வியாழன், 22 ஜனவரி, 2015

அந்த 323 தொலைபேசி இணைப்புக்கள் ! தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர், சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது

சன் தொலைகாட்சிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கெளதமன், சன் டி.வி. ஊழியர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இது குறித்த விவரம்: திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.
அதன்படி தயாநிதி மாறன், 2007-இல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே. பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன் தொலைக்காட்சியின் உயர் பதவிகளில் இருந்தவர்களிடமும் சிபிஐ விசாரித்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி. கெளதமனை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவருடன் சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ். கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ். ரவி ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: முறைகேடான தொலைத்தொடர்பு இணைப்பகம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்காக வி. கௌதமன், கண்ணன், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்படுவர்.
இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் தயாநிதி மாறன், பிஸ்.எஸ்.என்.எல். முன்னாள் முதன்மைப் பொது மேலாளர் கே. பிரம்மநாதன் உள்ளிட்டோர் பெயர்களை சிபிஐ சேர்த்திருந்தது.
சுமார் 323 சக்தி வாய்ந்த பி.எஸ்.என்.எல். இணைப்புகள் சென்னை போட் கிளப் பகுதியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பின்னர், இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டன.
இந்த இணைப்புகள் சாதாரண இணைப்புகள் இல்லை. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தேவையான சக்தி வாய்ந்த இணைப்புகள் ஆகும். இந்த இணைப்புகளை முறைப்படி பெற வேண்டுமானால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
இதனால், முறைகேடாக இந்த இணைப்புகள் சன் தொலைக்காட்சிக்கு பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. dinamani.com

கருத்துகள் இல்லை: