புதன், 20 ஜூலை, 2016

பணத்தால் நான் …! பணத்துக்காகவே நான் …! வைகோவின் தலைவி !

 பணத்தால் நான் ...! பணத்துக்காகவே நான் ...!ர்மபுரியில் தே.மு.தி.க கூட்டமொன்றில் முதலமைச்சர் ஜெயாவைப் பற்றி விமரிசித்தார் என்று விஜயகாந்த் மீது அம்மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் இது புதிதல்ல. எனினும் இந்த அவதூறு வழக்குகள் எங்கு சென்றாலும் விமரிசித்தவர்களை துரத்துவதோடு எல்லா நீதிமன்றங்களிலும் வாய்தாவுக்காக அலைய வேண்டிய அவஸ்தைகளும் ஏராளம். அதுதான் அம்மாவின் பழிவாங்கல். மற்றபடி சட்டப்படியோ இல்லை தீர்ப்புப் படியோ இவ்வழக்குகள் ஒன்றும் பிடுங்கிவிட முடியாது.இந்நிலையில் இந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் 2015 நவம்பரில் விஜயகாந்த் மனுத் தாக்கல் செய்தார். 
அதில் கூட்டத்தில் பேசியதில் எந்த அவதூறும் இல்லை, ஏற்கனவே இது போன்ற தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் காரணங்களே இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்ததால், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் அடங்கிய அமர்வில் 15.07.2016 அன்று விசாரணைக்கு வந்தது. இத்தகைய அவதூறு வழக்குகள் அதுவும் தமிழகத்திலிருந்து நிறைய அளவில் அவர்களுக்கு மேல்முறையீடாக வந்த வண்ணம் இருப்பதால் ஏதோ சோர்வு தட்டியிருக்கிறது. வழக்கிற்கு காரணமான விஜயகாந்தின் தரும்புரி பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லி கேட்ட நீதிபதிகள் “இதில் என்ன இருக்கிறது, இதற்கா அவதூறு வழக்கு” என்று கேட்டிருக்கிறார்கள். மேலும் வழக்கு தொடர்வதற்கு முன் பேச்சில் அவதூறு உள்ளதா என்பதை ஆராய வேண்டாமா, அரசு வக்கில்களை தமிழக அரசு ‘போஸ்ட் மேன்’ போல பயன்படுத்துகிறதா” என்று பொங்கவும் செய்திருக்கின்றனர்.
ஜனநாயகத்தில் நடைபெறும் ஆட்சியை விமரிசப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு என்பதால் இந்த அவதூறு வழக்கு ஏன் தொடரப்பட்டது என்று முதலமைச்சர் ஜெயலலிதா 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்திரவை கொண்டாடுவதற்கு கட்சியில் ஆளே இல்லாத நிலையில் விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் இதை பெரிய செய்தியாக்கி ஜெயலலிதாவை தலையங்கத்திலோ கட்டுரையிலோ ஏன் ஒரு தேநீர்க் கடையில் கூட கண்டிப்பதற்கு ஊடகங்களுக்கோ இல்லை அறிஞர்களுக்கோ தைரியம் இல்லை. அதனால்தான் ஜெயாவுக்கு சொம்படிக்கும் ஊடங்களைப் பார்த்து விஜயகாந்த் துப்பியது இவர்களுக்கு பெருங்கோபத்தை கொண்டு வந்தது. பாண்டே போன்றவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும், அவதூறு வழக்கிற்கும் வித்தியாசம் தெரியாமல் அம்மா புராணம் பாடுகிறார்கள். என்ன இருந்தாலும் ஜெயாவின் சொத்து திருட்டு வழக்கை சொத்து வழக்கு என்று மொழி பெயர்த்த அறிஞர் அல்லவா!
அரசு கட்டிய ஒரு கழிப்பறையை திறப்பதற்கு கூட ஓராயிரம் அம்மா துதிப்பாக்களைப் பாடும் அடிமைகளின் காலமிது. விருந்தினர் விடுதி ஒன்றில் அம்மா படம் இல்லையென்று நலத்திட்ட விழாவைப் புறக்கணித்த அமைச்சர் பெருமக்களை சகித்துக் கொண்டிருக்கும் மண்ணிது. அந்த நாணயத்தின் மறுபக்கமாகத்தான் தன்மீதான விமரிசனங்களை ஜெயலலிதா சகிக்காததும். உலகிலேயே அதிக அவதூறு வழக்குகளைப் போட்டு கின்னசில் இடம் பிடிக்க வேண்டிய சாதனைக்கு சொந்தக்காரரான அவருக்கு பிடித்த விசயங்கள் மூன்று. அவரது படங்களைத் தாங்கிய பதாகைகள், விளம்பரங்கள், அவரைப் போற்றும் எதுகை மோனை துதிப்பாக்கள், அவரைத் தூற்றுபவர் மீதான அவதூறு வழக்குகள்.
இறுதியில் அம்மா நல்லெண்ணத் தொட்டியில் இடம்பெறுவதற்கு அடிமைகள் இம்மூன்றையும் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே பட்டி தொட்டியெல்லாம் அவதூறு வழக்கு போட்டு அம்மா புகழ் பாடவேண்டியிருக்கிறது.
விஜயகாந்த் பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு இதில் என்ன இருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் அதே அதிர்ச்சியை ஏன் கீழமை, உயர்நீதிமன்றங்கள் அடையவில்லை என்று யோசிக்கவில்லை. அரசு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அனைவரும் இத்தகையோ மோசடி அவதூறு வழக்குகளை ஜெயாவின் முதல் ஆட்சிக்காலமான 91 முதலே அனுமதித்து ஆராதிப்பதின் விளைவுதானே இன்றைய கின்னஸ் சாதனை? இந்த கின்னஸ் சாதனையை நியாயமான நீதிக்கான போராட்டமாகத்தானே இங்குள்ள பெரும்பான்மையான ஊடகங்கள் திசைதிருப்பின. 91-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான 25 ஆண்டுகளில் ஜெயா தொடுக்கும் அவதூறு வழக்குகளின் வரைபடம் எகிறிக் கொண்டு இருப்பது எதைக்காட்டுகிறது?
இந்த ஜனாநயக முறையில் விமரிசினமே இருக்க கூடாது, மீறி விமரிசிப்போரை முடக்க வேண்டும் என்பதை ஆளும் வர்க்கம் ஜெயா மூலம் பரிசோதனை செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. சான்றாக ஆர்.எஸ்.எஸ்-தான் காந்தியைக் கொன்றது என்று ராகுல் காந்தி பேசியதற்கு இதே உச்சநீதிமன்றம் கூறியது என்ன? ராகுல் காந்தி சொன்னது அவதூறு ,அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் விசாரணையை சந்திக்க வேண்டுமாம். கோட்சே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தது வரலாற்று உண்மை. இந்த நாட்டில் நடந்த பல்வேறு கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ்-ன் கிரிமினல் பக்கங்கள் நிரூபிக்கப்பட்டதும் உண்மை.
இனி காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் தொடர்பில்லை, காஷ்மீர் அப்பாவி மக்களை இராணுவம்  கொல்லவில்லை, வெண்மணியில் பண்ணையார்கள் வெறியாட்டம் போடவில்லை, ஒரிசா பழங்குடி மக்களை போலீசு கொல்லவில்லை, 2002-ல் குஜராத்தில் கலவரமே நடத்தவில்லை, சங்கரராமன் தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டு செத்ததாக வரலாற்றை மாற்றிவிடலாம். இது பொய்யல்ல!
ஆந்திர சுண்டூரில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கொன்ற ரெட்டி சாதிவெறியர்கள் விடுதலை செய்யப்பட்ட போது தலித் மக்கள் இதே  கேள்வியைத்தான் கேட்டார்கள்: “எங்களது மக்கள் தற்கொலை செய்து கொண்டார்களா?  வினவு.கம

கருத்துகள் இல்லை: