வியாழன், 2 மே, 2013

லாகூர் : சரப்ஜித் சிங் அதிகாலை மரணமடைந்தார்.

லாகூர்: கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங் அதிகாலை மரணமடைந்தார். இந்நிலையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை பாக். ஊடகங்கள் உறுதி செய்தன.
முன்னதாக அவருக்கு மூளைச் சாவு ஏற்படலாம் என, லாகூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர், சரப்ஜித் சிங், 49. பாகிஸ்தானில், 1994ல் நடந்த குண்டு வெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு, பாகிஸ்தான் கோர்ட், மரண தண்டனை விதித்தது.லாகூரில் உள்ள, கோட்லாக்பட் சிறையில் அவர், அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 26-ம் தேதியன்று , சிறையிலிருந்த சக கைதிகள் 6 பேர், சரப்ஜித் சிங்கை, செங்கற்கள் மற்றும் சாப்பாட்டு தட்டுகளால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலையில், ஜின்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சரப்ஜித் சிங்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது மூளையின் நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு மீண்டும் நினைவு திரும்பாமல் கோமா நிலையில் இருந்தார். இந்த நிலை நீடித்தால், மூளைச் சாவு ஏற்பட்டு விடும்.அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என கூறி வந்தனர்.


முன்னதாக பாக். டாக்டர்கள் கூறுகையில், அரசு அறிவித்தால் மட்டுமே நாங்கள் பகிரங்கமாக மூளைச்சாவை அறிவிக்க முடியும் என்றனர்.

தாயகம் திரும்பிய குடும்பத்தினர்

சரப்ஜித் சிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், அவரை பார்க்க, அவரது மனைவி, இரண்டு மகள்கள், சகோதரி தல்பீர் கவுர் ஆகியோருக்கு இரண்டு வார கால விசா வழங்கப்பட்டது.இவர்கள் சரப்ஜித் சிங்கை பார்த்து விட்டு, நேற்று, வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர்.

நேற்று சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கவுர், உண்ணாவிரதம் மேற்கொண்டார். என் சகோதரனை காப்பாற்ற, இந்திய அரசு தவறிவிட்டது. உயிருக்கு போராடும் சகோதரனுக்கு இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ, நல்ல சிகிச்சையளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை,'' என தெரிவித்தார். ஆனால் அதற்குள்ளாக சரப்ஜித்சிங்கின் உயிர் பிரிந்து விட்டது.

கருத்துகள் இல்லை: