வெள்ளி, 18 ஏப்ரல், 2014

மோடி வலை, ரஜினி / விஜய் அலை வரலாறு காறித் துப்பப் போகின்ற புகழ்மிக்க இந்த சந்திப்புகள்! (குமுதம் மாமாவா இருக்குமோ)

காலம் கெட்டுப் போச்சே என்று எல்லாரும் சோர்வடையலாம். இருப்பினும் கலிகாலத்தை கலியுகமென்று ஒன்றுக்கு இரண்டாய் ஜபித்து சாபமிடுவார்கள் அக்ரகாரத்து இந்துக்கள். மற்ற மக்களுக்கு திரேதா யுகமும் தெரியாது, துவாபர யுகமும் புரியாது. யுகம் குறித்த அறிவிலேயே அக்ரகாரத்தை தாண்டிய ‘இந்துக்கள்’ இவ்வளவு வீக்காக இருப்பது ஒரு பிரச்சினை ஆனால் யுக அறிவில் மட்டுமல்ல, ‘யுக புருஷர்’களையும் உற்பத்தி செய்யக் கூடிய அக்ரகாரத்தின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்-ஸே, இனி கலியுகத்தைப் பழிக்க முடியாது. ஷாகாவில் முனிபுங்கரர்களையும், ரிஷி பத்தினிகளையும் நினைவு கூர்ந்த ஸ்வயம் சேவகர்கள் இனி சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய தளபதி விஜய், கவர்ச்சி புயல் மேக்னா நாயுடு போன்ற நவீன கலை முனிக்களையும், கவர்ச்சி கன்னிகளையும் போற்றி பாட வேண்டும் இதனால் அந்தக் கால முனிவர் கூட்டம் யோக்கியமென்று நாம் சொல்லவில்லை. எது எப்படியோ, விஜய் ரசிகர்களும், ஸ்வயம் சேவக ‘ஜீ’க்களும் சகோதரர்களாக மாறிவிட்ட பிறகு, குத்தாட்டம் சிறுமை, பரதம் பெருமை என்று சங்கு ஊத முடியாதல்லவா? இதனால் இளைய தளபதியின் ரசிகர்கள் மட்டமானவர்கள் என்று பொருளல்ல. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை விட விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் மேலானவர்களே!

ரஜினியை சந்தித்து கேவலத்திற்கு மேல் கேவலப்பட்டாலும், கூச்சப்படாமல் அதைப் பெருமையாக பேசுமளவு பாஜக, மோடி கும்பலுக்கு வாக்கு வெறி வகை தொகையில்லாமல் அதிகரித்து வருகிறது. ரஜினி வீட்டில் 40 நிமிடம் இருந்த மோடி பத்து நிமிடம் கோச்சடையான் டிரைலர் பார்த்திருக்கிறார். அடுத்த பத்து நிமிடம், “அங்கிள் இது இந்தியாவிலேயே ஃபர்ஸ்ட் மோஷன் கேப்சர் டெக்னாலஜி” என்று ஐஸ்வர்யா உதவியாளர்கள் உதவியோடு வகுப்பெடுத்திருக்கிறார். பொது அறிவில் ஜூனியர் புஷ்ஷோடு போட்டியிடும் கோழி மாக்கான் மோடிக்கு மோஷன் என்பது ஏதோ நல்ல பாய்சன் என்றே புரிந்திருக்கும். அடுத்த பத்து நிமிடம் குடும்பத்தினருடன் ஃபோட்டோ செஷன். பிறகு பத்து நிமிடம் மோடி கெஞ்ச, ரஜினி அஞ்ச வெளியே இருந்த ஊடக குழுவினருக்கு மாம்பழ ஜூஸும், மோரும் வழங்கி சூட்டைத் தணித்து அறிக்கை கொடுத்து கவனித்தார்கள்.
மோடி வலை, ரஜினி அலை என்று ஜூவி எதிர்பார்த்தபடியே கவர் செய்திருந்தாலும் சுருதி பேதமாக அது எடுபடவில்லை. இதனால் இளைய தளபதிக்கு இளம் ரசிகர்கள் அதிகம், அவரை மீட் பண்ணினால் வோட்டுகளை அள்ளலாம் என்று (குமுதம் மாமாவா இருக்குமோ) ஏதோ ஒரு மாமா யோசனையில் இந்த விஜய்-மோடி சந்திப்பு நடந்தேறியிருக்கிறது.
ஆனால் நாம் இதில் புதிதாக எதுவும் எழுதத் தேவையில்லை. போயஸ் தோட்டத்தில் ரஜினி எப்படி மோடியின் மானத்தை வாங்கினாரோ அதே மொழியில் தான் விஜயும் வாங்கியிருக்கிறார். எப்படி இருவருக்கும் ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட் எழுதித் தயாரித்திருக்கிறார்கள், தெரியவில்லை. ரஜினி வீட்டிற்கு போய் பிச்சை கேட்ட மோடி, விஜயை மட்டும் நட்சத்திர விடுதிக்கு வரவழைத்து பிச்சை கேட்டிருக்கிறார். தானத்தில் சூப்பர் ஸ்டார் போட்ட அதே எச்சக்கலையைத்தான் விஜயும் போட்டிருக்கிறார். ஆனாலும் மகனே, இதற்கே உனக்கு தனியாக மக்கள் சுளுக்கெடுப்பார்கள், இருடி!
இனி வரலாறு காறித் துப்பப் போகின்ற புகழ்மிக்க இந்த சந்திப்பு 15 நிமிடமென்றும், பத்து நிமிடமென்றும் ஊடகங்களில் வந்திருப்பதிலேயே இந்த சந்திப்பு சில பல விநாடிகளுக்கு மேல் நடந்திருக்காது என்றே தோன்றுகிறது. தொலையட்டும், அந்த சந்திப்பு குறித்து விஜய் கூறியதாவது,
“ரொம்ப சாதாரண ஆளான என்னையும் மதித்து குருஜி நரேந்திர மோடி என்னை சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சென்ற முறை அவர் சென்னைக்கு வந்தபோது என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தமையால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை.
மீண்டும் கோயம்புத்தூர் வருகை தரும்போது என்னை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். எனவே கோயம்புத்தூரில் வைத்து இன்று நான் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இந்திய நாட்டின் மரியாதைக்குரிய தலைவர் என்னை சந்திக்க வேண்டும் எனக் கேட்டதே எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அவரை சந்தித்த போது என்னிடம் அன்போடும், எளிமையாகவும் பேசினார்.
அவர் என்னிடம் என்னுடைய 21 வருட சினிமா வளர்ச்சியையும், அது சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களையும் பேசினார். நாட்டின் முக்கியத் தலைவர் என்னைப் பற்றி இந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.
நாங்கள் எந்த அரசியல் நோக்கத்தோடும் சந்திக்கவில்லை. அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை.”
இதுதான் நடிகர் விஜய் கூறிய வார்த்தைகள்.
இளைய தளபதியைப் பார்க்க வேண்டும் என்று கோரியது வருங்கால பாரத பிரதமர் என்று வாய் வலிக்காமல் சங்க வானரங்களால் ஊளையிடப்படும் சாட்சாத் மோடிதான். தமிழ் சினிமாவில் கொக்கர கொக்கரக்கோ, கோழி கொக்கரக்கோ என்று படத்திற்கு படம் ஜீன்ஸ் பேண்டுகளை நம்பி மட்டும், தனது ‘நடிப்பு’த் திறனை காட்டும் ஒரு நடிகரை பார்த்துத்தான், தனது காவிக்கொடி மகத்துவத்தை பட்டொளி வீசி பறக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் மோடி கேங்க் இருக்கிறது.
அதிலும் முதல் முறை அழைப்பு வந்த போது விஜய் மறுத்திருக்கிறார். அதன் பிறகு மிரட்டலா, டீலா, லோலா ஏதோ ஒரு லாவால் கோயம்புத்தூரில் சந்தித்திருக்கிறார். சென்னை வந்த மோடி அழைத்தாலும் அதை விட தனது படப்பிடிப்பு முக்கியம் என்று டிமிக்கி கொடுத்ததையும் விஜய் போல்டாக பதிவு செய்திருக்கிறார். இதெல்லாம் தெரிஞ்சு பேசுறாய்ங்களா, தெரியமா பேசுறாய்ங்களான்னு ஒரு டவுட்டு இருக்கு என்றாலும் காக்கி டிராயர் கூட்டத்திற்கு கிடைத்த அவமானம் அவமானம்தான். பாபர் மசூதியை அவமானச் சின்னம் என்று அபாண்டமாக இடித்த கூட்டத்திற்கு விஜய் எனும் காமடி பீஸ் மூலம் வரலாறு பழிவாங்கியிருக்கிறதோ?
இந்த சந்திப்பில் அரசியல் நோக்கமில்லை, அரசியல் பேச்சு இல்லை, அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று சிக்ஸ் பேக்குக்கு மேலே இருக்கும் டபுள் நெஞ்சில் ஒன்றுக்கு மூன்று முறையாக அடித்து சத்தியம் செய்கிறார் விஜய். அம்மான்னா சும்மாவா!
ஓடு தலைவா ஓடு‘ என்று புரட்டி புரட்டி அடிபட்ட வடு மறைந்து விடுமா என்ன? அதனால்தான் ரஜினி பேசியது போல மோடி நினைப்பது நடக்கட்டும் என்று கூட விஜயால் பேச முடியவில்லை. மாறாக அவரது 21 வருட சினிமா வாழ்க்கையை பற்றித்தான் மோடி பேசினார் என்று உண்மையை உடைத்திருக்கிறார். அப்படி என்ன பேசியிருப்பார்கள்?
சங்கவி எனும் நடிகையை கவர்ச்சி காட்டி ரசிகர்களை வரவழைத்து மகனுக்கு வாழ்வு தர முயன்ற அப்பாவின் பாசப் போராட்டத்தைப் பற்றியா? செந்தூரப் பாண்டியில் காப்டன் அருளால் சாதா ஹீரோவான விபத்தை பற்றியா? தலைவா படத்திற்காக அவர் நடத்திய ‘ஜனநாயகப்’ போராட்டத்திற்கு பின் நவீனத்துவ அறிவாளிகளே ஆதரவு கொடுத்தும், எல்லாம் அம்மா அருளுடன் தீர்ப்பார் என்று பின் நவீனத்துவத்தை காமடியாக்கிய கதையைப் பற்றியா?
மோடி பேசிய அதே ஜெயின் கல்லூரி திடலில் பிறந்த நாள் நலத்திட்டங்கள் எனும் ஷோவை நடத்த முடியாமல் போன அவலத்தைப் பற்றியா? அம்மாவோடு சிக்கல் ஏற்படுத்திய அப்பாவை மட்டும் தைரியமாக ஓட்டியது பற்றியா?  இல்லை விஜய் உடான்சாக இருந்தாலும் நன்றாக டான்ஸ் ஆடி எல்லா டான்ஸ் மாஸ்டர்களிடமும் பாராட்டுப் பெற்றதைப் பற்றியா?
சிநேகா அக்காவின் சினிமா வாழ்க்கை வரலாற்று ஆல்பத்தை பரிசாக கொடுத்த அங்காடித் தெரு ‘கருப்பன்’ போல விஜய்யின் சினிமா வாழ்க்கை, அதில் நடித்த நாயகிகள், குத்தாட்டப் பாடல் நடைபெற்ற வெளிநாட்டு ஸ்தலங்கள் என அத்தனையையும் மோடி உருப்போட்டு வந்து பேசியிருக்கிறார். இதற்குத்தான் தன்னைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாரே என்று விஜய் ஆச்சரியப்படுகிறார்.
பாருங்கள், மோடி அருணாச்சல் பிரதேசத்தில் சீனாவுக்கு சவால் விடுகிறார்,  கோயம்புத்தூரில் காஜலின் கூகிள் தேடிப் பார்த்தேன் பாட்டு பற்றி விசாரிக்கிறார், இவரல்லவா சதாவதானி. போடா பேமானி!
மோடியின் ஆளுமையில் கொடூரம், சதி, மூர்க்கம், அடாவடித்தனம் போன்று கலையும், காமசூத்திராவும் கூட இருக்கலாமே? எல்லாம் இந்து ஞானமரபின் அங்கம் எனும் போது பங்கம் ஏது?
இதைத்தாண்டி விஜய் சொன்ன குருஜி  எனும் வார்த்தை மோடிக்கு மகிழ்ச்சியை வரவழைத்திருக்குமா, சந்தேகம்தான். ஏனென்றால் அவரது குருஜி ஆஸ்ராம் பாபு, காம சூத்திராவின் பாவங்களுக்காக சிறையில் கம்பி எண்ணும் போது, சீடனுக்கு குருஸ்தானம் கசக்கத்தானே செய்யும். ஆனாலும் அணில் எதற்கு குருஜி என்று கூறியது? இது தற்காலத்திய தமிழ் சினிமாவின் மொழி. இங்கே ‘ஜி’க்களும், ‘குருஜி’க்களும் சகஜம்.
அம்மாவென்றால் அடி முதல் முடி வரையும், முடியைத் தாண்டி சீலிங் வரையும் நடுங்கும் விஜய், எப்படி மோடியை சந்தித்தார் என்ற கேள்வி எழலாம். என்ன இருந்தாலும் ஒரு அணில், ஒரு நரியை சந்திப்பது என்பது யதார்த்தமில்லை அல்லவா? எப்படி அம்மா, தாமரை கட்சியை விமரிசிக்காமல் இருக்கிறாரோ, அதே காரணங்களை வைத்து பாஜகவையோ, மோடியையோ பார்த்தால் ஜெயா எகிற மாட்டார். அதே நேரம் நாளை ஒருக்கால் பாஜக ஆட்சி அமைக்கவில்லை, அதிலும் அம்மா கட்சிக்கு பங்கில்லை என்றால் அணிலுக்கு சுளுக்கு எடுப்பது உறுதி.
ஒரு வேளை ஆட்சி அமைத்து விட்டால், அடுத்த படத்திற்காக அணில் கொடநாட்டுக்கு அனுமதி வேண்டி இருமுடி கட்டி பாத யாத்திரை போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏதோ கொஞ்சம் பிழைத்துப் போகட்டும் என்று போயஸ் தோட்டத்து செக்யூரிட்டிகள் விட்டு விடுவார்கள். இல்லை, நான் அரசியலே பேசவில்லை, இனி எங்கேயும், எப்போதும் அரசியலை பேச மாட்டேன், பஞ்ச் டயலாக் வைக்க மாட்டேன் என்று ஏற்கெனவே கொடுத்த சத்தியத்தை இதுவரை மீறவில்லை, இனியும் அப்படித்தான் என்று ஒற்றைக் காலில் தவமிருக்க வேண்டியதுதான்.
ஏற்கெனவே ராகுல் காந்தியை பார்த்தும் ராகு காலம் முடியவில்லை என்பதால் இப்போது மோடியை பார்த்திருக்கிறார் விஜய். இது எம கண்டம் என்று அவருக்கு தெரியாது.
மோடி கும்பலைப் பொறுத்த வரை எத்தனை கேவலங்கள் வந்தாலும் பிரபலங்கள், அதிலும் சினிமா பிரபலங்களை வைத்து கட்சியின் செல்வாக்கைக் கூட்டிக் கொள்ளலாம் என்று எல்லா வகை பிச்சைகளுக்கும் தயாராகி விட்டார்கள். என்றாலும் ஒரு கொலைகாரனை இப்படி அங்கீகரிப்பது என்ற அளவில் ரஜினியோ, விஜயோ செய்து வரும் இந்த அயோக்கியத்தனங்களை கண்டித்து தமிழ் சினிமாவில் எந்த ஒரு நபரும் கண்டிக்கவில்லை. ஈழம், காவிரி என்றெல்லாம் தமிழ் உணர்வு பிலிம் காட்டும் இந்த கும்பல், சிறுபான்மை மக்களைக் கொன்ற தலைவனுக்கும், நாட்டில் பாசிசத்தை கொண்டு வரும் கட்சிக்கும் பல்லக்கு தூக்குகிறது.
மோடி கும்பல் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்த தமிழ் சினிமா கும்பல் அதன் கலை தூதர்களாக இருந்து தமது தொழிலைப் பாதுகாத்துக் கொண்டு, தமிழக மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் நியாயங்களை பேசும் படங்களாக வெளியிடும்.
ஆகவே லேடிக்கு ஜால்ரா போட்ட இந்த செல்லுலாய்டு கும்பல் தற்போது மோடிக்கும் சேர்த்து போடுகிறது. மோடியை வீழ்த்துவதற்கு இந்த மோசடி நட்சத்திரங்களையும் அம்பலப்படுத்த வேண்டும். vinavu.com

கருத்துகள் இல்லை: