புதன், 23 நவம்பர், 2022

காதலை கைவிட மறுத்ததால் மகளை கழுத்தை நெரித்துக்கொன்ற தாய்.. நெல்லை மாவட்டம்

 மாலைமலர் : நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆறுமுக கனி(வயது 45). இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார். சமீபத்தில் இவர் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று நள்ளிரவு தாய், மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவரது வீடு வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் பேச்சியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அருணா மயங்கி கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனே அவர்கள் 2 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.



இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அருணா கல்லூரியில் படித்தபோது ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அருணாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அருணா சம்மதம் தெரிவிக்காததால் ஆறுமுக கனி தனது மகளின் கையை அறுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு, தானும் கையை அறுத்துக்கொண்டும், ஹேர் டை குடித்தும் தற்கொலைக்கு முயன்றார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: