வெள்ளி, 19 செப்டம்பர், 2014

கோவை மாநகர தேர்தலை 50 சதவீதமான மக்கள் புறக்கணிப்பு !

கோவைக்கு என, ஏராளமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்த பின்னும், மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலை 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் புறக்கணித்திருப்பது, அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில், 46.53 சதவீதம் மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன; நகரிலுள்ள 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 வாக்காளர்களில், 6 லட்சத்து 580 பேர் மட்டுமே, தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதாவது, 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், இந்த தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.  தனது மிடாஸ வரும்படியிலிருந்து 2500 கோடி கோவை வளர்ச்சிக்காக அம்மா கொடுக்கப்போகிறாரே அதுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டாமா நன்றி கெட்டவர்களே ?/


வெளிமாவட்டத்தினரைக் கொண்டு வந்து தேர்தல் பணி செய்தது, பணப்பட்டுவாடா செய்த விதம் ஆகியவற்றால் ஆளும்கட்சியினர் மீது மக்கள் காட்டிய வெறுப்பின் வெளிப்பாடே ஓட்டுப்பதிவு வீழ்ச்சிக்குக் காரணம் என்கின்றனர் எதிர்க்கட்சியினர். பூத் ஸ்லிப் வினியோக குறைபாடு, நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லாதது தான் காரணம் என்கிறது, ஆளும்கட்சி தரப்பு.இரு தரப்பு கருத்துக்களிலும் கொஞ்சம் உண்மை இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்ததற்கு, தமிழக அரசு மற்றும் இங்குள்ள ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள் மீதான அதிருப்தியே காரணம் என்பதே, தொழில் மற்றும் சமூக அமைப்பினரின் கருத்து.லோக்சபா தேர்தலின்போது, மாநகராட்சிப் பகுதியில் ஆளும்கட்சிக்கான ஓட்டுக்கள் பெருமளவில் குறைந்ததன் எதிரொலியாகவே, முந்தைய மேயரை கட்சித்தலைமை ராஜினாமா செய்ய வைத்ததாகக் கூறப்பட்டது. கடந்த, மூன்று ஆண்டுகளாக, மாநகராட்சியில் எந்தவித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டே, இடைத்தேர்தலையும் அரசு அறிவித்தது.
அதற்கும் முன்பே, கோவை நகருக்கு 2,378 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் ஜெ., அறிவித்தார். கோவைக்கு நேரில் வந்து, மூன்று ஆண்டுகளில் நடந்த பணிகள் என்று பெரிய பட்டியலையும் வாசித்தார். தேர்தல் அறிவித்த நாளிலிருந்து, 20 அமைச்சர்கள், 100க்கும் மேற்பட்ட எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சித் தலைவர்கள், கோவையில் முகாமிட்டு, தேர்தல் பணி செய்தனர்.
எனினும், நேற்று நடந்த தேர்தலில், கோவை நகர மக்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு வரமுடியவில்லை என்பதே, ஆளும்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாகவுள்ளது. கடந்த கால் நுாற்றாண்டு கால தேர்தல் வரலாற்றில், இதுவே மிகக்குறைந்த ஓட்டுப்பதிவு சதவீதம்.ஓட்டுப்பதிவு குறைந்தாலும், தாங்கள் ஜெயித்து விடுவோம் என்பதில், ஆளும்கட்சியினர் பெரிதும் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், வரும் சட்டசபைத் தேர்தலின்போது, மாநிலம் முழுவதும் தேர்தல் நடக்கும்போது, இந்த கணக்கு செல்லுபடியாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
பெருமளவு மக்கள், தேர்தலைப் புறக்கணித்திருப்பதே, இந்த அச்சத்துக்குக் காரணம்.உண்மையில், பா.ஜ.,வுக்கு வாக்களித்தாலும், அவர்களால் 80 ஆளும்கட்சி கவுன்சிலர்களையும், மாநில அரசையும் தாண்டி எதுவும் செய்ய முடியாது என்பதை படித்த வாக்காளர்கள் நன்கு புரிந்துள்ளனர்.
அதனால், அவருக்கு வாக்களித்தும் பயனில்லை என்று, பா.ஜ., ஆதரவாளர்கள் பலரே, ஓட்டுச்சாவடிக்கு வருவதைத் தவிர்த்து விட்டனர். ஒரு வேளை, 'நோட்டா' வாய்ப்பு தரப்பட்டிருந்தால், இன்னும் பல லட்சம் பேர் வாக்களித்திருப்பார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக, கோவை மக்களின் கோரிக்கைகளையும், குமுறல்களையும் புறக்கணித்து விட்டு, கடைசி நேரத்தில் மேயரை ராஜினாமா செய்ய வைத்து, 2,378 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்ததையும் மக்கள் நம்பவில்லை.
கோவையைப் புறக்கணித்த அரசைப் புறக்கணிக்கும் விதமாக, இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்யாமல், மக்கள் வீட்டில் இருந்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இருக்கும் இரு ஆண்டுகளிலாவது, கோவைக்கு ஏதாவது செய்தால் மட்டுமே, இங்குள்ள மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும் என்பதே, ஆளும்கட்சியினருக்கு இந்த இடைத்தேர்தல் சொல்லியிருக்கும் ஒரே செய்தி.
பரிசீலிப்பாரா முதல்வர்?: கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின்போது, தி.மு.க.,வின் மீதான வெறுப்பே, அ.தி.மு.க.,வுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுடைய தகுதி எதையும், இங்குள்ள மக்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் ஜெயித்து, மக்கள் பிரதிநிதியான பின்பே, அவர்களின் தகுதி, அணுகுமுறை பற்றி மக்கள் அறிந்து கொண்டனர். இனியாவது, வேட்பாளர்களின் தகுதி, திறன் போன்றவற்றை அறிந்தே, வாய்ப்பளிக்க வேண்டுமென்பதே கோவை மக்கள் முதல்வருக்கு விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.
-நமது சிறப்பு நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை: