திங்கள், 21 நவம்பர், 2022

6 பேர் விடுதலை - காங்கிரஸ் கட்சியும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது

 மாலை மலர்  :  புதுடெல்லி:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. 6 பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே பரோலில் இருந்தனர். ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேர் புழல் சிறையிலும், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து அவர்கள் 6 பேரும் மறுநாளே விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ஆதரித்து வரவேற்றன. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், 6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பிலும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்திலேயே சீராய்வு மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். மத்திய அரசின் மனு அவசியமற்றது என்றும், இந்த விடுதலை நீண்ட நாள் போராட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: