சனி, 13 பிப்ரவரி, 2016

உபியில் கடத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.....ஸ்னாப்டீல் கிளையில் பணிபரியும்....

உத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன இளம்பெண் அதிகாரி
மீட்கப்பட்டார். அவரை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், பிரபல தனியார் ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’-ன் கிளை உள்ளது. இந்த நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த தீப்தி சர்னா (வயது 24) என்ற இளம்பெண் பணியாற்றி வருகிறார் அந்த நிறுவனத்தின் சட்டத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் தீப்தி சர்னா, கடந்த 10-ந்தேதி மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். இதற்காக வைஷாலி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தார். பாதி வழியில் அந்த ஆட்டோ பழுதடைந்தது.
இதைத்தொடர்ந்து ஆட்டோவில் இருந்த பிற பயணிகள் மற்றொரு ஆட்டோ மூலம் பஸ் நிலையம் சென்றனர். ஆனால் அந்த ஆட்டோவில் இருந்த 4 பேர் சேர்ந்து தீப்தியை கத்திமுனையில் கடத்தி சென்றனர். அவர் வைத்திருந்த பை மற்றும் செல்போனையும் அவர்கள் பறித்துக்கொண்டனர்.

இதற்கிடையே தீப்தியின் செல்போனுக்கு பேசிய ஒரு தோழி, தீப்தியின் அலறல் சத்தம் கேட்டு நிலைமையை புரிந்து கொண்டார். சிறிது நேரத்துக்குப்பின் தீப்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து காசியாபாத் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீப்தியை தீவிரமாக தேட தொடங்கினர். மேலும் இது குறித்த தகவல் ஊடகங்களிலும் வெளியாகின.

இவ்வாறு தங்களுக்கு நெருக்கடி அதிகரித்ததால் தீப்தியை கடத்திய 4 பேரும், அவரை எங்குமே சிறை வைக்காமல் தொடர்ந்து ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் மாற்றி மாற்றி அழைத்து சென்றனர். இடையே சுமார் 10 கி.மீ. தூரம் வரை அவரை நடத்தியும் கொண்டு சென்றனர்.

பின்னர் நேற்று அதிகாலையில் டெல்லிக்கு செல்லும் புறநகர் ரெயில் ஒன்றில் தீப்தியை ஏற்றி அனுப்பி வைத்த அவர்கள், அவரது செலவுக்காக சிறிது பணமும் கொடுத்து விட்டனர். அந்த ரெயில் டெல்லி அருகே நரேலா ரெயில் நிலையம் வந்தபோது, அந்த இடத்தை தீப்தி அடையாளம் கண்டுகொண்டார்.

உடனே அவர் மற்றொரு பயணியிடம் இருந்த செல்போனை வாங்கி, தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரும், போலீசாரும் சேர்ந்து தீப்தியை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் தீப்தி போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் தன்னை கடத்தி சென்றவர்கள், உடல் ரீதியாக தனக்கு எந்த தொல்லையையும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தீப்தியை கடத்தியது உள்ளூர் ரவுடிகளாக இருக்கலாம் என முடிவு செய்த போலீசார், அவர்கள் 4 பேரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: