வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜீவா ! இயக்குனர் சுசீந்திரனுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படம் !

கிரிக்கெட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உற்சாகமடையாத ஒருவர் இருக்க முடியுமா என்ன? அதையே தனது கனவாக, தன் லட்சியமாக நினைத்து அதற்காக உழைக்கும் ஒரு இளைஞனின் போராட்டமே ‘ஜீவா’ என்கிற திரைப்படம். சுகங்களும் வலிகளும் நிறைந்ததே வாழ்க்கை. தான் நினைத்த லட்சியத்தை அடைய தன் வாழ்வின் அத்தனை சுகங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கிரிக்கெட்டை தன் மூச்சாக நினைத்து பயணிக்கிறான் ஜீவா. அவன் கனவில் கல்வீசியவர்கள் யார்? அவனுக்கு நம்பிக்கையின் வாசல் திறக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஜீவா’ என்கிற திரைப்படம். 



சிறு வயதிலேயே தாயை இழந்ததால், தந்தை இருந்தும், பக்கத்து வீட்டில் பிள்ளையாய் வளர்கிறான் ஜீவா. சிறு வயதிலிருந்தே அவனுக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம். நன்றாக படித்து வந்தவன் கிரிக்கெட் மேல் உள்ள கவனத்தால் படிப்பில் பிலோ அவரேஜ் ஸ்டுடெண்டாக மாறுகிறான். ‘கிரிக்கெட்டெல்லாம்... வேண்டாம்’ என்று தந்தை சத்தம் போட, ’கிரிக்கெட்டில் ஜீவா பெரிய ஆளா வருவான்’ என பாராட்டுகிறார் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர். 

இதற்கிடையில் ஜீவா (விஷ்ணு) - ஜெனி (ஸ்ரீதிவ்யா) காதல் இரண்டு வீட்டாருக்கும் தெரியவர. பிரச்சனை வெடிக்கிறது. ஜீவா மதுவுக்கு அடிமையாகிறான். வாழ்க்கையே கேள்விக்குள்ளாகிறது. இதிலிருந்து திசைத் திருப்ப ஒரே வழி அவனுக்கு பிடித்த கிரிக்கெட் தான் என்று முடிவு செய்கிறார்கள் சுற்றியிருப்பவர்கள். 

ஒருவரின் சிபாரிசு மூலமாக சென்னை கிரிக்கெட் கிளப்பில் விளையாட வாய்ப்பும் கிடைக்கிறது. தொடக்கத்தில் மோதிக் கொண்டாலும், உயிருக்கு உயிராக பழகும் ரஞ்சித் (லக்‌ஷ்மண்) நண்பனாக கிடைக்கிறான். இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் வல்லவர்களாக திகழ்கிறார்கள். 


ஆனால், அடுத்தடுத்த கட்டத்திற்கு மேலே செல்லும் போதுதான், எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது. ‘நாமம்’ போட்டவர்கள் நடத்தும் அர்ப்ப அரசியலில், லீக் மேட்சில் விளையாடும் வாய்ப்பு பறிபோகிறது. இவர்களின் எதிர்காலம் என்ன ஆனது? தன் சமூகத்தை சேர்ந்தவர்களையே தேர்வு செய்யும் ‘பார்த்தசாரதி’யை எதிர்த்து கேள்வி கேட்க முடிந்ததா? என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது அடுத்தடுத்த காட்சிகள். க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரஸ்யம், இதுவரை எந்த படத்திலும் கிடைக்காத புதிய அனுபவம்.

கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யம் ஒரு பக்கம் இருந்தாலும், நண்பனை இழந்த சோகம், லட்சியத்திற்காக காதலை தூக்கி எறியும் தருணம், மகன் மீது வைத்திருக்கும் தந்தையின் பாசம் என உணர்வுகளை கோர்த்து நம் இதயங்களை நனைத்து வெளியே அனுப்புகிறார் இயக்குனர் சுசீந்திரன். அதிகார வர்க்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு துணிச்சலான முயற்சியை எடுத்து வெற்றிப் பூமாலைகளோடு வலம் வருகிறார் இயக்குனர்.


‘ஏன்னா, அவங்க உங்க ஆளுங்க!’,‘இத்தனை வருஷமா எங்க ஆட்கள்ல ஒருத்தன் கூடவா திறமைசாலி இல்லை’என்று ‘அவாள்’ அரசியலை எதிர்த்துக் குரல் எழுப்பும் வசனங்களையும், தட்டிக்கொடுக்கும் சாக்கில் பூணூல் இருக்கிறதா என்று தடவிப்பார்க்கிறேரே அந்த பெரியவாள்... அந்தக் காட்சியையும் படத்தில் வைக்கவும் ஒரு தில் வேண்டுமே! அது சுசீந்திரனிடம் நிறையவே இருக்கிறது. 

விஷ்ணு உண்மையாகவே கிரிக்கெட் வீரர் என்பதால், நடிப்பாக இல்லாமல், காட்சிக்கு காட்சி வேகத்தோடும் உற்சாகத்தோடும் சக்கைப்போடு போடுகிறார். நண்பனை இழந்து கண்ணீர் விடும் காட்சியிலும், ஸ்ரீதிவ்யாவிடம் கிரிக்கெட் தான் முக்கியம் என்று சொல்லி கண்கலங்கும் காட்சியிலும் தான் இயக்குனர்களின் நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். விஷ்ணுவுக்கு அடுத்து, ஏன்? சில காட்சிகளில் விஷ்ணுவை மிஞ்சுகிற அளவிற்கு அதிரடி நடிப்பைக் கொடுத்திருக்கிறார், ‘அன்னக்கொடி’ படத்தில் அறிமுகமாகி, இதில் விஷ்ணுவின் நண்பனாக வரும் லக்‌ஷ்மண்.  

ஸ்ரீதிவ்யா, பள்ளி சிறுமியாகவும், கல்லூரி மாணவியாகவும் இருவேறு வித்தியாசமான தோற்றத்தில் நம்மைக் கொள்ளையடிக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவான நடிப்பைக் கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்கிறார் என்றே சொல்லலாம். சூரி, வழக்கம்போலவே சிரிக்க வைக்கிறார். சீனியர் கிரிக்கெட் வீரராக வரும் அவர், பந்தை தேடிக்கொண்டிருப்பதும், விஷ்ணுவுக்கு ஈடுகொடுத்து ரன்கள் எடுக்க ஓடிவருவதும் ரசிக்கவைக்கிறது.


டி.இமான் வித்தியாசமான பாடல்களை கொடுத்து அசத்துகிறார். ‘ஒவ்வொன்றாய் திருடுகிறாய்...’ பாடல் காதலர்களின் இதயத்தை திருடிவிட்டது என்பது நிச்சயம். எஸ்.பி.பி குரலில் ‘மீண்டு வா தோழா...’ பாடல் கண்களை ஈரமாக்குகிறது. ஒளிப்பதிவாளர் மதி, நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் அழகாய் பதிவு செய்திருக்கிறார்.  ‘ஒரு ரோசா...’ டாஸ்மாக் பாடலைத் தவிர்த்திருக்கலாம். 

குறைகள் எதையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, தன் பணியை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். 

ஜீவா - ஜெய்ச்சுட்டான்! nakkheeran.in

கருத்துகள் இல்லை: