வியாழன், 20 மார்ச், 2014

அழகிரியிடம் சமாதானம் பேசிய ரஜினி... அழகிரி அமைதி காப்பதன் பின்னணி!

திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால்தான் முக அழகிரியை தன் வீட்டுக்கு அழைத்து ரஜினி சமரசம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் போயஸ் கார்டன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்திப்பு அரசியல் உலகில் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் அதற்கு முன்புதான் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்திருந்
அழகிரியிடம் ரஜினி என்ன பேசியிருப்பார் என பலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டனர். ஆனால் அழகிரியோ நாங்கள் அரசியல் பேசவில்லை. ஒரு அண்ணன் தம்பி சந்திப்பு மாதிரி இது அமைந்தது. ரஜினியும் அப்படித்தான் சொன்னார். அவரிடம் பேசிவிட்டு வந்த பிறகுதான் மனசு நிம்மதியாக இருந்தது, என முக அழகிரி தன் ஆதரவாளர்களிடம் பேசினார்.
ஆனால் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவரே கருணாநிதிதான் என்ற ரீதியில் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, 'அழகிரியை எப்படியாவது சமாதனப்படுத்துங்கள். நீங்கள் சொன்னால் அவர் கேட்பார். தேர்தல் முடிந்ததும் நானே அழகிரி - ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்,' என்று ஒரு பிரமுகர் மூலம் ரஜினியிடம் கேட்டுக் கொண்டாராம்.
பொதுவாக அழகிரியை கூல் பண்ணும் வேலை பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராச்சாமி அல்லது தாயார் தயாளு அம்மாள் ஆகியோர்தான் இத்தனை காலமும் செய்து வந்தார்களாம். இப்போது மூவருமே வயோதிகத்தால் பாதிக்கப்பட்டு பேசும் நிலையில் இல்லையாம். அதனால் அவர்களின் பொறுப்பை ரஜினிக்கு தந்திருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியுடன் நல்ல நட்பில் உள்ள ரஜினி இதற்கு ஒப்புக் கொண்டதோடு, அழகிரியை வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். உடனே டெல்லியிலிருந்து தன் மகன் துரை தயாநிதி, நண்பர் கேபி ராமலிங்கத்தோடு போயஸ் கார்டனுக்கு வந்தார் அழகிரி.
அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்த ரஜினி, "அப்பா பேசினார். 'அழகிரியின் ஆதங்கமும் கோபமும் புரிகிறது. அவரை எம்.பி.தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு நான் ஸ்டாலினிடம் பேசி ஒரு நல்ல முடிவிற்கு வருகிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.
இதுபோன்ற தேர்தல் நேரத்தில், நீங்கள், மீடியாக்களிடம் தி.மு.க. தலைமையை விமர்சித்துப் பேசி வருகிறீர்கள் என்பதோடு, காங்கிரஸ், பி.ஜே.பி. தலைவர்களையும் சந்தித்து கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் அப்பாவின் ஆதங்கம். இதனால் அவர் கடந்த மூன்று நாட்களாக சரியாக தூங்கமுடியாமல் தவிக்கிறாராம்,' என்று தனக்கே உரிய பாணியில் சொல்ல, அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம் அழகிரி.
அப்போது துரை தயாநிதி, " எங்க பாட்டி, தாத்தா பேச்சை அப்பா என்னைக்கும் மீறியதே இல்லை. அப்படிப்பட்ட எங்க அப்பா, "ஸ்டாலின் இன்னும் மூன்று மாதம்கூட இருக்கமாட்டார்' என்று சொன்னதாக, ஒரு பெரும் பழியை அப்பா மீது தாத்தா சுமத்தினார். இதைக் கேட்டதிலிருந்து எங்க அம்மா உடல் நலம் சரியில்லாமல் படுத்துவிட்டார். எங்கள் குடும்பத்தின் நிம்மதியே பறிபோய்விட்டது அங்கிள்' என்றாராம் அழுதபடி. அழகிரியும் கலங்கிவிட்டாராம்.
இதைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ரஜினி, "யெஸ்... அந்தப் பேட்டியை நானும் டி.வி.யில் பார்த்தேன். அது குறித்து கலைஞரிடமே என் வருத்தத்தைத் தெரிவித்தேன்' என்றதோடு, "அப்பா சொன்ன மாதிரி தேர்தல் முடியும்வரை அமைதியாக இருங்கள்' என்று அழகிரியைக் கேட்டுக்கொண்டாராம்.
ரஜினி சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்ட அழகிரி, "நானாக எதையும் கேட்கவில்லை. பதவியை அவர்களே கொடுத்து அவர்களே பிடுங்கி அவமானப்படுத்துகிறார்கள். என் ஆதரவாளர்களை ஸ்டாலின் இழுத்துக் கொண்டார். என் நண்பர்களை கட்டம் கட்டி நீக்குகிறார். மதுரையில் நான் மானத்தோடு வாழக்கூடாது என திட்டமிட்டு இதையெல்லாம் செய்கிறார்கள்,' என்று வருத்தப்பட்டுள்ளார்.
ரஜினியிடம் பேசிவிட்டு வந்த பிறகு, வெளியே பேட்டி கொடுத்த அழகிரி, 'ரஜினியைச் சந்தித்து மனம்விட்டுப் பேசிய பிறகுதான் நிம்மதியாக உள்ளது," என்று கூறினார்
அன்று மாலையே, தன் ஆதரவாளர் ஒருவர் வீட்டுக்குப் போன அழகிரி, "தனிக் கட்சி தொடங்கும் எண்ணமே இல்லை. நான் இப்போதும் திமுகவில்தான் இருக்கிறேன். என் உரிமையை நிலைநாட்ட போராடுவேன்," என்றார்.
மதுரையில் கடந்த மார்ச் 17-ம் தேதி பேசிய அழகிரி, "தனிக் கட்சியோ, திமுகவுக்கு எதிராக வேலை செய்வதோ கூடாது. நாம் கட்சிக்குள் இருந்தபடி நம் செல்வாக்கைக் காட்ட வேண்டும்," என்பதோடு நிறுத்திக் கொண்டதற்கு முக்கிய காரணமே ரஜினியுடனான சந்திப்புதான் என்கிறார்கள். ஆனால் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட தனது எதிர்ப்பாளர்களை தேர்தலில் காலி பண்ணும் வேலையை மட்டும் அழகிரி கைவிடவில்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: