வெள்ளி, 16 ஜனவரி, 2015

வெளிநாட்டினரும் சேர்ந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்! ’’நவ் வி ஆர் தமிழன்ஸ்’’ என்று குதூகலமாக......

நம்நாட்டு பாரம்பரியமிக்க பொங்கலை வெளிநாட்டினர் கொண்டாடுவது நம் பாரம்பரியத்துக்கு பெருமை. ஆண்டுதோறும் பொங்கல் சமயங்களில் வெளிநாட்டினர் சுற்றுலா வருவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் ’ஆட்டோ சேலஞ்ச்’ என்ற சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது சென்னையிலுள்ள தனியார் சுற்றுலா நிறுவனம். தமிழ்நாடு முழுவதும் வெளிநாட்டினர் ஆட்டோவில் சுற்றுலாவாக சென்று அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு, பிறகு தனது சொந்த நாடுகளுக்குத் திரும்புவார்கள். இதன்படி, 8வது ஆண்டான இந்த ஆண்டும் 'ஆட்டோ சேலஞ்ச்' சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது இந்நிறுவனம்.
கடந்த 28ஆம் தேதி சென்னையில் தொடங்கியது இந்த சுற்றுலாப் பயணம்.
இதில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 29 ஆண் பயணிகள், 19 பெண் பயணிகள் என மொத்தம் 48 சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 21 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, 21 ஆட்டோக்களில் சென்னையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர். பயணிகளே ஆட்டோக்களை ஓட்டி வந்தது கூடுதல் சிறப்பு.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்திலுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பண்ணையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பண்ணைக்குள் நுழைந்த பயணிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், கிராம மக்கள் மாலை அணிவித்து, பன்னீர் தெளித்து, ரோஜா இதழ்களைத் தூவி வரவேற்றனர்.

"த்தேங்யூ.. த்தேங்யூ டியர் சில்ரன்ஸ்..." என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.  நவீன உடைகளை அணிந்து வந்தவர்களிடம் புடவை, வேட்டி கொடுக்கப்பட்டது.  "வாட் இஸ் தி காஸ்டியூம்.." என்று சிரித்துக் கொண்டே தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.


"இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பண்பாடு, பழக்க வழக்கம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டுல பெண்கள் புடவையும், ஆண்கள் வேட்டியும் அணிவது வழக்கம். ’’நீங்களும் வேட்டி, சேலையைத்தான் கட்டிக்கணும்’’ என்று அவர்களுடன் வந்திருந்த சுற்றுலா வழிகாட்டி சொன்னதும்,

”ஓ.கே... வி ஆர் ரெடி வித் இன் டூ மினிட்ஸ், ஃபார் பொங்கல் செலிப்ரேசன்ஸ்..” என்று கூறி உடை மாற்றிகொண்டு வந்தார்கள். ஆனால், பெண் பயணிகளுக்கு புடவை கட்டத் தெரியாததால், கிராமத்து பெண்களின் உதவியுடன் புடவை கட்டிக்கொண்டு வருவதற்கு தாமதமாகிவிட்டது.

"பொங்கல் பண்டிகைக்கு முந்தையநாள் வீட்டுல உள்ள தேவையில்லாத பழைய பொருட்களை கழிச்சு, தீ போட்டு கொளுத்துவோம் அதுக்குப் பேரு போகிப்பண்டிகை, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுவதுதான் ரெண்டாவது நாளான ’தைப்பொங்கல்’, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மூன்றாவது நாள் கொண்டாடுவதுதான் 'மாட்டுப்பொங்கல்', சின்னஞ்சிறு குழந்தைகள் இருக்கிற வீட்டில் பொங்கல் வைக்குறதுதான் ’காணும்பொங்கல்’ அல்லது ’சிறுவீட்டுப் பொங்கல்’னு நாலு நாள் கொண்டாடுவோம்" என்று பொங்கல் பண்டிகையைப் பற்றி முன்னுரை கொடுத்த கிராமத்து சிறுமிகள், அடுத்து எப்படிப் பொங்கல் வைக்க வேண்டும் என்று கூறினர்.

வெளிநாட்டினர் பொங்கல் வைத்து முடித்ததும், அவர்கள் செய்த பொங்கலை தட்டுகளில் வரிசையாக வைத்தனர். சிறுமிகளே நடுவர்களாக இருந்து அனைவரது பொங்கலையும் ருசி பார்த்தனர். முதலில் பொங்கல் வைத்து முடித்த இங்கிலாந்து அணிக்கு ’செவ்வாழைத் தார்’ பரிசாக கொடுக்கப்பட்டது. பிறகு சாயர்புரம் கிராமத்து மக்களுடன் வட்டமாக உட்கார்ந்து தாங்கள் செய்த பொங்கலை சாப்பிட்டனர் அவர்கள்.


தன் அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆங்கர்ஸ், “நாங்க ரைஸ் அதிகமா சாப்பிடமாட்டோம். அப்படியேச் சாப்பிட்டாலும் குக்கர், இண்டக்ஸ்டன்லதான் குக் செய்து சாப்பிடுவோம். ஆனா, இங்க வித்தியாசமா பானையில ரைஸ்ஸை குக் செய்யுறாங்க. சிறுமிகள்கூட பொங்கல் எப்படி வைக்குறதுன்னு தெளிவா எங்களுக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க. அதையெல்லாம் குறிப்பெடுத்து வச்சுருக்கேன். எங்க நாட்டுல போயி நானும் பொங்கல் செஞ்சு கொடுப்பேன். தமிழ்நாட்டுப் பெண்கள் மூக்கு குத்தி, புடவை கட்டி, குங்குமம் வெச்சிருக்கிறது அழகாயிருக்கு. நானும் என் மனைவிக்கு மூக்கு குத்தி பார்க்கணும்னு ஆசைப்படுறேன். நாங்களும் புடவை, வேட்டி கட்டி தமிழர்களா மாறிட்டோம் ’’நவ் வி ஆர் தமிழன்ஸ்’’ என்று குதூகலமாக கூறினார்.

பிறகு கடலை எடுக்கும் போட்டி, கிராமியப் பாடலுக்கு நடனமாடும் போட்டி என பண்ணையே களை கட்டியது. பனங்கிழங்கு, கரும்பை ருசித்து சாப்பிட்டுக்கொண்டே எல்லோருக்கும் ’’நன்றி’’ என்று தமிழில் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.  இ.கார்த்திகேயன் படங்கள்  ஏ.சிதம்பரம் விகடன்.com

கருத்துகள் இல்லை: