திங்கள், 11 நவம்பர், 2013

திமுக புகார் : இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும்! தலைமை தேர்தல் ஆணையத்திடம்


ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக விதிமுறையை மீறி செயல்படுவதால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று திமுக சார்பில் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்தை சந்தித்து மனு ஒன்றினை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதல் அமைச்சர் ஜெயலலிதாவைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ஏற்காடு தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவினர் தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். ஏற்காடு தொகுதியில் லேப்டாப் மற்றும் இலவச சைக்கிள்கள் அதிமுகவினரால் விநியோகம் செய்யப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அதிமுக நிர்வாகி போல் செயல்படுகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருவதால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: