகள் விலகிப்போகும். சொந்த இழப்புகளைச் சந்திக்க தயாரா இருங்க. எதிராளி பெரிய ஆளா இருந்தா, அஞ்சி ஒதுங்கிடாதீங்க. நியாயம் நம் பக்கம் இருக்குனு துணிஞ்சு இறங்குங்க. இதுக்கெல்லாம் தயாரா இருந்தா, யார் வேணும்னாலும் சமுதாயப் பணி செய்ய வரலாம்!'' .vikatan.com/

கருத்துகள் இல்லை: