வியாழன், 24 நவம்பர், 2022

விசிகவிலும் 'ஆபாச பேச்சு டேப்'.. திருமாவளவன் முன்னிலையில் மகளிர் அணி நிர்வாகி ஷாக்

tamil.oneindia.com - Mathivanan Maran  :  சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் சனாதனம் இருக்கிறது; விசிகவில் பெண்களை ஆண் நிர்வாகிகள் கடுமையாக திட்டி இருப்பதை ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன் என அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜகவில் பெரும் புயலாக உருவெடுத்திருக்கிறது
திருச்சி சூர்யாவின் ஆபாச பேச்சு விவகாரம். பாஜகவின் பெண் நிர்வாகியை செல்போனில் அழைத்து ஆபாசமாக அர்ச்சனை செய்திருக்கிறார் திருச்சி சூர்யா.
திருச்சி சூர்யாவின் இந்த ஆபாச பேச்சு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும் என பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் குரல் கொடுத்தார்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி சூர்யா நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடைவிதித்து விசாரணை கமிஷன் அமைத்தார்;


அத்துடன் காயத்ரி ரகுராமை 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கி வைத்து உத்தரவிட்டார்.

பாஜகவில் பிரளயம்
மேலும் திருச்சு சூர்யாவின் ஆபாச பேச்சு தொடர்பாக ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலையிடம் புகார் கொடுத்தேன்; இது தொடர்பாக விசாரணை நடத்த 3பேரிடம் கொடுக்கப்பட்ட செல்போன் பதிவு விவகாரம், ஊடகங்களில் எப்படி வெளியானது என தெரியவில்லை எனவும் சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் நிர்வாகி டெய்சி கூறியிருந்தார். பாஜகவில் இந்த பிரச்சனை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசிகவில் பஞ்சாயத்து
இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இதேபோல ஒரு பஞ்சாயத்து எழுந்துள்ளது. சென்னை தியாகராயர் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திருமாவளவனும் பங்கேற்றார். விசிகவின் மகளிர் அணி சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதிர்ச்சி தந்த பேச்சு
இந்நிகழ்ச்சியில் பேசிய விசிக மகளிர் அணி செயலாளர் நற்சோனை, கட்சியின் ஆண் நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், நற்சோனை பேசிக் கொண்டிருந்த மைக்கை ஆஃப் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து விசிக நிர்வாகி ஒருவர் மைக்கை ஆஃப்செய்ய சென்றார்.

டேப் ரெக்கார்டு இருக்கு
அப்போது உக்கிரமான நற்சோனை, விசிக ஆண் நிர்வாகிகள் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டமுடியுமோ அவ்வளவு கேவலமாக திட்டி இருக்கானுக.. நான் டேப் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன். அதை எல்லாம் நான் காட்டுகிறேன். ஆண் சமூகம் இன்னமும் திருந்தவில்லை. ஆண் சமூகம் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம். இந்த கட்சிக்குள் (விசிகவுக்குள்) சனாதனம் இருக்கிறது. டாப் டூ பாட்டம் கட்சிக்குள் சனாதனம் இருக்கிறது என பேசிக் கொண்டிருந்த போதே மைக் ஆஃப் செய்யப்பட்டது. அப்போது கீழே அமர்ந்திருந்த பெண்கள் நற்சோனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
 

கருத்துகள் இல்லை: