ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

துணை முதல்வராகும் உதயநிதி. திமுக இளைஞரணி மாநாடு முடிந்தது அறிவிப்பு?

மின்னம்பலம் Aara  : வைஃபை ஆன் செய்ததும் திமுக இளைஞரணி மாநாட்டு தேதி குறித்த திமுக தலைமையின் அறிவிப்பு இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் இளைஞரணி மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைமை ஆகஸ்டு 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூலை 28 ஆம் தேதி மின்னம்பலத்தில், ‘மாநாடு மாஸ் காட்டத் தயாராகும் உதயநிதி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கு அடுத்த நாள் ஜூலை 29 ஆம் தேதி அறிவாலயத்தில் புதிய இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, மாநாடு சேலத்தில் நடைபெறும் என்றும் டிசம்பம் மாதம் நடைபெற இருக்கிறது என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு மாநாட்டு ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
இளைஞரணி மாநாட்டுக்காக உதயநிதியிடம் இளைஞரணியினர் மட்டுமின்றி, கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் நிதி அளித்து வருகின்றனர்.   மாநாடு பற்றி இளைஞரணி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் மாநில மாநாட்டை நடத்துவதாகத்தான் முதலில் தலைமை திட்டமிட்டது. அதற்கான ஆலோசனைகளும் தொடங்கின. ஆனால் உதயநிதி தனது தந்தையும் தலைவருமான முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்று, ‘2007 இல் இளைஞரணிக்கு வெள்ளி விழா மாநாடு நடத்திய பிறகு இளைஞரணி மாநாடு நடத்தவே இல்லை. எனவே மாநாடு நடத்துவதாக திட்டமிடும் பட்சத்தில் அதை இளைஞரணி மாநாடாக நடத்தவேண்டும். நான் பொறுப்பேற்று நடத்துகிறேன்’ என்று கேட்டிருக்கிறார் உதயநிதி. இதையடுத்து தலைமைக் கழகம் நடத்த இருந்த மாநாட்டை இளைஞரணி மாநாடாக நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Udhayanidhi became the Deputy Chief Minister
2009 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி மாநாட்டை ஸ்டாலின் பொறுப்பேற்று நடத்திய நிலையில் 2009 இல் துணை முதல்வரானார் ஸ்டாலின். அதேபோல 2023 டிசம்பரில் இளைஞரணி மாநாட்டை உதயநிதி பொறுப்பேற்று நடத்துகிறார். இந்த மாநாட்டில் உதயநிதிக்கு இன்னும் உரிய பொறுப்பை அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றவோ, அல்லது முதல்வரிடம் வலியுறுத்திப் பேசவோ பல அமைச்சர்களும் தயாராகிறார்கள். இதையடுத்து 2024 தேர்தலுக்குள் உதயநிதி துணை முதல்வர் ஆகிவிடுவார்’ என்கிறார்கள் இளைஞரணியினர்.

இதற்கான அறிகுறிகள் தலைமைச் செயலகத்தில் தென்படத் தொடங்கிவிட்டன. சில நாட்களுக்கு முன் அதாவது கடந்த ஆகஸ்டு 21-ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சக அமைச்சர் பெருமக்கள் – அதிகாரிகள், அலுவலர்களுடன் உதயநிதி பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலதுபுறம் அமைச்சர்களும் இடதுபுறம் அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர். அமைச்சர்கள் வரிசையில் ஸ்டாலினுக்கு அருகே துரைமுருகன், அவரை அடுத்து உதயநிதி இரண்டாவது இடத்தில் அமர்ந்திருந்தார். உதயநிதிக்குப் பிறகே நேரு, ஐ.பெரியசாமி, வேலு, தங்கம் தென்னரசு ஆகிய சீனியர் அமைச்சர்கள் அமர்ந்திருந்தார்கள்.

Udhayanidhi became the Deputy Chief Minister

ஆக தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தின் மூலம் தெரியவரும் மெசேஜ் என்னவென்றால் ஸ்டாலினுக்கு அடுத்து துரைமுருகன், அடுத்து உதயநிதி என்பதுதான். துரைமுருகன் மிகவும் சீனியர் கட்சியின் பொதுச் செயலாளர் என்பதால்தான் ஸ்டாலினுக்கு அடுத்த இடம் தலைமைச் செயலகத்திலும் துரைமுருகனுக்கு இருக்கிறது.

விரைவில் உதயநிதி துணை முதலமைச்சரானால் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அடுத்து தான் துரைமுருகன், நேரு போன்றவர்கள் அமர முடியும் என்கிறார்கள் திமுகவின் முக்கியப் பிரமுகர்கள்.
இளைஞரணி மாநாட்டுக்குப் பின் இது நடக்கும் என்றும் உறுதியாகச் சொல்லுகிறார்கள் அவர்கள்” என்ற மெசேஜுக்குப் பிறகு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

 

கருத்துகள் இல்லை: