புதன், 20 பிப்ரவரி, 2013

Kaveri தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல : வாசன் பேட்டி

அரசிதழில் காவிரி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது, தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
இது குறித்து ஜி.கே.வாசன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: காவிரி நதிநீர் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியாகி இருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் தமிழர்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனியாவது கர்நாடக அரசு, சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். இந்த பிரச்னை தொடர்பாக பிரதமர், இரு மாநில முதல்வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கர்நாடக முதல்வரை வற்புறுத்தியதின் காரணமாக இந்த கட்டளை நிறைவேறி உள்ளது.


தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். வளர்ந்துவரும் நாட்டில் இப்படிப்பட்ட போராட்டம் தேவையற்றது. இது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்றார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது, அதிமுக அரசுக்கு கிடைத்துள்ள வெற்றி என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு வாசன் அளித்த பதில்: காவிரி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பது தமிழகத்தின் உள்ள அனைத்துக் கட்சிகள் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. அரசிதழில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். எனவே, இது தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றி இல்லை. ஒட்டுமொத்த கட்சிகள் குரல் கொடுத்ததால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: