வெள்ளி, 1 மார்ச், 2013

Maharashtra செழுமையும் மறுபகுதி வறட்சியும்


எவ்வாறு மறுபகுதி வறண்டு போகிறது ?
“அடுக்குமாடி குடியிருப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக் கனவு. அரசனின் மகுடத்தின் உச்சியில் பதிக்கப்படும் நவரத்தினம் போன்றது இது.”  படாடோபமான வாழ்க்கை முறை அவற்றை இன்னும் பெரியதாகச் சொல்கிறது.  ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திலும் சொந்தமாக நீச்சல்குளம் இருக்கிறது.  “மிக ஆடம்பரமானது”, “சிறப்பான கலைநயமான வடிவமைப்புகள்” “உங்கள் வாழ்நிலை உயர்வுக்கு பொருந்தும் அமைப்புகள்” என்று விளம்பரங்கள் பளபளக்கின்றன.
 தோட்டங்களுடன் கூடிய தனி வீடுகளை (வில்லா) உருவாக்குபவர்களும் கட்டடக் கட்டுமான முதலாளிகளும் இப்படிப்பட்ட குடியிருப்புகளை “முதல் தரத்தில் மதிப்பிடக் கூடியவை” என்று உயர்வாக சொல்கின்றனர்.  அவை 9000 முதல் 22000 சதுர அடி அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் நீச்சல் குளம் உண்டு.  இன்னும் வரவிருக்கிற ஒரு குடியிருப்பு வளாகத்தின் உச்சியில் அதாவது மேல்தளத்தில் ஓர் ஆச்சர்யம் அமையவிருக்கிறது. ஆம், நீங்கள் அனுமானிப்பது போல் அங்கும் ஒரு நீச்சல் குளம் இருக்கும்.

இவையெல்லாம் புனே நகரத்தில் மட்டும்.  இவையனைத்துக்கும் கூடுதலான வசதிகளோடு, கூடுதலான தண்ணீரும் தேவைப்படுகிறது. ஒரு சிறிய ஆனால் கர்வம் கொள்ள வைக்கும் போக்கு யாதெனில், இன்னும் இது போல் நிறைய வரப்போகிறது என்பதுதான்.  எந்த மண்டலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வறட்சி நிலவி வருகிறதோ, அங்குதான்  இவையனைத்தும் தற்போது தோன்றியுள்ளன.  மகாராஷ்டிராவில் அதன் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவாண் பார்வையில், அந்த மாநிலம் இது வரை சந்தித்திராத மிக மோசமான வறட்சியைச் சந்திக்கிறது.  அந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தற்போது தண்ணீர் லாரியின் வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றன.  ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் லாரி வந்தால் நீங்கள் அதிருஷ்டசாலி. இல்லாவிட்டால் வாரத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வரும்.
ஆம், நீச்சல் குளங்களுக்கும், வறண்ட ஏரிகளுக்குமிடையே தொடர்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அது பற்றி நிச்சயமாக சிறிய அளவிலான விவாதம்கூட இல்லை.  கடந்த 24 ஆண்டுகளில், 12-க்கும் மேற்பட்ட நீர் நிலை பூங்காக்கள், செயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், நீர் விளையாடு களங்கள் உள்ள (தீம் பார்க்) பொழுதுபோக்கு பூங்காக்கள் தோன்றியுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.  ஆனால் ஒரு கட்டத்தில் அவை மாநகர் மும்பையில் மட்டும் இருப்பனவாக அமைந்தது.
பெரிய அளவிலான மாற்றங்கள்

மாநிலம் முழுவதும் அனைத்து வறட்சி பாதித்த மண்டலங்களிலும் நம்பிக்கையின்மை வளர்ந்தது.  7000 கிராமங்களுக்கு மேல் கடுமையான வறட்சி அல்லது உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.  அலுவலக விவரங்களின்படி இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மண்டலங்களும் மோசமடைந்து வருகின்றன.  ஆனால் வறட்சி பாதித்த பகுதி என வகைப்படுத்தப்படவில்லை. அது போல் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் மிகச் சிலர் சிறிய அளவில் உதவிகள் பெற்றனர்.  அதாவது அந்தப் பகுதிகளுக்கு தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.  ஏறக்குறைய ஐம்பது லட்சம் கால்நடைகள் வளர்ப்பு முகாம்களை நம்பியிருக்கின்றன.  நம்பிக்கையின்மையின் காரணமாக கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.  நீர் தேக்கங்களில் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பு இருந்தது.  சிலவற்றில் அவையும் இன்றி வறண்டிருந்தன.  ஆனால் 1972ல் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்கு பிறகு தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியாகும்.
கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பிவிடப்பட்டது.  அதே போல் வாழ்க்கை தரத்தை மாற்றிக் காட்டுகிறோம் என விளம்பர உத்தியை கையாண்ட வியாபார நிறுவனங்களுக்கும் தண்ணீர் பெருமளவில் அளிக்கப்பட்டது.  கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அவ்வாறு திருப்பிவிட்ட வகையில் மக்களின் ரத்தம் சிந்தப்பட்டது.  மாவல் நகரத்தில் 2011ல் கோபமுற்ற விவசாயிகளை நோக்கி காவல்துறையினர் சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் காயமுற்றனர்.  பாவனா அணையிலிருந்து பிம்ரிசின்ச்வாட் எனுமிடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல விளைநிலங்களின் வழியாக குழாய்கள் அமைத்த அரசின் நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் போராடியபோது அந்த சம்பவம் நடைபெற்றது.
இதனால் ஏற்படப்போகும் நீர் இழப்பை கணக்கிட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  அந்த நேரத்தில் அரசு சுமார் 1200 பேர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தது.  வன்முறையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது.
துணை முதலமைச்சர் அஜித்பவார் அவர் பங்கிற்கு விவசாயத்தை மூடும் வகையில் தொழிற்சாலைகளின் கட்டுபாட்டில் நிலங்களை கொண்டு வந்தார்.  இன்னும் சற்று மோசமாகும் வகையில் சட்டத்திருத்தமே அவரால் கொண்டு வரப்பட்டது.  ஏற்கெனவே மோசமாக உள்ள மகாராஷ்டிரா நீர்வள சீரமைப்பு அதிகார ஆயச்சட்டத்தில் ஒரு புதிய ஷ‌ரத்தைச் சேர்த்து தண்ணீர் விநியோக கொள்கை முடிவை யாரும் எதிர்க்க இயலாத வண்ணம் தடை ஏற்படுத்தினார்.
பொழுது போக்கு கேளிக்கைகளுக்கு தண்ணீரை திருப்பிவிடுவது ஒன்றும் புதிதல்ல என்ற போதிலும், 2005ல் பெரிய அளவில் கேளிக்கை மற்றும் உணவு கிராமம், நீர் விளையாட்டுகள் நிறைந்த மகிழ்வு பூங்காக்கள் ஆகியவை நாக்பூர் மாவட்ட ஊரக பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.  உண்மையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிய நேரம் அது. அந்தக் கேளிக்கை கிராமத்தில் 18 விதமான நீர் வீழ்ச்சிகள், நீர் விளையாட்டு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  அந்த இடத்தில்தான் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை பனி மலை மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் அமையப்பெற்றது.  47 டிகிரி வெப்பம் நிலவுகையில் தொடர்ந்து பனிக்கட்டியாக பராமரிப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல.  அதற்கு மிக அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், அந்த மண்டலத்தில் வசித்த சாதாரண மக்களுக்கு 15 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டது.  மேலும் அதிக அளவிலான நீரும் அதற்காக செலவிடப்பட்டது.
 லாவாசா மற்றும் விவசாயம்
கடந்த ஆண்டுகளில் சில கோல்ப் மைதானங்கள் தோன்றியதும் இந்த மாநிலத்தில்தான்.  ஆழ்துளை குழாய்கள் பதிக்கப்பட்டு தற்போது 22 மைதானங்கள் உள்ளன.  கோல்ப் மைதானத்தை பராமரிக்க மிகுதியான தண்ணீர் செலவழிக்கப்படுகிறது.  கடந்த காலங்களில் இதனால் விவசாயிகளிடம் கோபத்தை விளைவித்து பல மோதல்கள் நடைபெற்றுள்ளது.  கோல்ப் மைதானங்களைப் பராமரிக்க அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகள் தூவப்படுவதால் அவை மற்ற நீர் ஆதாரங்கைளயும் மாசுபடுத்துகிறது. இவற்றுக்கு அப்பாற்பட்டு “சுதந்தர இந்தியாவின் முதல் மலை நகரம்” என்றழைக்கப்படும் லாவாசா திட்டத்துக்காக பெருமளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து பல எதிர்ப்பு இயக்கங்களை நாங்கள் இந்த மாநிலத்தில் பார்க்க முடிந்தது.
மாநிலத்தில் மிகுதியான வறட்சி நிலவுகையில் தனது குடும்ப திருமணத்தை ஆடம்பரமாக நிகழ்த்தியதற்காக சரத்பவார் தனது சொந்த கட்சியின் அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் என்பவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்காக பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.  ஆனால் மத்திய விவசாயத் துறை அமைச்சரான பவார் எப்போதும் லாவாசா திட்டத்தைப் பற்றி பெருமை பேசுவதிலேயே நேரத்தைச் செலவழித்தார்.  லாவாசா திட்டம் குறித்து இணையத்தளத்தில் உள்ள புள்ளி விவரங்களிலிருந்து 0.87 டிஎம்சி தண்ணீரை இருத்தி வைக்க அனுமதி உள்ளதாக தெரிய வருகிறது.  அதாவது ஏறக்குறைய 24.6 பில்லியன் லிட்டர் தண்ணீர் ஆகும்.
எந்த மாநிலமும் குறைவான பாசனத்துக்கு மிகுதியான பணம் செலவழிப்பது இல்லை.  பொருளாதார ஆய்வறிக்கை 2011-12 லிருந்து கடந்த 12 ஆண்டுகளில் 0.1 சதவீத நிலங்களில்தான் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிய வருகிறது.  அதாவது இந்த மாநிலத்தில் 18 சதவீதத்திற்கு குறைவான நிலங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
பத்தாயிரம் கோடிகளில் பணம் செலவழிக்கப்பட்டு பல கோடீஸ்வரர்களை உருவாக்குகிறது. மறுபுறம் மிகக் குறைவாகவே பாசனம் மேற்கொள்ளப் படுகிறது.  விவசாயம் குறைந்து கொண்டே வரும் அதே நேரத்தில் பெரும் அளிவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டது. (2011-12 பொருளாதார ஆய்வின்படி உணவு தானிய உற்பத்தியில் 23 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது).
ஒருபுறம் உணவு தானிய உற்பத்தி குறைந்த போதிலும் மகாராஷ்டிராவில் மூன்றில் 2 பங்கு நிலங்களில் வறட்சி மிகுந்து, தண்ணீர் கிடைக்காத நிலையிலும் கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.  ஒரு மாவட்ட ஆட்சியர்கூட இந்த வறட்சி காலத்தில் கரும்பு பிழிவதை நிறுத்த தலைப்படவில்லை.  கரும்பாலைகள் தினசரி 90 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தின.  சர்க்கரை ஆலை முதலாளிகளின் அதிகாரத்தால் கரும்பு பிழிவதை தற்காலிக இடை நீக்கம் செய்வதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர்கள் தற்காலிக இடை நீக்கம செய்யப்பட்டனர்.
ஒரு ஏக்கரில் பயிராகும் கரும்புக்கு தேவையான தண்ணீரை கொண்டு 10 முதல் 12 ஏக்கர் நிலங்களில் ஜோவார் போன்ற உணவுப் பயிர்களை விளைவித்துவிட முடியும்.  மகாராஷ்டிராவில் பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரில் பாதி இந்த கரும்பிற்கு செல்வதால், 6 சதவீத நிலங்கள் மட்டுமே பாசனம் பெறும் பகுதியாக இருந்தது.  கரும்புக்கு 180 ஏக்கர் இன்ச் தண்ணீர் தேவை.  அதாவது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு 3000 ஊரக பகுதி வீடுகளின் ஒரு மாத தண்ணீர் தேவையை நிறைவேற்றிவிட முடியும்.
சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் நீர் தேவை என்ற கணக்கின்படி,  இந்த மண்டலத்தில்தான் நீர் இருப்பு பட்டியல் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இவையெல்லாம் மகாராஷ்டிராவில் பயிரிடப்படும் ரோஜாப்பூ விவசாய உற்சாகத்தை குறைத்துவிடவில்லை.  அதற்கு கிடைக்கும் சிறிய உத்திரவாத வியாபார போக்கினால் மேலும் சிலரை அந்தப் பயிருக்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.  ரோஜாக்களுக்கு அதிக நீர் தேவை.  அதற்கு “212 ஏக்கர் இன்ச்” தண்ணீர் தேவை.  அதாவது 21.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு ஏக்கருக்கு. ரோஜா உற்பத்தி சிறிதளவானாலும் மாநிலத்தில் நடைபெறும் சில கொண்டாட்டங்களால் அதற்கு வரவேற்பு உள்ளது.  இதன் ஏற்றுமதி இந்த வருடம் 15 – 25 சதவீதம் உயர்ந்துள்ளது.  ரூபாயின் வீழ்ச்சி, நீடித்த குளிர்காலம், மற்றும் “காதலர் தினம்” போன்றவை ரோஜா உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
கடந்த 15 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் சீரமைப்பு நடவடிக்கைகள் என்பதைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தண்ணீரைத் தனியார்மயப்படுத்துதலில்தான் இருந்துள்ளது.  இந்த இயற்கை வளத்தின் மீதான சமூக கட்டுப்பாடு மிகவும் வேகமாக செயலிழக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் நிலத்தடி நீரை மிகுதியாக வீணடிப்பதாலும் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.  தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை அங்கு கொண்டுவர மகாராஷ்டிரா கடுமையாக உழைத்துள்ளது. கடல் போல் விரிந்து பரந்த வறண்ட நிலங்களுக்கு நடுவில் தனியார் நீச்சல் குளங்கள்.  பணக்காரர்களுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இல்லை.  ஆனால் மீதமுள்ளவர்களின் எதிர்பார்ப்பு தினந்தோறும் ஆவியாகிக்கொண்டிருக்கிறது.
0
நன்றி : பி. சாய்நாத், தி ஹிந்து / தமிழில் : எஸ். சம்பத்

கருத்துகள் இல்லை: