செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

அமலாக்க அதிகாரிக்கு 5 கோடி லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மீது பாய்ந்த வழக்கு.. சிபிஐ விளக்கம்

 tamil.oneindia.com  - murugan P  :  டெல்லி: டெல்லி: டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
அமந்தீப் சிங் தல் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி மற்றும் க்ளார்டிஜைஸ் ஹோட்டல் சிஇஒ விக்ரமாதித்தா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
CBI books ED Assistant Director in Rs 5 crore bribery for Delhi excise policy scam case
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விஸ்வருபம் எடுத்துள்ளது.
அங்கு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மறுபக்கம் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் நடவடிக்கை ஆயத்தமாகி வருகிறது அமலாக்கத்துறை. இதுதவிர தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவையும் அழைத்து விசாரித்தது அமலாக்கத்துறை. இந்த விவகாரத்தில் பல முக்கிய விஜபிக்கள் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் உதவி செய்யுமாறு மதுபான தொழிலதிபர் அமந்தீப் தால் ரூ.5 கோடி பணத்தை அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரிக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி சிபிஐ மீது வழக்கு பதிவு செய்துள்ளது,

இது தவிர ஏர் இந்தியாவின் உதவி பொது மேலாளர் தீபக் சங்வான், கிளாரிட்ஜஸ் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரமாதித்யா, ஆடிட்டர் பிரவீன் குமார் வாட்ஸ் மற்றும் நிதேஷ் கோஹர் மற்றும் பிரேந்தர் பால் சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமந்தீப் தால் மற்றும் அவரது தந்தை பிரேந்தர் பால் சிங் ஆகியோர் 5 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி அமலாக்க இயக்குனரகம் சிபிஐக்கு அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் ஏற்பாட்டில் இந்த விவகாரம் நடந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022 டிசம்பரில் ஏர் இந்தியாவின் உதவி பொது மேலாளர் தீபக் சங்வான் தான், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரியை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாக ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து மதுபான தொழில் அதிபர் அமந்தீப் தாலின் பெயரை நீக்குவதற்காக, டெல்லி ஐடிசி ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 2022ம் ஆண்டு டிசம்பரில் சங்வான் மற்றும் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் காத்ரிக்கு முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தோம் என ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது விசாரணையை சிபிஐக்கு அனுப்பியதை அடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு நபர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றம்சாட்ட்ப்பட்டு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆல் கைது செய்யப்பட்ட அமந்தீப் தால் மற்றும் அமந்தீப் தாலின் தந்தை பிரேந்தர் பால் சிங் ஆகியோர் 5 கோடி ரூபாய்யை டிசம்பர் 2022-ஜனவரி 2023 காலக்கட்டத்தில் கொடுத்துள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ. 3 கோடி மற்றும் பின்னர் ரூ. 2 கோடி என மொத்தம் இரண்டு முறை ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் அமலாக்கத்துறை அதிகாரிக்கு பணத்தை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் , ஏர் இந்தியாவில் உதவி பொது மேலாளராக பணிபுரியும் தீபக் சங்வான் தான் அமலாக்கத்துறை அதிகாரியை அணுக உதவ ஏற்பாடு செய்ய முடியும் என்று உறுதியளித்ததாக கூறியுள்ளார். தீபக் சங்வான் அவரை 2022 டிசம்பரில் அமலாக்கத்துறை உதவி இயக்குனரான பவன் காத்ரிக்கு அறிமுகப்படுத்தி உள்ளாராம்.

தீபக் சங்வானின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட பிரவீன் வாட்ஸ், டிசம்பர் 2022-ஜனவரி 2023 மாதங்களில் அமன் தாலிடம் இருந்து தலா 50 லட்சம் ரூபாய் என ஆறு தவணைகளில் வாங்கி பவன் காத்ரிக்கு 3 கோடி ரூபாய் எடுத்துள்ளார். அதன்பிறகு, 2கோடி கொடுக்கப்பட்ட நிலையில் தீபக் சங்வான், அமந்தீப் தால் பெயரை குற்றப்பத்திரிக்கையில் இருந்து விடுவிக்க கோரியுள்ளார். இதற்கு பவன் காத்ரியும் ஒப்புக்கொண்டிருக்கிறார் அமந்தீப் தாலிடம் இருந்து அனைத்து பண பரிவர்த்தனையும் அவரது வீட்டில் பெறப்பட்டது. இது தொடர்பான சோதனை நடவடிக்கையின் போது, பிரவீன் வாட்ஸின் வீட்டில் இருந்து 2.19 கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே பணம் கைமாறியது என்பதை உறுதிபடுத்தி உள்ளோம்.

மேலும், தீபக் சங்வான் மீது மூத்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் பெயரில் அவர் லஞ்சம் வாங்கியதாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. உதவி இயக்குனரான பவன் காத்ரியின் இல்லத்தில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான ஆவணங்கள் மேலும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அவருக்கு தேவையற்ற ஆர்வம் இருந்தது இதன் மூலம் தெரியவந்துள்ளது" என சிபிஐ தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: