ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அரசு பஸ் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு: தமிழகத்தில் போக்குவரத்து கடும் பாதிப்பு !


நேற்று வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர், பஸ்களை குறி வைத்ததால், தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம் முடங்கியது.
பூந்தமல்லியில் இருந்து கம்மாளத் தெரு வழியாக, மதியம், 2:45 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி வந்த அரசு பஸ்சை, மர்ம நபர்கள் வழிமறித்தனர். அந்த கும்பல் பஸ் மீது பெட்ரோல் ஊற்றியது.அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் ஹரிகிருஷ்ணன், நடத்துனர் சந்திரன், பயணிகள், 45 பேர் உட்பட அனைவரும், பஸ்சில் இருந்து இறங்கி அலறியபடி ஓட்டம் பிடித்தனர். உடனே, மர்ம நபர்கள் பஸ்சிற்கு தீ வைத்தனர்.இதைத் தொடர்ந்து, நெல்லை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில், அரசு பஸ்களின்கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.சென்னையில் வேளச்சேரி, ஆவடி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற, மாநகர பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன.ஊருக்குள் செல்லாமல் பை -பாஸ் சாலையில், சில பஸ்கள் பயணித்தன. அங்கும் மறியல் நடந்ததை அடுத்து, பதற்றம் அதிகரித்தது.பாதுகாப்பு கருதி, பஸ்களை பணிமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என, தங்களுக்கு அறிவுறுத்தியதாக கூறிய ஓட்டுனர் கள், பயணிகளை இறக்கி விட்டு, பணிமனைகளுக்கு பஸ்களை கொண்டு சென்றனர்.  ஆயாவோட கஜானாவிலேருந்து பத்து மடங்க புடுங்கணும்.அநியாயம் பண்ற அல்லக்கைகளை எரிகிற பஸ்ஸில் போட்டு விடணும்.


போலீசாரின் அறிவுரைப்படியே பஸ்களை இயக்க, கழக நிர்வாகத்தினரும் அறிவுறுத்தியதால், பஸ்கள் அனைத்தும் பணிமனைக்குள் முடங்கின. இதனால், தமிழகம் முழுவதும், பஸ்கள் இயக்கம்பெரியளவில் முடங்கியது.பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள், தவிப்பிற்கு ஆளாகினர். கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் பயணிகள் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.சென்னையில் பஸ்கள் இயக்கம் முடங்கிய போதும், மின்சார ரயில்கள் இயக்கத்தில் சிக்கல் இல்லாததால், பெரும்பாலான பயணி கள், ரயிலில் பயணித்தனர்.இதனால், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.நேற்றைய தினம், சென்னையில் இருந்து கர்நாடகா பகுதிகளுக்கு செல்லும், 80க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் பயணிக்க முன்பதிவு முடிந்திருந்தது. மாலையில் ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து, பெரும்பாலானோர் பயணத்தை ரத்து செய்தனர்.இதேபோல, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள், பயணத்தை ரத்து செய்தனர்.ரயில்களில் செல்லவிருந்தவர்களில் பலரும் பயணத்தை ரத்து செய்தனர். பதற்றமான சூழல் உருவாக வாய்ப்பு இருந்ததால், தமிழகம் - கர்நாடக இடையே வந்து செல்லும், 5,000 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல் : முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலியாக, வன்முறை வெடித்ததால், நேற்று மதியம் முதல், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன.தமிழகத்தில், 6,830 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், வார நாட்களில், நாள்தோறும் சராசரியாக, 67 கோடி ரூபாய்; சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், 80 கோடி ரூபாய் மதிப்பிற்கு மது வகைகள் விற்பனையாகின்றன.பெங்களூரு நீதிமன்றத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டது.உடனே, போலீசார், 'டாஸ்மாக்' கடைகளை மூடக் கூறினர். ஆனால், 'டாஸ்மாக்' அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால், ஊழியர்கள் கடைகளை மூடவில்லை. பின், நிலைமை மிகவும் மோசமானதால், மாவட்ட கலெக்டர்கள், 'டாஸ்மாக்' கடைகளை மூட உத்தரவிட்டனர்.இதையடுத்து, நேற்று, மதியம், 2:30 மணிக்கு மேல், 'டாஸ்மாக்' கடைகள் இயங்கவில்லை. பெங்களூருவை ஒட்டிய ஓசூர் நகரில் உள்ள, 25க்கும் மேற்பட்ட, 'டாஸ்மாக்' கடைகள், நேற்று காலை முதலே மூடப்பட்டன.

முதல்வரை பார்க்க தள்ளுமுள்ளு போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்:
பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்ற பின், அ.தி.மு.க.,வினரிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினரை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்திலிருந்து கார் மூலம், பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்றார். நீதிமன்றத்துக்கு முன்,2 கி மீ., தொலைவில், சாலையின் இரு ஓரங்களிலும், ஏராளமான அ.தி.மு.க.,வினர் கூடியிருந்தனர். அவர்களை, நீதிமன்றம் அமைந்திருக்கும் ரோட்டில் செல்லவிடாமல், போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர்.ஜெயலலிதா அங்கு வந்தவுடன், தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். போலீசாரை தள்ளிவிட்டு, முன்னேற முயன்றனர். இதையும் மீறி, போலீசார் அரணாக நின்று அவர்களை தடுத்து நிறுத்தினர்.ஜெயலலிதா கார் சென்ற பின்பும், தொண்டர்கள், அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். ஒரு கட்டத்தில், தடுப்புகளை துாக்கி வீசிவிட்டு செல்ல முயன்றனர். இதனால் போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தினர். இந்த களேபரத்தில், பலர் தலைதெறிக்க ஓடினர்.இச்சம்பவத்தில் ஒரு சிலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறிமிதித்ததால், காயமடைந்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.



கல்லுாரி நிர்வாகங்கள் குழப்பம்:




ஜெ., தீர்ப்பின் எதிரொலியால், அடுத்த வாரம் கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களை எப்படி நடத்துவது என புரியாமல் நிர்வாகிகள் கலங்கி போயுள்ளனர்.சென்னையில் தனியார் கல்லுாரிகள், வழக்கம்போல் நேற்று இயங்கின. ஜெ., சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு வெளியானதையொட்டி முற்பகல், 11:30 மணிக்கு பின், விடுமுறை அறிவித்தனர். மேலும், நேற்று மாலை நடக்க இருந்த பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டன.அடுத்த வாரம், பாரதி மகளிர்கல்லுாரி, செல்லம்மாள் மகளிர் கல்லுாரி உட்பட, பல்வேறு கல்லுாரிகளில் விழா நடக்கின்றன. அவற்றில், கல்வி துறைஅதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக,அழைப்பிதழ் அச்சடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அஞ்சல் செய்து விட்டனர்.இப்போது, நிகழ்ச்சிகளை எப்படி நடத்துவது என, புரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: