ஞாயிறு, 18 ஜனவரி, 2015

தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு ஓடுவது ஏன்? கலைஞர் அறிக்கை!

கேள்வி :- ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு நடத்த நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுத் தர அ.தி.மு.க. அரசு தவறி விட்டதே?

கலைஞர் :- அ.தி.மு.க. அரசு எல்லாவற்றையும் போல, இந்தப் பிரச்சினையிலும் முன்கூட்டியே முயற்சி எடுத்து உச்ச நீதிமன்றத் தில் முறையான அனுமதியைப் பெற்றுத் தரத் தவறி விட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக முயற்சி எடுப்பது போல, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம், அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லி, அறிக்கைகள் விட்ட போதிலும், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற உண்மையான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற பகுதியிலிருந்து வந்திருக்கும் பன்னீர் செல்வமே, அந்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றிடத் தவறி விட்டார்.

;கேள்வி :- தொழிற்சாலைகளை மூடுவதில் தமிழகம்தான் முன்னிலை வகிப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- 2012-2013ஆம் ஆண்டில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களின் பட்டியலில், தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக மின் தட்டுப்பாடு காரணமாக, தமிழகத் தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்பட்டதை அடுத்து, வேலை இழந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விவரங்கள் தொழிற்சாலைகள் பற்றிய மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சணத்தில், ஒரு இலட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாட்டைக் கூட்டப்போகிறார்கள் என்பது வேடிக்கையாக இல்லையா?

கேள்வி :- நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், சிமெண்ட் குறைந்த விலையில் விற்கும் திட்டம் திருச்சியில் 5-1-2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறதே?

கலைஞர் :- 26-9-2014 அன்று முதலமைச் சராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் “அம்மா சிமெண்ட்” திட்டத்தை அறிவித்து, ஒரு மூட்டை சிமெண்ட் 190 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். 

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட “தினமலர்” நாளேடு, “கருணாநிதி கொண்டு வந்த திட்டம்” என்ற தலைப்பில் தி.மு.க. ஆட்சியில், மக்களுக்கு மலிவு விலையில் சிமெண்ட் வழங்க, 13 தனியார் நிறுவனங்களிடம், ஒரு மூட்டை 200 ரூபாய் என, கொள்முதல் செய்து, அதே விலைக்கு விற்கும் திட்டத்தை கருணாநிதி துவக்கினார். அதைப் பின்பற்றி தற்போது முதல்வர், “அம்மா சிமெண்ட்” திட்டத்தை அறிவித்துள்ளார்” என்று அப்போதே பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தது. ஜெயலலிதாவினால் திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்து விட்டன. தற்போதுதான் அந்தத் திட்டம் திருச்சியிலே தொடங்கப்பட்டுள்ளது.

இது ஒன்றுமாத்திரமல்ல; 18-12-2014 அன்று வெளிவந்துள்ள நாளேடுகளில், கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட் டிருப்பதாகச் செய்தி வந்தது. ஆனால் 12-8-2014 அன்று முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையிலேயே இது பற்றிய அறிவிப் பினைச் செய்து விட்டார். கேட்டால், “ இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு மாதக் கணக்கில் ஆனாலும், குறைந்தபட்சம் அதைத் தொடங்கு வதாக அறிவிக்கிறோம் அல்லவா? மற்ற திட்டங்கள் எல்லாம் தொடங்கப்படவே இல்லையே, அதற்கென்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்பார்கள்!

கேள்வி :- போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கே காரணமான அ.தி.மு.க. அரசு, அந்த வேலை நிறுத்தத்தை எவ்வாறு கையாண்டது?

கலைஞர் :- இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பதைவிட “ஜூனியர் விகடன்” இதழ், புகைப்படங்களோடு வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். “தமிழக அளவில் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள். 2001இல் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதுதான் இதே போன்றதொரு போராட்டம் நடத்தப்பட்டது. 

இப்போது அதே பன்னீர்செல்வம் ஆட்சியில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு போராட்டம்! இந்தப் போராட்டத்தை உடைக்க மொத்த கேபினெட்டும் பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து “டாப் கியர்” போட்டது ஆச்சர்யம்தான். அம்மாவுக்காக கோயில்களை வலம் வரும் மந்திரிகள் அரட்டல், உருட்டல், மிரட்டல், கெஞ்சல் என டிப்போக்களில் நடத்திய அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. 

“அந்தந்த மாவட்டத்தில் பஸ்களை ஓட வைப்பது மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரிகளின் பொறுப்பு” என உத்தரவு வர, களத்தில் குதித்தனர் மந்திரிகள். இவர்களுக்குப் பின்னால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மேயர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என ஒரு படையே சேர்ந்து கொள்ள, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குள் பாய்ந்தனர் மந்திரிகள். 

பஸ் டெப்போவுக்குள் தங்கள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைவது மாதிரி ஆளும் கட்சியினர் புகுந்து விட்டனர். மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உதவியாகச் செயல்பட்டனர்.

“பஸ் டெப்போ மேனேஜர்” என்ற அவதாரத்தை எடுத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அமைச்சரும்,
கலெக்டர் சுப்ரமணியனும் மதுரை மாவட்டத்தில் உள்ள 15 டெப்போக்களுக்கும் விசிட் அடித்தனர்.
“டவுன் பஸ்ஸை நீ ஓட்டு, ரூட் பஸ்ஸை அவர் ஓட்டட்டும்” என்று ஒவ்வொரு பஸ்ஸுக்கும் டிரைவர், கண்டக்டர்களை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் செல்லூர் ராஜு. வேலூர் பஸ் நிலையத்துக்குள் புகுந்த அமைச்சர் கே.சி. வீரமணி, “வேற டிரைவர் ஏற்பாடு பண்ணியாச்சு, கவலைப்படாம போங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கடலூரில் அமைச்சர் எம்.சி. சம்பத், குடையும் கையுமாக காரை விட்டு இறங்கி, கட்சிக்காரர்களை ஏவி விட்டார்.”

ஆளுங்கட்சி அமைச்சர்கள் இந்த வேலை நிறுத்தத்தை எவ்வாறு கையாண்டார்கள் என்று ஜூ.வி.
தொடர்ந்து மேலும் ஒவ்வொரு அமைச்சர்களும் என்னென்ன செய்தார்கள் என்று விரிவாக  எழுதியுள்ளது. இதை விட விரிவாக “நக்கீரன்” இதழ் அ.தி.மு.க.வினரும், அமைச்சர் களும் எந்த
அளவுக்கு மோசமாக இந்தப் போராட் டத்தை ஒடுக்க நடவடிக்கைகளை மேற்கொண் டார்கள் என்று
எழுதியுள்ளது. 

அரசுப் பேருந்தை ஆளுங்கட்சியினர் சிலர் ஓட்டுனர் இடத்திலே அமர்ந்தும், வேறு சிலர் நடத்துனர் பணியிலே ஈடுபட்டும் இருந்த காட்சிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு ஏடுகளிலேயே வெளிவந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சியங்கள்.

கேள்வி :- திட்டக்குழு என்ற அமைப்பினை மத்தியக் கொள்கைக் குழு என்ற புதிய அமைப்பாக மாற்றியிருக்கிறார்களே?

கலைஞர் :- “கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையிலே வை” என்பதைப் போல மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றபோது, அவசர அவசரமாக பண்டித நேரு காலத்திலிருந்து கடந்த 65 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, “மத்திய கொள்கைக் குழு” என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.

கொள்கைகளை இந்தக் குழு வகுக்குமென்றால், அந்தக் கொள்கைகளை திட்டமாக தீட்ட வேண்டாமா? மேலும் இந்தக் குழு வுக்கு “நித்தி ஆயோக்” என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. “நித்தி ஆயோக்” என்றால் என்ன பொருள் என்றே பொதுமக்களுக்கு விளங்க வில்லை. மத்திய அளவில் திட்டக்குழு கலைக்கப் பட்டு விட்டால், மாநிலங்களிலே தற்போதுள்ள திட்டக் குழுக்களின் கதி என்ன? தேவையில்லாத இப்படிப்பட்ட அறிவிப்புகளை மத்திய அரசு தவிர்த்து விட்டு மக்கள் நலம் நாடும் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவதில் கவனம் செலுத்தினால் நாட்டிற்கும் நல்லது, நாட்டு மக்களுக்கும் நல்லது.

கேள்வி :- நான்காண்டு காலம் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் என்று நீதிமன்றமே தண்டனை விதித்த ஒருவரை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் எல்லாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் சென்று சந்தித்திருக்கிறார்களே, அது சரிதானா?

கலைஞர் :- நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை தமிழக அமைச்சர்கள், அவர்களுடைய கட்சியின் தலைவர் என்ற முறையில் சென்று சந்திப்பதில் தவறில்லை. ஆனால் அரசு ஊதியம் பெறும் அதிகாரிகள், தண்டனைக்கு ஆளான ஒருவரைச் சென்று இவ்வாறு சந்திப்பது முறையல்ல என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்து. 

தமிழக அரசின் அதிகாரிகள், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா வைச் சந்தித்த போது, “அரசின் செயல்பாடுகள், பொங்கலுக்கு இலவசப் பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது”என்றெல்லாம் செய்திகளும் வந்துள்ளன. மேலும் இந்த ஆட்சியில் எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும், ஜெயலலிதாவின் ஆணைப்படியோ அல்லது விருப்பப்படியோ நிறைவேற்றுவதாகத் தான் வெளியிடுகிறார்கள். 

போக்குவரத்துத் தொழி லாளர்கள் பிரச்சினையில், “மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி 12வது ஊதிய ஒப்பந்தத்திற்கான 11 பேர் குழு அமைப்பு” என்றுதான் ஆளுங்கட்சி நாளேட்டில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டார்கள். காரணம், அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அப்படி யெல்லாம் செய்தால்தான் தாங்கள் பதவியிலே தொடர முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது. 

திரையரங்குகளில் கல்வித் துறை சார்பில் காட்டப்படும் விளம்பரத்திலே கூட முதலமைச்சர் ஜெயலலிதா என்றுதான் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு சார்பில் வெளியிடப்படும் “காலண்டரில்” முதல் அமைச்சரின் உருவப்படம்தான் இடம் பெறும். ஆனால் இந்த ஆண்டு முதல் அமைச்சரின் படமே அதிலே இல்லை. 

இதிலிருந்து தமிழகத் திலே யார் கூறுகிறபடி ஆட்சி நடைபெறுகிறது, இதெல்லாம் அரசியல் சட்ட நெறிகளின்படி முறைதானா என்பது சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் விசாரணை நடைபெறுகிற போதுதான் வெளிப்படையாகத் தெரியும்.

கேள்வி :- சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலைகள் வெகுவாகச் சரிந் துள்ள நிலையில், இந்திய அரசு அவற்றின் மீதான கலால் வரியை உயர்த்திட முடிவு செய்திருக்கிறதே?

கலைஞர் :- பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதைப் போலக் காட்டிக் கொண்டு, அதே நேரத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு இன்று இரண்டு ரூபாய் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கவிடாமல், பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை வெளிப்படையாக உயர்த்தினால் மக்களின் கண்டனத்தைச் சந்திக்க வேண்டு மென்பதற்காக, கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்வதைப் போலக் காட்டிக் கொள்ள, அவற்றின் மீதான கலால் வரிகளை உயர்த்திட எண்ணுகிறார்கள்.

 தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக இலாபம் பெற்றிட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது. கலால் வரியை ஏற்கனவே உயர்த்தியதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கக் கூடும். தற்போது செய்துள்ள வரி உயர்வின் மூலம் அரசுக்கு மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதை நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டித்திருக்கின்றன. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மட்டும் இதுவரை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது, தற்போது 46 டாலராக விலை குறைந்துள்ளது; அதாவது 60 சதவிகித அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால் இந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்து, பலன் முழுவதையும் நுகர்வோருக்கு வழங்கிட மத்திய அரசுக்கு மனமில்லை. 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, சர்வதேச சந்தையில் சுமார் 60 சதவிகிதம் வரை கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் போது, வெறும் 13 ரூபாய் அளவுக்கு மட்டுமே பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் 45 ரூபாய் வரை குறைத்திருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் வரியோடு சேர்த்து முப்பது ரூபாய்க்குத்தான் விற்க வேண்டும். ஆனால் நேற்றுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் 63.94 ரூபாய்க்கு விற்றது, இன்று முதல் 61.38 ரூபாய்க்கு வந்துள்ளது. அதைப் போலவே ஒரு லிட்டர் டீசல் விலை 53.78 ரூபாயிலிருந்து
இன்று முதல் 51.34க்குக் குறைக்கப்பட்டுள்ளது. 

இது மேலும் குறைக்கப் பட வேண்டுமென்பது தான்மக்களின் கோரிக்கை. பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறையும் என்பதோடு, தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும் என்பதால், மத்திய அரசு நியாய உணர்வோடு பெட்ரோல், டீசல் விலைகளை மறு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கேள்வி :- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை யொட்டி விடுத்துள்ள அறிக்கையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நாம் ஒவ்வொருவரும் உயிராக மதிக்கிறோம்” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- திருவரங்கம் தொகுதியில் அடுத்த மாதம் இடைத் தேர்தல் வருகிறதல்லவா? எம்.ஜி.ஆருக்குப் பிறந்த நாள் வாழ்த்தும் கூறுவார், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வாழ்த்தும் கூறுவார். ஆனால் இதற்கு சில நாட்களுக்கு முன்பு வந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கும், அதற்கு முன்பு வந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கும் வாழ்த்துக் கூறவில்லையே, ஏன்? எம்.ஜி.ஆருக்கு தற்போது புகழ் மாலை சூடும் ஜெயலலிதா, அவர் உயிரோடு இருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு சேலம் கண்ணன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பியது தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? ஜெயலலிதா அப்போது தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் “மக்கள் குரல்” ஏட்டிலேயே அப்போது “பிளாக்” செய்து வெளியிடப்பட் டிருந்ததே?

 அதாவது, “மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர்
(எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப் படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல
காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால்
முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்” என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.

அது மாத்திரமல்ல; அதே கடிதத்தில், (எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்) என்றெல்லாம் எழுதியவர், இன்றைக்கு தானே முன் வந்து சென்னை விமான நிலையத்திற்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கேட்க முன் வந்திருப்பது கண்டு, பாசத்தாலா அல்லது பதவி ஆசையினாலா எனத் தமிழ் மக்கள் சந்தேகிப்பது இயல்பானதுதானே?

மேலும் 1.1.1989 ‘மக்கள் குரல்’ இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறும்போது, “அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள்.

 சும்மா ஓடுகிற ஓணானை முகத்திலே நுழைய விட்ட கதையாக என் விஷயம் ஆகிவிட்டது இப்போது. இந்த அம்மு அபாயகரமானவள். யாரையும் அவள் தனக்காகப் பயன்படுத்துவாள். எதையும் செய்யத் தயங்கமாட்டாள். மிகவும் கெட்டவள்” என்று சொன்ன கருத்தை “மக்கள் குரல்” ஆசிரியர் டி.ஆர். ராமசாமி அவரது பத்திரிகையில் அப்போதே வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று கருதிக்கொண்டு, தற்போது ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்குக் காகிதப் புகழ் மாலை சூட்டிப் பாசாங்கு காட்டியிருக்கிறார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: