புதன், 25 ஜூன், 2014

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சூடான் பெண் விடுதலையான பின் மீண்டும் கைது

ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்தவர் மெரியம் அட்ராப் அல் ஹாடி முகமது அப்துல்லா. இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தந்தை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் சிறு வயதில் இருந்தே இவர் தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்தார். எனவே கிறிஸ்தவராக வளர்ந்த இவர் தனது பெயரை மெரியம் யெக்யா இப்ராகிம் இசாக் என மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இதற்கிடையே, இவர் மதம் மாறி திருமணம் செய்ததாக கூறி அவர் மீது கார்டோம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சூடான் ஒரு முஸ்லிம் நாடு. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு மதத்தினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை. இதற்கிடையே இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மதம் மாறி திருமணம் செய்த மரியத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


இதற்கிடையில், சிறை ஆஸ்பத்திரியில் மெரியம்முக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்தது. மதரீதியான தண்டனை என்ற வாதத்தை கைவிட்டு, மனிதநேய அடிப்படையில் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சூடான் அரசை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் மெரியம் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மெரியத்துக்கு மரண தண்டனை விதித்து வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி, அவரை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலையாகி விட்டதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பான ஒரு ரகசிய இடத்தில் அவரை தங்க வைத்துள்ளதாகவும் அவரது வக்கீல் மொஹனெட் முஸ்தபா தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்நாட்டு அரசு அவரை கைது செய்திருப்பதாக கூறியுள்ளது.

கார்டோம் விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மெரியம் தனது குடும்பத்தாருடன், கெய்ரோ அல்லது ஜுபா வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டியே அவரும் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் கைது செய்ப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: