செவ்வாய், 22 நவம்பர், 2022

திமுக தொண்டர்களிடையே அடிதடி... ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு!!

tamil.asianetnews.com  -  Narendran S  :  கன்னியாகுமரி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுத்ததால் திமுக தொண்டர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றுள்ளார்.
அங்கு உலக மீனவர் தின நிகழ்ச்சி, புத்தளத்தில் கட்சி அலுவலகம் திறப்பு விழா, இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கன்னியாகுமரி சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு காவல்கிணறு ஜங்ஷனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அவரது அறைக்கு சென்றார்.



இதனிடையே உதயநிதியை சந்திக்க வந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அந்த விருந்தினர் மாளிகையில் இருந்த தொண்டர்கள் உள்ளே விடாமல் கதவை பூட்டியுள்ளனர். இதனால் திமுக இளைஞரணி தொண்டர்களுக்கும், திமுக தொண்டர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தள்ளுமுள்ளாக மாறியது. இது ஒரு கட்டத்தில் அடிதடியாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: