சாதி வெறி கூட்டணிமிழ்நாட்டை பீடித்திருக்கிறது ஒரு பாசிச அரசியல் கும்பல். சில ஆயிரம் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்தி வரும் ராமதாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தனது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடும் உத்தியை வந்தடைந்திருக்கிறார்.
இந்திய அளவில் இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து செயற்கையான எதிரியை உருவாக்குவது போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஆதிக்க சாதி குடும்பங்களின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் ராமதாசின் தலைமையிலான வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும்.
“தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு வந்து வேறு சாதி பெண்களை மயக்கி காதலித்து திருமணம் செய்து விடுகிறார்கள்” என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊர் ஊராக போய் நடத்தி வருகின்றார் ராமதாஸ்.
2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு விழா மாநாட்டில் “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” என்று காடுவெட்டி குரு பேசினார்.

அந்த மாநாட்டைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தருமபுரியில் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் இளவரசன்-திவ்யா காதல் பிரச்சனையில் தலையிட்டு 300 தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளை அடித்து உடைத்து நாச வேலை செய்தனர். தொடர்ந்து, பல ஊர்களில் காதலித்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் கொலை, இளம் பெண்கள் கொலை என்று வன்முறை நிகழ்வுகளுக்கு வித்திட்டனர் பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும்.
வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டு, ஆதரித்து பேசிய வன்னியர் சங்கத்தின் மீதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் உரிய சட்டப் பிரிவுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஜெயா அரசு.
தனது ‘கலாச்சாரக் காவலன்’ வேடத்தை அணிந்து கொண்டு ராமதாஸ், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் பயணம் செய்து அந்தந்த பகுதியில் உள்ள ஆதிக்க சாதி அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டம் நடத்தினார். ‘வீட்டுப் பெண்களை மயக்குகிறார்கள்; பெண்ணை திருமணம் செய்து சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள்’ என்ற பிரச்சாரம் ஒரு சராசரி நடுத்த வர்க்கமாயும் ஆதிக்க சாதியுமாய் இருப்பவர்களை இழுத்தது.
இதை அடிப்படையாக வைத்து சாதி சங்கங்கள் என்ற பெயரில் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து நடத்தி உள்ளூர் தாதாக்களாக விளங்கும் பல்வேறு ஆதிக்க சாதி சங்க நபர்களை ஒருங்கிணைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் ஒரு பலமான சக்தியாக வளர்ந்து விடலாம் என்று திட்டமிடுகிறார் ராமதாஸ்.
மக்களிடையே சாதியின் பெயரால் பகைமையை வளர்த்து குளிர் காய நினைக்கும் வன்னியர் சங்கத்தை தடை செய்து ராமதாசையும், அவரது கும்பலையும் வன் கொடுமை சட்டத்தின் கீழும் குண்டர்களும் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல், ஓரிரு மாவட்டங்களில் ராமதாஸ் நுழையத் தடை என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு மூலம் நாடகமாடியது ஜெயலலிதா அரசு. தேவைப்படும் போது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து சுதந்திரமாக நடமாடி விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார் ராமதாஸ்.
pmk-crowdபெரும்பான்மை வன்னியர்களிடையே அவரது அரசியலுக்கு ஆதரவு குறைந்து விட்ட நிலையில், வன்முறையை தூண்டி விடுவது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது பகைமையும், வன்மத்தையும் வளர்ப்பது என்ற அரசியலை தொடர முடிவு செய்து ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா என்று மாநாடு ஒன்றை நடத்தினார்கள் வன்னியர் சங்கத்தினர்.
‘ஒரு கோடி வன்னியர் குடும்பங்கள் கூடும் மாநாடு’, ‘நாங்க வாளை உறையிலிருந்து வெளியில் எடுத்தா ரத்தம் பார்க்காம உள்ளே போகாது’ என்றெல்லாம் முட்டாள்தனமான அதே நேரம் வெறித்தனமான கோஷங்களுடன், ஆங்காங்கே கட்சி பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வளர்ந்திருக்கும் அரசியல் ரவுடிகள் திரட்டி வந்த ஆட்களை வைத்து மாநாடு நடத்தினர். போக வர வாகன வசதி; போகும் போதும், வரும் போதும், மாநாட்டின் போதும் குடிப்பதற்கு டாஸ்மாக் சரக்கு; பிரியாணி; மாமல்லபுரத்தில் குத்தாட்டம்; போன்ற கவர்ச்சிகளுடன் சில பல ஆயிரம் பா.ம.க.வினர் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
மாமல்லபுரம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதிலிருந்தே அந்த மாநாட்டின் வெறி மற்றும் ‘வீரத்’ தன்மையை புரிந்து கொள்ளலாம். அந்த உதிரிகள்தான் போன வழியெல்லாம் அராஜகம் செய்து குடித்து கும்மாளமிட்டிருக்கின்றனர்; பெண்களை கேவலமாக பேசியிருக்கின்றனர்; வீடுகளை அடித்து உடைத்திருக்கின்றனர். இவர்களால் பாமகவிற்கு ஓட்டுப் பொறுக்குவதற்கு கூட லாயக்கில்லை.
“மாநாட்டுக்கு வரீங்க, ஆனா தேர்தல்ல ஓட்டு போட மாட்டேங்கறீங்க” என்று மேடையில் தலைவர்கள் புலம்புமளவுக்குத்தான் அந்த கூட்டம் இருந்தது. கூடிய நபர்களில் ஆளுக்கு 10 ஓட்டை வாங்கிக் கொடுத்தால் சில தொகுதிகளில் டெபாசிட்டாவது வாங்க முடியும். ஆனால், சென்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் டெப்பாசிட் வாங்குவதே முடியாது என்ற நிலையில்தான் இவர்களது கட்சி செல்வாக்கு இருக்கிறது.
மத்திய அரசில் அமைச்சர் பதவிகள் வகித்து அடித்த கொள்ளைப் பணத்தில் தொலைக்காட்சி, நாளிதழ் என்று தி.மு.க., அ.தி.மு.க. வணிக சாம்ராஜ்யங்களைப் போல தாமும் கட்டியமைக்க முயற்சித்தும் செல்ப் எடுக்கவில்லை.
இந்த சாதி வெறிக் கும்பலை கைது செய்து, வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டிய தமிழக அரசோ சட்ட வாதம் பேசி நாடகமாடுகிறது. ‘பிளெக்ஸ் பேனரில் வீரப்பன் படத்தை போட்டு விட்டார்கள்’, ’10 மணிக்கு முடிக்க வேண்டிய கூட்டத்தை 11.30 வரை நீட்டித்தார்கள்’, ‘குடித்து விட்டு மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தினார்கள்’, ‘அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்’ என்று உப்புச் சப்பில்லாத பிரிவுகளில் வழக்குகளை தொடுக்கிறது ஜெயா அரசு.
வன்னியர் சங்கம்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கொலைவெறியைத் தூண்டினார்கள் என்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் வகையில் வன்முறை பிரச்சாரம் செய்தார்கள் என்று குண்டர்கள் சட்டத்தின் கீழும் ராமதாசையும், காடுவெட்டி குருவையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய ஜெயலலிதா, “நீங்கள் வழக்கு போடச் சொன்னீர்கள், போட்டு விட்டோம், அதை எதிர் கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்கள்’ என்று ராமதாசுடன் செல்லமாக வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்.
தி.மு.க.வின் தலைவரோ கள்ள மௌனம் சாதிக்கிறார்.
இதற்கிடையே ராமதாஸ், ஜி கே மணி, காடுவெட்டி குரு கைதைத் தொடர்ந்து பா.ம.க. ரவுடிக் கும்பல் வட மாவட்டங்கள் எங்கும் பேருந்துகளை கொளுத்துவது, கல் எறிவது என்று நாச வேலைகளில் இறங்கியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் இரண்டு பிரதான ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுமே ஓரிரு சீட்டுகளை கொடுத்து பா.ம.க.வை தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் சாத்தியத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல், ராமதாசின் நச்சு அரசியலுக்கு பால் வார்க்கின்றனர். இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளால் சாதி வேறுபாடுகளை ஒழிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
உழைக்கும் வன்னிய மக்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களின் ஆதரவுடன் ராமதாஸ், குரு மீது வன்கொடுமை சட்டம், குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும், வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் உடனே தடை செய்ய வேண்டும் என்றும் நாம் போராட வேண்டும்.vinavu.com