திங்கள், 2 டிசம்பர், 2019

அதிமுகவுக்கு துணைபோகும் தேர்தல் ஆணையம்: குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்!

அதிமுகவுக்கு துணைபோகும் தேர்தல் ஆணையம்: குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள்!மின்ன்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குழப்பமான முறையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று (டிசம்பர் 2) வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.ஆனால்,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக அரசோடு மாநிலத் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
“தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும். தேர்தலையே தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திமுக மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும்.

மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்” என்று விமர்சித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்
“தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது. தேர்தலை மீண்டும் தள்ளிப்போட வாய்ப்பு கிடைக்காதா என்ற உள்நோக்கத்தோடு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முடிந்த பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத நடைமுறையாகும்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்று அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ள அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான தேர்தல் அறிவிப்பினை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர், முத்தரசன்
“தேர்தலை நடத்த விருப்பம் இல்லாத அதிமுக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துவதற்கான வழிவகைகளை உருவாக்கி வருகின்றது. இத்தகைய குழப்பங்களின் காரணமாக நீதிமன்றத்தால் தேர்தல் நிறுத்தப்பட்டால் பிறர் மீது பழி சுமத்தி தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவராக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டு வருகின்றார் என்று கருதும் அளவிற்கே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
விசிக தலைவர், திருமாவளவன்
“ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கிற்குத் தமிழகத் தேர்தல் ஆணையம் துணைபோவது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழக அரசின் இந்த அணுகுமுறையானது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று ஆளுங்கட்சி திட்டமிட்டு செயல்படுவதாகவே தெரிகிறது. இதற்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் எவ்வாறு இசைவு தெரிவித்தது என்பது வியப்பாக உள்ளது. இத்தகைய முறைகேடான தேர்தல் அறிவிப்புக்கு யாராவது நீதிமன்றத்தில் தடை வாங்கினால், எதிர்க்கட்சிகளின்மீது பழியைப் போடலாம் என்பதே ஆளுங்கட்சியின் திட்டமெனவும் தெரிகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: