வியாழன், 21 பிப்ரவரி, 2013

Titanic மூழ்கியபோது இசை கலைஞர் வாசித்த வயலின் ஏலம்

லண்டன்: கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வயலின் இசைக்கருவி ஏலத்துக்கு வருகிறது. இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் துறைமுகத்தில் இருந்து மிகப் பெரிய சொகுசு கப்பல் ‘டைட்டானிக்’ கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நியூயார்க் புறப்பட்டது. அட்லான்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது ஏப்ரல் 15ம் தேதி பனிப்பாறையில் மோதி கப்பல் இரண்டாக உடைந்து மூழ்கியது. இதில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாயினர். உலகையே உலுக்கிய இந்த விபத்து, இன்றளவும் பேசப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படம் ‘டைட்டானிக்’. இதில் ஒரு காட்சி வரும். கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பயணிகள் எல்லாரும் பதற்றத்துடனும் பரபரப்பாகவும் உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருக்க.. எதை பற்றியும் கவலைப்படாமல் கப்பலின் வாத்திய கோஷ்டி தொடர்ந்து வயலின் உள்ளிட்ட கருவிகளை இசைத்துக் கொண்டிருப்பார்கள். நகைச்சுவை இழையோடும் இந்த சோக காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இது வெறும் காட்சி அல்ல. உண்மையிலேயே, டைட்டானிக் கப்பல் மூழ்கிய நேரத்தில் இசை குழுவினர் கருவிகளை வாசித்தனர். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி கொண்டிருந்த போது, இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வாலஸ் ஹர்ட்லி என்ற பேண்ட் மாஸ்டர் தலைமையில் 8 இசை கலைஞர்கள் பல்வேறு இசை கருவிகளை வாசித்தனர். கப்பல் மூழ்கும் நேரத்திலும் சில பயணிகள் அதை ரசித்தனர். கப்பல் மூழ்கி அவர்களும் பலியாயினர். டைட்டானிக் (1997) படத்தில் வாலஸ் ஹர்ட்லி கதாபாத்திரத்தில் ஜோனாதன் இவான்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடித்தார். இவர் வயலின் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், கப்பலில் இருந்து பல பொருட்கள் மீட்டு ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், பேண்ட் மாஸ்டர் வாலசின் வயலின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த வயலின் இப்போது ஏலத்துக்கு வருகிறது. இதற்கிடையில் வயலின் உண்மையில் வாலஸ் ஹர்ட்லியுடையதா என்று அறிவியல் பூர்வமாக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனையில், வாலசின் வயலின்தான் என்று கூறப்பட்டது. கடைசிகட்ட பரிசோதனை தற்போது நடந்து வருகிறது. இதன் முடிவு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. கடலில் கண்டெடுக்கப்பட்டது, விபத்துக்குள்ளாகும் நேரத்தில் டைட்டானிக் கப்பலில் வாசித்த வயலின்தான் என்பது உறுதியானால் இதுவரை யாரும் எதிர்பார்க்காத விலைக்கு அது ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைட்டானிக் ஆராய்ச்சியாளர் ஹென்றி அல்டிரிஜ் இந்த வயலினை வரும் ஏப்ரல் 20ம் தேதி ஏலத்துக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார். ரூ.1.80 கோடிக்கும் மேல் இந்த வயலின் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: