திங்கள், 18 பிப்ரவரி, 2013

மாயாவதி: நமது கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் 17.02.2013 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி எம்.பி. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– நான் இந்த நாட்டின் பிரதமராகி, டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி, சுதந்திர தின உரையாற்ற வேண்டும். அதற்கேற்ப, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நமது கட்சிக்கு மாபெரும் வெற்றியை நீங்கள் தேடித்தரவேண்டும். சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் உங்களுக்கு லஞ்சம் கொடுத்து, உங்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். நீங்கள் அவர்களின் முயற்சிக்கு பலியாகாமல், விலைக்கு வாங்கும் பொருளாக மாறாமல், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு விலை போகாமல், விழிப்புடன், உஷாராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி.க்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வர நாம் போராடி வருகிறோம். ஆனால், அந்த சட்டம் வரவிடாதபடி காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் சதி செய்து செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் இந்த சதித்திட்டத்தை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். நமது கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அந்த சட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம். அதற்காக நாம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தாக வேண்டும். இந்த எண்ணம் நிறைவேற, பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெற, நீங்கள் முழு மூச்சுடன் உழைக்க வேண்டும்.


இட ஒதுக்கீடு சட்டம் வந்தாக வேண்டும் என்று நமது கட்சி தெருவில் இறங்கி போராடியது. பாராளுமன்றத்திலும் போராடினோம். அந்த போராட்டத்துக்கு ஒரு பகுதி வெற்றி கிடைத்து, மேல்–சபையில் அந்த சட்டம் நிறைவேறியது. ஆனால் மக்கள் அவையில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது. அது நிறைவேற வேண்டுமானால், நமது கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைத்து, பாராளுமன்ற தேர்தலில் நமது கட்சிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு  பேசினார்

கருத்துகள் இல்லை: