வியாழன், 31 ஆகஸ்ட், 2023

மிக சக்திவாய்ந்த உளவுக் கருவிகளை வாங்கிய மோடி அரசு.. அதிர்ச்சி ரிப்போர்ட்

tamil.samayam.com -ஜே. ஜாக்சன் சிங்  : டெல்லி: மிக சக்திவாய்ந்த இஸ்ரேல் நாட்டின் ஸ்பை கருவிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேல் நாட்டிடம் இருந்த வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்' (Financial Express) நாளிதழில் இந்த ஷாக் செய்தி பிரசுரமாகியுள்ளது.
ஏற்கனவே மோடி அரசு பெகாசஸ் என்ற மென்பொருள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை உளவு பார்த்ததாக கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அடுத்து ஒரு அதிர்ச்சி செய்தியை ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ளது.

அதில், "இஸ்ரேலின் செப்டயர், காக்னைட் ஆகிய நிறுவனங்களின் சக்திவாய்ந்த உளவுக் கருவிகளை மோடி அரசு வாங்கியுள்ளது. கடலுக்கு அடியில் உள்ள கேபிள் மையங்களில் இந்த உளவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், சிங்டெல் (சிங்கப்பூர் நிறுவனம்) ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த உளவுக் கருவிகள் வாங்கப்பட்டு ஆழ்கடல் கேபிள் மையங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த உளவுக் கருவிகள் மூலமாக செல்போன் உரையாடல், குறுந்தகவல், வாட்ஸ் அப் தகவல், இணைய நடவடிக்கைகள், மெயில் தகவல்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும்.

இந்த உளவுக் கருவிகள் மூலமாக 104 கோடி இந்தியர்களின் அந்தரங்க தகவல்களும், அவர்களின் உரையாடல் உள்ளிட்ட விஷயங்களையும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களால் வேவு பார்க்க முடியும்" என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கேபிள் திட்டத்தில் உலகம் முழுவதும் பணிபுரிந்த 4 முக்கிய அதிகாரிகளின் பேட்டியையும் ஃபினால்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா மட்டுமல்ல பல நாடுகள் இந்த உளவுக் கருவிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றன. ஆனால், அந்த நாடுகள் யாருக்கும் தெரியாமல் இதை செய்வார்கள். ஆனால், இந்தியா மட்டும் தான் தங்கள் நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்த உளவுப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளன" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜே. ஜாக்சன் சிங் கட்டுரையாளரை பற்றி

கருத்துகள் இல்லை: