ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஆடலாம் பாய்ஸ் சம்பவங்கள் உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள்

இயக்குனர், நடனக்கலைஞர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டுள்ள ரெமோ இயக்கத்தில், சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரபுதேவா உட்பட பல நடனக் கலைஞர்களின் நடிப்பிலும், நடனத்திலும் வெளியான படம் ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ். இந்தியாவில் வெளியாகும் முதல் டான்ஸ் 3D திரைப்படம் என்ற பெயரோடு பலவித எதிர்பார்ப்புகளுடன் வெளியானது ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்.புகழ்பெற்ற JCD என்ற நடனப் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் பிரபுதேவா. டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் JCD நடனப் பள்ளி போட்டியில் நடனமாடும் போது சொதப்பினாலும் முதல் பரிசை தட்டிச் சென்றுவிடும். இதனால் ஆச்சர்யமடைந்த பிரபுதேவா, JCD நடனப்பள்ளி உரிமையாளரிடம் ‘சரியாக ஆடாத நமக்கு எப்படி பரிசு ’ மக்கள் விருப்பம் எதுவோ அதை நிறைவேத்துனா தான் நமக்கு பணம் கிடைக்கும். பணம் தான் எல்லாத்துக்கும் முக்கியம்’ என்று உரிமையாளர் சொல்ல, பணத்திற்காக நடனத்தை விற்க மனமில்லாத பிரபுதேவா அந்த நடனப் பள்ளியிலிருந்து விலகிவிடுகிறார்.தனது நண்பனுடன் தங்கியிருக்கும் பிரபுதேவா அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது நடனத்தில் ஆர்வமுள்ள அற்புதமாக நடனமாடும் சில இளைஞர்களை சந்திப்பார். நடனத்தில் ஆர்வமும், கடும் உழைப்பும் இருக்கும் அந்த இளைஞர்கள் JCD நடனப் பள்ளியில் சேர்ந்து பெரிய நடனக் கலைஞராக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதையறிந்து பிரபுதேவா இலவசமாக அவர்களுக்கு நடனம் கற்றுத்தர முன்வருவார்.
சாதாரணமாக தெருக்களில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள்.டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க நடக்கும் ஆடிஷனில் தங்களுக்குள் இருக்கும், கருத்து வேறுபாட்டால் 
சொதப்பிவிடும் இளைஞர்களை, JCD நடனப்பள்ளி உரிமையாளர் ‘ எல்லாரும் நல்லா ஆயினால் மக்களுக்கு அலுத்துவிம். நடனம் ஆடத் தெரியாதவர்களும் போட்டியில் ஜோக்கராக இருக்கட்டும்’ என்று அவர்களை அவமானப்படுத்திவிடுவார். பிரபுதேவா தனது மாணவர்களின் பலவீனத்தை எடுத்துரைத்து அடுத்த ரவுண்டில் வெற்றி பெற வேண்டும் என்ற மன உறுதியுடன் அவர்களை இரண்டாம் சுற்றுக்கு அனுப்ப, அவர்களும் சிறப்பாக நடனமாடி ஆடிஷனில் செலக்ட் ஆகிவிடுவார்கள். 


பிரபுதேவாவின் மாணவர்கள் செலக்ட் ஆகிவிட்டதை பார்த்து பயப்படும் JCD நடனப்பள்ளி உரிமையாளர் அவர்களுக்கு ஆசைகாட்டி தன் பக்கம் இழுக்கப் பார்ப்பார். இந்த சலுகையை அவர்கள் ஏற்கிறார்களா? இல்லை பிரபுதேவாவுடனே இருப்பார்களா? கடைசி போட்டியில் வென்றார்களா? அவர்கள் ஆசைபட்டது போல் பல லட்சம் மக்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் புகழ் பெற்றார்களா? என்பதே கிளைமேக்ஸ்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா ஒரே ஒரு நடனக்காட்சியில் மட்டுமே இடம்பெறுகிறார். மற்றபடி பயிற்சி கொடுக்கும் போது ஆடும் ஓரிரு ஸ்டெப்கள் தான். கோபியாக வரும் கணேஷ் ஆச்சார்யா உடல் பருமனாக இருப்பவர்களால் எப்படி நடனமாட முடியும் என்ற கேள்வியை இந்த படத்தின் மூலம் உடைத்திருக்கிறார். டி.வி  நிகழ்ச்சிகளில் கேமராவிற்கு பின்னால் நடக்கும் பல சம்பவங்களை இயக்குனர் பதிவு செய்திருக்கிறார். 


நடனம் என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. நடனம் அனைவருக்கும் பொதுவானது. வாய்ப்புகள் கிடைக்காததால் பல இளைஞர்கள் காணாமல் போகிறார்கள் போன்ற பல செய்திகளை இந்த படத்தின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார் ரெமோ. இந்த படத்தின் இயக்குனர் ரெமோ பல டிவி நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்பதால் இந்த படத்தில் நடக்கும் சம்பவங்கள் உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். 

ஹாலிவுட் திரைப்படமான STEP UP எனும் உலகப் புகழ் பெற்ற படங்களின் சாயல் இருந்தாலும் இந்தியாவின் நடனக் கலைஞர்களும், டெக்னீஷியன்களும் எந்த விதத்திலும் ஹாலிவுட் நடனக் கலைஞர்களுக்கோ, டெக்னீஷியன்களுக்கோ சளைத்தவர்கள் அல்ல என்பது ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் படத்தின் மூலம் தெரிகிறது. 
ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் - கிழி! கிழி! கிழி! கிழி!   nakkheeran.in

கருத்துகள் இல்லை: