புதன், 23 செப்டம்பர், 2020

பட்டப்பகலில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் PA கடத்தப்பட்டு 3 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார்

  zeenews.india.com : கால்நடை பராமரிப்பு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் (Udumalai Radhakrishnan) உதவியாளரான கர்ணன் அமைச்சரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, ​​அடாவடியாக உள்ளே நுழைந்த ஒரு கும்பல், அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று வெளியே காத்திருந்த காரில் கடத்திச் சென்றதாக (Abduction) போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில், புதன்கிழமையன்று, தமிழக அமைச்சரின் பி.ஏ, கத்தி முனையில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். மூன்று மணி நேரம் கழித்து, அவர் கடத்தப்பட்ட இடத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் விடுவிக்கப்பட்டார் என்று போலீசார் (Police) தெரிவித்தனர். கடத்தலின் பின்னணி என்னவென்று தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் காலை சுமார் 11.30 மணியளவில் நடந்தது. சம்பவம் நடந்தபோது அமைச்சர் அலுவலகத்தில் இல்லை. அங்கு பி.ஏ-வுடன் ஒரு பெண் ஊழியர் மட்டுமே இருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடத்தல் கும்பலின் மூன்று உறுப்பினர்கள் அலுவலகத்திற்குள் சென்று கர்ணனுடன் திரும்பினர். மற்றொரு நபர் வெளியே நின்று கொண்டிருந்ததை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தின. திருப்பூர் டி.எஸ்.பி திஷா மித்தல் உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் திருப்பூர்-பொள்ளாச்சி சாலை மற்றும் அருகிலுள்ள நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

எனினும், கடத்தல் கும்பல் கர்ணனை பிற்பகல் 2.45 மணியளவில் தாலி என்ற இடத்தில் விட்டனர். அங்கிருந்து அவர் அலுவலகத்திற்கு திரும்பியதாக  போலீசார் (Police) தெரிவித்தனர். கடத்தல்காரர்களைக் கண்டுபிடிப்பதற்கும், கடத்தலுக்கான காரணத்தைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை: