திங்கள், 6 அக்டோபர், 2014

Chennai அடுக்குமாடி குடியிருப்புக்கள் விற்பனையாகாமல் தேக்கம் ! ஒரு லட்சம் குடியிருப்புக்கள் ?

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், சுமார் ஒரு லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் இதே நிலை நீடிப்பதால், நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு கனவு நிறைவேற இதுவே சரியான தருணமாகக் கருதப்படுகிறது.
அதேசமயம், கட்டுமானத் துறையைச் சார்ந்த லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சென்னையைப் போன்ற பெருநகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களில் சொந்த வீடு வாங்க ஆசைப்படாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடன்பட்டாவது குறைந்தபட்சம் சிறிய அளவிலான வீட்டுக்காவது சொந்தகாரர் ஆகிவிட வேண்டுமென்ற என்ற எண்ணம், அனைத்து நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மேலோங்கியுள்ளது. இதன் விளைவாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்கள், புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை கொடிக்கட்டி பறக்கத் தொடங்கியது.

பண்டிகைக்கு ஆயத்த ஆடையை வாங்குவது போல், யாரோ ஒருவரின் இடத்தில் யாரோ ஒருவர் கட்டிய வீட்டை வங்கிக் கடன் மூலம் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, கடனில் வாங்குவதாக இருந்தாலும் சொந்தவீடு ஆசை நிறைவேறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவர்களின் இந்த மகிழ்ச்சியே, ரியல் எஸ்டேட் துறையில் பல லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் உருவாக்கியது.
தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு புதிய வேலை வாய்ப்புகள் பெருகாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உச்சத்தில் இருந்த ரியல் எஸ்டேட் துறை, 2013 தொடக்கத்தில் இருந்து வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது.
அந்த வீழ்ச்சியில் இருந்து இன்று வரை மீளமுடியாததால், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைகளைச் சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழில் துறை வளர்ச்சி பெற்று புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டால்தான் இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களை ஒட்டிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், 1 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் இன்னும் விற்பனை ஆகாமல் தேங்கி உள்ளன. இந்த நிலை நீடித்தால் முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என அஞ்சும் முதலீட்டாளர்கள், தாங்கள் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை லாபம் பார்க்காமல் விற்றுவிடும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் இதே சூழல் நிலவுவதால், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் சொந்த வீடு கனவை நனவாக்கிக் கொள்ள இதுவே சரியான தருணமாகக் கருதப்படுகிறது. dinamani.com

கருத்துகள் இல்லை: