புதன், 28 ஆகஸ்ட், 2013

இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது ! மதிமாறன்


 by வே.மதிமாறன்
pancharathna
பூணூல் போட்டவா யாரும் மேளம் அடிக்க மாட்டா, மேளம் அடிக்கிறவா யாரும் பூணூல் போட மாட்டா, அதனாலேயே தோளில் துண்டும் போட விட மாட்டா 
this program sponsored by ‘இசைமேதை’ கருப்பையா   ‘சாஸ்திரிகள்’-( போட்டுக்கலாம்னு  ஆசைதான்  கடைசிவரை முடியலையே)
*
பாடல்களில் மொழியை விட இசையே சிறப்பு. இசை தான் வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். அதைத்தான் பார்ப்பனர்களும் சொல்கிறார்கள். “கர்நாடக சங்கீதத்தை தமிழில் பாடு” என்றால், “இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை” என்கிறார்கள். உங்களின் இசை பற்றிய கருத்து தமிழ் விரோதமும் பார்ப்பன தன்மையும் உள்ளதாக இருக்கிறது. அவர்களுக்கும், இசை பற்றிய உங்களின் புரிதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை?
-வீரபாண்டியன்.
நிச்சயம் இருக்கிறது.
வார்த்தைகளால் பாடுவதைவிட வாத்தியக் கருவிகளால் இசைக்கப்படுகிற இசையே உன்னதம். அது தருகிற உணர்வுகளை ஒரு போதும் மொழியால் முடியவே முடியாது, என்பதை இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்கிறேன். பாடலில் கூட ‘சந்தம்’ தான் உங்களை முதலில் ஈர்க்கிறது. மொழி இரண்டாம் பட்சம்தான்.
இதை நீங்கள் திரை இசை, கருநாடக சங்கீதம், மேற்கத்திய இசை இவைகளோடு ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல, தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்த பறை, தவில், நாதஸ்வரம் இவைகளே அதற்கு சாட்சி. இவைகளில் குரலிசை பாடல் என்பதே இல்லை. இசை மட்டும்தான். பறையும் நாதஸ்வரமும் தவிலும்; துக்கம், மகிழ்ச்சி, எழுச்சி இன்னும் பல உணர்வுகளை நம் உள்ளமெங்கும் அள்ளித் தெளிக்கும்.
பறை இசைக் கலைஞர், நாதஸ்வரம்-தவில் கலைஞர்கள் சொல்லலாம், “இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை” என்று.
ஆனால், கருநாடக சங்கீத வித்துவான்கள் அப்படி சொல்வதற்கு தகுதியற்றவர்கள், அருகதையற்றவர்கள். ஏனென்றால் கருநாடக சங்கீதத்தில் பிரதானமே குரல் தான். அங்கு வாத்தியங்களுக்கு பெயரே பக்க வாத்தியம்.
கருநாடக சங்கீதத்தில் உள்ள பிரச்சினை, மொழியல்ல; அதில் ஜாதிய கண்ணோட்டம் நிறைந்த அரசியல் இருக்கிறது. ‘தமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்தது’ என்பது போலவே ‘கருநாடக இசைக்கு தெலுங்குதான் பொருத்தமானது’ என்கிற எண்ணமும்.
அதற்குக் காரணம் அவர்களுக்கு தெலுங்கு மேல் உள்ள ஈடுபாடல்ல;
தியாகராஜர் ஒரு தெலுங்கு பார்ப்பனர். அவர் கீர்த்தனைகளை தெலுங்கில்தான் பாடியிருக்கிறார். தியாகராஜர் மீது உள்ள ஈடுபாடுதான் தெலுங்கின் மீது உள்ள ஈடுபாடு போல் பிரதிபலிக்கிறது. தியாகராஜர் தெலுங்கு பேசிய நாயுடுவாகவோ, இன்னும் குறிப்பாக சக்கிலியராகவோ இருந்திருந்தால்…? ‘அப்படி ஒருத்தர் இருந்தாரா?’ என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.
தியாகராஜர் நம்பூதிரியாக இருந்து மலையாளத்தில் பாடியிருந்தால் இவர்களுக்கும் மலையாள உணர்வு பொங்கி வழிந்திருக்கும்.
அதனால்தான் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு முன்பே தமிழில் கீர்த்தனைகள் பாடிய அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களை விட தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் இவர்களின் தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகள் ‘அவர்களுக்கு’ பிடிக்கிறது என்பது மட்டுமல்ல உயர்வாகவும் தெரிகிறது.
காரணம் ‘அவர்கள் தமிழில் பாடினார்கள்’ என்பதினால் அல்ல, அவர்கள் பெயருக்கு பின் ஜயர், சாஸ்திரிகள், தீட்சிதர் என்ற பெயர் இல்லாததினால்தான்.
அப்படி இருந்திருந்தால், தெலுங்கு கீர்த்தனைகளை மட்டும் விரும்பி பாடுகிற ‘தமிழர்களான இவர்களுக்கு’ தமிழ் உணர்வும் நிறைந்திருக்கும். ‘தியாகராஜருக்கு முன்பே கீர்த்தனைகளைப் பாடியவர்கள் இவர்கள்தான்’ என்று அவர்களுக்குரிய மரியாதையும் முறையாக கிடைத்திருக்கும்.
இன்னும் நெருக்கிப் பார்த்தோமானால், அதை நிரூபிப்பது போல் இன்றைய சாட்சியாகவும், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களின் கீர்த்தனைகளை, தமிழ் பாடல்கள் பாடும்போது கூட ‘அவர்கள்’ பாடுவதில்லை.
மாறாக, கோபால கிருஷ்ண பாரதியார், பாபநாசம் சிவன்,  சுப்பிரமணிய பாரதியார் பாடல்களை தான் உணர்ந்து, உருகி தமிழ் உணர்வாக வெளிபடுத்துகிறார்கள். காரணம் ‘இவர்கள்’ பெயருக்குப் பின்னால் ‘அது’ இல்லாவிட்டாலும் பெயருக்குள் ‘அது’ தானே இருக்கிறது.
‘நாதஸ்வர-தவில்’ இசை மிக துல்லியாமான செவ்வியல் இசை வடிவம்.  அது தியாகராஜர் காலத்துக்கு முன்பிருந்த அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது.
‘இவர்கள்’ பாடுகிற எல்லா கீர்த்தனைகளையும் நாதஸ்வர இசையில் வாசிக்கிறார்கள். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலையோடு வளர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து இசைப் பாடலையும் நாட்டியத்தையும் தங்களின் கண்டுபிடிப்பாக, தகுதி திறமையாக அடையாளப்படுத்திக் கொண்ட ‘இவர்கள்’,
ஏன் ‘நாதஸ்வர-தவில்’ வாசிப்பில் இன்றுவரை ஒருவர்கூட பங்கெடுக்கவில்லை? தோளில் வைத்து வாசிக்க வேண்டிய மேற்கத்திய இசையின் வாத்தியக் கருவியான, வெள்ளைக்காரனின் violin – னை குழந்தையை போல் மடியில் வைத்து கர்நாடக சங்கீதத்திற்கு பயன்படுத்துகிற இவர்கள் ஏன் நாதஸ்வரம்-தவில் வாசிப்பதில்லை?
இந்தக் கேள்வியோடு தமிழ் இசை-கருநாடக சங்கீதம் இவைகளுக்குள்ள அரசியல் பிரச்சினையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
‘கருநாடக சங்கீதத்தை தமிழில் பாடு’ என்றால், ‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை’ என்கிறார்கள், பல நேரங்களில் அவர்களாகவும் சில நேரங்களில் இவர்களாகவும் திடீரென்று சிவலிங்கத்தைப் போல் ‘அரூபமாக’வும் காட்சித் தருகிற ‘அவர்கள்-இவர்கள்’.
அதையே நான் இப்படி கேட்கிறேன்,
‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை. அப்போ தெலுங்குல மட்டும் எதுக்குப் பாடனும்? mathmaran.wordpress.com

கருத்துகள் இல்லை: