animal-iயக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன.
தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவலு பாடுவதாக மாறி விட்டது. சென்னை சபாக்களில் நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் கூட இடைவேளை கேண்டினின் கிச்சடி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகளே பேசு பொருளாக இருந்தன. யாரும் ராகங்களின் ஆலாபனை குறித்தோ, கலாச்சாரத்தில் அவுரோகணம் குறித்தோ கதைப்பதில்லை.

தமிழகத்திலேயே கோயில்கள் அதிகம் உள்ள ஊர் கும்பகோணம்தான். கும்பகோணத்துக்கு அதிகாலையில் போனால் ராமா, சோமா, காமா என்று பல வகை கடவுள் நாமங்கள் பாடப்படுவது கேட்கக் கிடைக்கும். கும்பகோணத்தில் கோயில்கள் மட்டுமில்லை, தெருநாய்களும் அதிகம். கோயிலில் வீசப்படும் பிரசாதங்களை தின்னும் டாபர்மேன் முதல் ராஜபாளையம் ஹன்டர் வரை எல்லா வகை நாய்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே நாய்க்கடி பட்டு மக்கள் மருத்துவமனைக்கு போவதும், மருந்து தட்டுப்பாடாக இருப்பதும் கும்பகோணத்தின் சிறப்பு. இதன்றி மகாமகம் வந்து ‘அம்மா’ வந்து குளித்தால் மரணமடையும் பக்தர்களின் கதை தனி.
இப்படிப்பட்ட கும்பகோணத்தில் படித்த ஷங்கரின் உலகம், ஃபேன்டசி எல்லாம் எப்படி இருக்கும் என்று வாசகர்களே யோசித்து படம் எடுக்கலாம்.
அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு 3,000 கோடி ரூபாய் சொத்து கிடைக்க 30 கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் செலவிட வேண்டும் என்றால், ஹோட்டலில் ரூம் எடுக்கிறார், சினிமா எடுக்கிறார், தேர்தலில் நிற்கிறார். இதற்கு மேல் தமிழ் சினிமா டைரக்டருக்கு யோசிக்கத் தெரியவில்லை. தனியார்மய சொர்க்கத்தில் ஹார்ட் அட்டாக் என்று அப்பலோவுக்கு போயிருந்தால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா என்று அனுப்பி செலவு செய்திருக்கலாம். இல்லை பத்து பேருக்கு பச்சமுத்து கல்லூரியில் டாக்டர் சீட்டு வாங்கித் தந்தால் கூட அம்சமாக செலவழித்திருக்கலாம்.
தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்திருக்கும் செட்டியாரின் தொலைதூரத்து விஷனே இந்த மாசம் 10 தாலி வரும், 20 அண்டா வரும், 30 குண்டா வரும் என்பதைத் தாண்டி போகாது. இதைத் தாண்டி மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ் போல ஆண்டுக்கு நமக்கு இத்தனை கோடி டாலர் வரும் என்றெல்லாம் செட்டியார்கள் யோசிக்க மாட்டார்கள்.  இதில் ப.சிதம்பரம் செட்டியாரை சேர்க்க கூடாது. அவரெல்லாம் இன்டர்னேஷனல் பிசினெஸ் மென். அவரையெல்லாம் காரைக்குடி அரண்மனை வீடுகளில் மட்டும் கட்டிவிட முடியாது.
ஐ படம்
சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராஜஸ்தான் சேட்டு நகரத்தில் எந்த பகுதியில் வட்டிக்கடை வைத்திருந்தாலும், 10 திருட்டு வாட்ச் வரும், 10 திருட்டு லேப்டாப் வரும், வளையல், தொங்கட்டான், மூக்குத்தி எத்தனை வரும் என்றுதான் பட்ஜெட் போடுவார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வேலை செய்யும் பார்ப்பன, முதலியார், கவுண்டர் அதிகாரிகள் இந்த மாசம் எத்தனை காண்டிராக்ட் கமிஷன், மணல் லாரி கும்பலிடமிருந்து 1 லட்சம் தேறுமா என்று கணக்கு போடுவார்கள். மிகப்பெரும் தரகு முதலாளிகளின் தொழில்களில் இருப்போர் மட்டும்தான் கோடி, மில்லியன், பில்லியனில் கணக்கு போடுவார்கள். பெரும்பான்மை தமிழக சமுதாயத்தில் இது சாத்தியமில்லை.
ஒட்டு மொத்த தமிழகத்தின் பட்ஜெட்டே இப்படி இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் போது தமிழ் சினிமாவில் மட்டும் ஷங்கரின் பெரிய பட்ஜெட் கிரியேட்டிவிட்டி, எப்படி இருக்கும்?
கும்பகோணத்தில் மோட்டுவளையை பார்த்து ராமா ராமா என்று கத்திய தியாகையரையும், அதைக் கேட்டு பதறி ஓடிய காக்கையையும் பார்த்து வளர்ந்த கலைகளின் ஊரில் ஷங்கர் எனும் கலைஞரின் சிந்தனை வரம்பு எவ்வளவு தள்ளுபடி கொடுத்தாலும் பிரம்மாண்டமாக வர வாய்ப்பே இல்லை.
இதற்குத்தான் எஞ்சினியரிங் படித்த, நானோ டெக்னாலஜி தெரிஞ்ச, மரைன் எஞ்சினியரிங் படித்த ஆட்களை தேடி உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். கூடவே இவர்களுக்கு நான்கைந்து மொழி, ஐந்தாறு டெக்னாலஜி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
அவர்களிடம் ஏதாவது ஹாலிவுட் படத்தை பார்த்து, எப்படி குரங்கு நாய்க்குட்டியா மாறுது, முதலை தண்ணிக்குள் சண்டை போடுது என்று கேட்கிறார். “அண்ணே இது கிராபிக்ஸ், கேமரூன், ஜார்ஜ் லூகாஸ் நம்ம ஸ்டூடியோவிலேயே பண்ணிரலாம்ணே. அதுக்கு மேட்சிங் ஒர்க் எல்லாம் பண்ணலாம்” என்கிறார்கள். இத்தனை கோடி செலவாகும் என்று பட்ஜெட் போடுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் சேர்ந்து படம் எடுக்க, தமிழ்நாட்டு முதலாளிகள், பத்திரிகைகள், நட்சத்திரங்கள் எல்லாரும் சேர்ந்து கும்பகோணம் சுண்டல் பார்ட்டியின் அந்தப் படத்தை அமெரிக்காவின் ரூ 3 லட்சம் மதிப்பிலான ‘மெகா’  ஃப்ளூயர் பர்கர் எனும் தின்பண்டமாக (fluer burger) ஜாக்கி கொடுத்து உயர்த்தி காட்டுகிறார்கள்.
ஃப்ளை, ஐ
இன்ன பத்திரிகையிலிருந்து இன்ன பத்திரிகையாளரை கூப்பிடு, இத்தனை பேருக்கு கவர் போடு, பத்திரிகையில் மூணு காலம் விமர்சனம் போட முடியாதவன்னு தெரிஞ்சவனை உள்ள விடாதேன்னு பத்திரிகைகளை கவர் பண்ணுகிறார்கள். இதுதான் ஷங்கர் படத்தின் பிரம்மாண்டம் பற்றி பத்திரிகைகளில் வரும் ஆகோ, ஓகோ செய்திகள், விமர்சனங்களின் மூலம்.
தமிழ்நாட்டில் சங்கரராமனை கொலை செய்த ஜெயந்திரன் கைது செய்யப்பட்ட அன்றே, என்ன இருந்தாலும் அவாதான் எங்களுக்கு லோககுரு என்று பூணூல் தெரிய டிவியில்பேட்டி கொடுக்கும் எஸ்விசேகரின் அறம்தான் ஷங்கர் படங்கள் பேசும் அரசியலின் அடிப்படை. பிறகு கும்பகோணம் பார்ட்டி புரட்சி பற்றியா பேசும் ?
முதல் படம் ஜென்டில்மேனிலேயே நல்ல மார்க் வாங்கிய பார்ப்பன மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கவில்லை என்பதாலேயே பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து பணம் கட்டி அவரை தனியார் கல்லூரியில் படிக்க அனுப்புகிறார். ஐஐஎம் ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படும் காலத்தில் ஒரு பார்ப்பன இளைஞருக்கு எம்பிபிஎஸ் சீட் இல்லை என்றதும், தனி ஒரு பார்ப்பானுக்கு உணவு இல்லை என்றால் உலகத்தையே அழித்து விடுவதாக அர்ஜுனை வைத்து கொலை செய்யச் சொன்னவர் இந்த இயக்குநர்.
1996-ல் ஜெயா-சசி கும்பல் ஊழலால் தமிழகத்தையே மொட்டையடித்து கொண்டிருக்கும் போது, ஊழல், ஆணவம், அராஜகம் கொடி கட்டி பறந்த காலத்தில் கும்பகோணம் கருப்பு பிராமணன் ஷங்கர் ஆர்.டி.ஓ ஆபிசில் துட்டு வாங்கும் புரோக்கரை வில்லனாக்கி படம் எடுக்கிறார். கிராஃபிக் வொர்க்குக்காக அமெரிக்காவுக்கு போனவர், ஊழல் என்பதை காட்ட ஆர்.டி.ஓ ஆஃபிசில் நிறுத்தி விட்டார், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போகவில்லை, போயஸ் கார்டனுக்கும் போகவில்லை.
முதல்வன் படம் எடுக்கும் போது, முதல்வராக இருந்த கருணாநிதியை கிண்டல் செய்து படம் எடுத்ததால் தென் மாவட்டம் முழுக்க மகன் அழகிரியே கேபிள் டிவியில் ஓட்டி ரிலீஸ் செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு பம்மியிருந்த சங்கர் கருணாநிதி முன் வீரம் காட்டினார். பையனின் அடாவடியின் முன்பு சங்கர் அண்ணன் பயந்து விட்டார். அதைக் கண்டித்துக் கூட வெளிப்படையாக பேசவில்லை.
சென்ற ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் கண்டனத்தை எதிர்கொண்டது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய பாலியல் வன்முறை குற்றங்கள் பல மடங்கு அதிகரிக்க ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில், இத்தகைய செயல்களுக்கு எதிராக ஆண்கள், இளைஞர் மத்தியில் குற்றவுணர்வையும் பரிசீலனையையும் ஏற்படுத்தாமல், பெண்கள் மீது ஆசிட் அடித்தால்தான் தப்பு, கூட்டத்தில் கையைப் போடுவது இயல்புதான் என்று படம் எடுத்தவர் ஷங்கர். அதுதான் ‘பாய்ஸ்’.
ஆனந்த விகடனில் சீ என்று விமர்சனம் எழுதினார்கள். விளையாட்டா சொன்னதை சீரியசா எடுத்திருக்கிறார்கள் என்று இத்தகைய எதிர்ப்புகளுக்கு பதில் கூறினார் ஷங்கர். இந்த படத்திற்கு முன்னாடி விளையாட்டாக பேசியதை சீரியசா எடுத்துக் கொண்டீர்கள், இப்போது கொஞ்சம் விளையாட்டாக பார்க்கலாமில்லையா என்பது அவரது உட்கிடை.
ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயம் எல்லாம் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால், உலக அதிசயத்தை பிரசாந்தை ஆடவிட்டு டூயட் பாடல் எடுக்கத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஐஸ்வர்யாதான் எட்டாவது அதிசயம் என்று ஏனைய அதிசயங்களை என்கவுண்டர் செய்தார்.
அன்னியன் படத்தில் ரயில்வே கேன்டீனில் தரக்குறைவான உணவு கொடுத்த காண்டிராக்டரை எண்ணெயில் வறுத்து கொல்கிறார். அன்னியன் படம் வெளியான 2005-ல் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு கையில் ஒட்டியிருக்கிற குருணை சாதத்தை நக்கி சாப்பிடுகிற அம்பிக்களுக்குக் கூட மாட்டுக்கறி சாப்பிட்டவரை போல நாமும் சமூக அநீதிகளுக்காக பயங்கரமாக போராடுகிறோம் என்ற ஃபீலிங்கை அந்த படம் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.  அந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பம் கொடூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது. ஜெயலலிதா தாமிரபரணி ஆற்றை கோக் நிறுவனத்துக்கு தாரை வார்த்திருந்தார்.
பொருநை நீரை அமெரிக்க கோக்குக்கு தாரை வார்த்த ஜெயலலிதாவுக்கு தண்டனையாக சகாரா பாலைவன மணற்பரப்பில் உழுது பயிரிட்டு நெல் விளைவிக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பதாக படம் எடுக்கவில்லை. கயர்லாஞ்சி இருக்கும் மகாராஷ்டிராவில் ஆதிக்க சாதியினரை திரட்டி, மதவெறி சாதிவெறி அரசியல் செய்யும் பால் தாக்கரேயின் ஆண் உறுப்பில்  ஸ்ரீகிருஷ்ணா இனிப்பைத் தடவி பெருச்சாளியை கட்டி வைத்து அனகோண்டாவை விட்டு கடித்து கொல்வது போல படம் எடுத்திருந்தால் ஷங்கரை செல்லூலாயிட் போராளி என்றாவது ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். சாலையில் துப்பியவனையெல்லாம் கொல்லும் வெறி ஏன் வருகிறது என்றால் ஒரு அக்மார்க் ஆதிக்கசாதி மேட்டுக்குடியினருக்கு இவைதான் பிரச்சினைகள். பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறை அதில் உள்ள அநாகரீகங்கள் என்று இவர்கள் கருதிக் கொள்பவைதான் பெரும் தலைவலிகள். ஷங்கர் அதில் முனைவர் பட்டம் செய்தவர்.
சுயநிதி கல்லூரி கொள்ளையர்கள் சாராய உடையார்கள், பச்சமுத்து, ஜேபிஆர் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலிருந்து வந்த என்.ஆர்.ஐ. ரஜினி தனியார் கல்லூரி ஆரம்பிப்பதாக எடுத்த படம்தான் சிவாஜி. ரஜினி வழுக்கை, வெள்ளை, டான்ஸ் என்றுதான் மயங்கினார்களே தவிர இந்த சுயநிதி கொள்ளையர்களைப் பற்றி யாரையும் அந்தப் படம் யோசிக்க வைக்கவில்லை.
மயிலாப்பூர் கச்சேரி ரோடு பார்ப்பனர்கள் எஸ்.வி.சேகர் கடி ஜோக்கை சொல்லி காலத்தை ஓட்ட முடியாது என்று தெரிந்ததும், அப்டேட்டாக ஏதாவது அமெரிக்க நகைச்சுவைகளை அவிழ்த்து விடுவது போல, தன்னுடைய பெரிய பட்ஜெட்டுக்கு ஏத்த ரேஞ்ச் வேண்டும் என்று எந்திரன் எடுக்கிறார். அதை எங்கிருந்து சுட்டார் என்று உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு, எந்திரனில் 100 கோடி ரூபாய்க்கு தனது சாம்ராஜ்யம் விரிந்த பிறகு, கும்பகோணம், மயிலாப்பூரில் அவரது கால் இருந்தாலும் கண்ணும் காதும் உலகம் முழுக்க பார்க்க ஆரம்பித்து அடுத்த படத்துக்கு 200 கோடியில் பட்ஜெட் போடுகிறார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். இன்னும் எத்தனை நாள் பான் பராக் துப்பியதற்கு தண்டனை என்று படம் எடுப்பது. தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தாலும் தஞ்சை விவசாயிகள் முதல், தாமிரபரணி தண்ணீர் விலை போவது, கல்வி தனியார் மயம் என்று பார்க்க பயப்படும் ஷங்கர் தனது தகுதி வாய்ந்த அசிஸ்டண்டுகளை ஏவி ஐடியாக்களை திரட்டுகிறார்.
1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஹீரோ. அந்த சோதனையில் தன்னையே உட்படுத்திக் கொண்ட போது, அனுப்பும் தளத்தில் ஒரு ஈயும் சேர்ந்து விட, ஹீரோ மனிதனும், ஈயும் சேர்ந்த கலப்பினமாக மாறி விடுகிறார். அதனால் அவரது உடம்பிலும், முகத்திலும் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மனிதனாக மாறுவதற்கான போராட்டங்கள், இடையில் காதலியுடனான பிரச்சனைகள் என்று படம் போகிறது.
இந்தப் படம் பற்றி ஷங்கர் கேள்விப்படுகிறார். மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். இதை முழுமையாக காட்டாவிட்டாலும் படத்தின்  பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார். அதையே தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கதை கட்டியிருக்கிறார். எத்தனை நாள் அப்பள வியாபாரத்தையே காட்டுவது, இப்போது ஐடி காலத்தில் எது சீசன் என்று ஆள் வைத்து யோசித்திருப்பார். இப்படித்தான் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக மாறுகிறார். சங்கரும் 2014-க்கு அப்கிரேட் ஆகிறார்.
ஐ படத்தின் டீசர் பிரிவீயு பார்த்த பத்திரிகையாளர்கள் அது ஹாலிவுட்டின் ஹல்க் படம் போல இருப்பதாக சொன்னார்களாம். அது ஹல்க் படம் இல்லை என்று சங்கர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் பத்திரிகையாளர்களின் லட்சணம். தமிழ் சினிமா தரும் கவர் மூலம் தமிழ்நாட்டை இவர்கள் தமது கவரேஜில் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்.
ஷங்கர் இந்தப் படத்தின் கதையாக சொல்லியிருப்பது, ஆண் மாடலுக்கு வில்லன் மருந்து செலுத்தி விலங்கு மனிதனாக மாற்றுவது என்று போகிறது. அதில் கூட, குறைவு இருக்கலாம். அடிப்படையில் பல காட்சிகள் ஃபிளை படத்திலிருந்து வருகின்றன. டிரெய்லரை பாருங்கள்.
இணையத்தில் பார்க்க கிடைத்தவை படி இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக போராடி வெற்றி பெறுகிறார். பொறுக்காத போட்டி விளம்பர வில்லன் நடிகர் வைரஸ் கிருமி மருந்தை விக்ரம் உடலில் செலுத்துகிறார். விக்ரம் உடல் மாறுகிறது. அதையே அதிகமாக காட்டினால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள், ஃபேமிலி சப்ஜெக்டாக மாற்ற முடியாது என்பதால் அசிங்கமான விக்ரமை வைத்து பல்வேறு ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் பாடல்கள் என்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். இறுதியில் விக்ரம் தனது சிக்ஸ் பேக் உடலை திரும்பப் பெற்று வில்லனை வீழ்த்தி நாயகியை கைபிடிப்பார் என்பது இனி பிறக்கும் குழந்தை கூட அறியும் அற்ப விசயம்.
இதை ஒரு மாபெரும் படம் போலவும், புதுமை போலவும் பல்வேறு இணைய மொக்கைகள் போடும் கச்சேரிதான் இதில் உள்ள மகா மட்டமான விசயம்.
உழைப்பதற்கு ஏற்ற ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டிய உடலை பார்ப்பதற்கு மட்டும் அழகான உடலாக மாற்றிய முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்தின் வக்கிரத்தை ஏற்றுக் கொள்ளும் உணர்ச்சிதான் ஐ-யின் மையம். மாறுபடும் மனிதர்களின் நிறம், தோற்றத்தை அவலட்சணமாக மாற்றியிருக்கும் முதலாளித்துவத்தின் அழகு சாதன முதலாளிகளை ஆராதிக்கும் படத்தின் கதையை கொண்டாடுவது என்ன விதத்தில் சரி?
fly-i-1
ஆசிட் வீச்சிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் அங்கங்களை இழக்கும் மனிதர்களை இப்படம் எப்படி பார்க்கிறது? யானைக்கால் வியாதி கொண்டோர், இதர  நோய்களால்’விகாரத்’ தோற்றம் கொண்டோரெல்லாம் ஏழைகளின் பகுதியில் இயல்பாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் மயிலாப்பூர் பகுதிகளில் அந்த உணர்வு எப்படி இருக்கும்? விடை வேண்டுவோர் ஐ படம் பார்க்கலாம். ஷங்கரின் கலை உலகு பற்றி அறிந்தவர்கள் காறித்துப்பலாம். vinavu.com