திங்கள், 14 ஏப்ரல், 2014

கடும் அதிருப்தியில் விஜயகாந்த்? ரஜினிகாந்த் வீட்டுக்குப் போன மோடி !


சென்னை: நடிகர் ரஜினிகாந்தை பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு தேடிப்போய் சந்தித்ததில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான நடிகர் விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று சென்னைக்கு வந்த நரேந்திர மோடி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு இருவரும் அரை மணிநேரம் சந்தித்து பேசினர். பின்னர் பிரசாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார். ஆனால் பாரதிய ஜனதாவின் இந்த ரஜினியை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த் ரசிக்கவில்லையாம். கடந்த சனிக்கிழமையே உடல்நிலை சரியில்லாததால் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் விஜயகாந்த்.  ரஜினி- மோடி சந்திப்பு நடந்த போது சென்னையில்தான் இருந்திருக்கிறார். ஆனால் இதுபற்றியெல்லாம் பாஜக தலைவர்கள் முறைப்படி அவருக்குத் தெரிவிக்கலையாம்.. அத்துடன் "தமிழகம் முழுவது மோடியை பிரதமராக்குங்கள் என்று பிரசாரம் செய்து வருகிறவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரை நேரில் சந்திக்காமல் ரஜினிகாந்தை எப்படி சந்தித்து பேசலாம்" என்பது விஜயகாந்தின் கோபமாக இருக்கிறதாம். அதேபோல் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் நீண்டகாலமாக மோதலை கடைபிடித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த விவகாரத்தில் அப்செட் ஆகிவிட்டதாம். இருந்தாலும் அன்புமணி நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதால் அந்த அப்செட் தற்காலிகமானதாக இருக்கும் என்கின்றனர் பாஜக வட்டாரங்கள்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: