செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

உறைய வைத்த ரத்தத்தில் ஜெயலலிதா சிலை! கிடுகிடு நடுக்கத்தில் நாஞ்சில் சம்பத்!!

“அமலாபால் போட்டோவை குதிரை என்னா பண்ணிச்சு?”

Viruvirupu


முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை விதம்விதமாக கொண்டாடுவதில் அ.தி.மு.க.வினர் போட்டி போட்டுக்கொண்டு செயலாற்றி வருகையில், தமது ரத்தத்தை எடுத்து உறைய வைத்து, உறைந்த ரத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை செய்துள்ளார், கராத்தே வீரர் ஹுசைனி.
முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 65 கிலோ கேக் வெட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
புரட்சித் தலைவிக்காக சாதனைகள் எதையும் படைக்க திராணியற்றவர்கள், கேக் சாப்பிடுவதுடன் முடங்கிக் கொண்டனர்.
ஆனால், சாதனையாளர்கள் பொங்கி வழியும் கட்சியல்லவா, அ.தி.மு.க.? எனவே, புரட்சித் தலைவியின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாதனைகள் புரிந்து வருகின்றனர் அ.தி.மு.க.வினர்.
கோட்டையில் காலில் செருப்பு அணியாமல் நடப்பது, அம்மா முன் 45 பாகை கோணத்தில் நடப்பது, இடது கையால் வாயை பொத்திக்கொண்டு, வலது கையால் சல்யூட் அடித்தல் போன்ற ட்ரில்களில் அமைச்சர்கள் ஈடுபட…
மற்றையவர்கள் தத்தமது திறமைகளுக்கு ஏற்ப, தீச்சட்டி ஏந்துதல், கையில் சூடம் ஏற்றி மூன்று தடவை அம்மா படத்தை சுற்றி வருதல், அமலா பால் படத்தை கொள்ளுக்கு பதிலாக குதிரைக்கு போடுதல் என்று என்னென்னவே எல்லாம் செய்கிறார்கள்.
இந்நிலையில் கராத்தே வீரர் ஹுசைனி, முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து அதில் ஜெயலலிதாவின் சிலையை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து ஹுசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதாவின் சிலையினை உருவாக்குவதற்காக 8 ஆண்டுகள் எனது உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்தேன். அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர்.
ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், முதல்வரின் 65-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளேன். உறைய வைத்த ரத்தத்தில் உருவச் சிலையை படைத்திருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்” என்றார்.
கேட்கும்போதே ரத்தம் உறைவது போல இல்லையா?
உங்களுக்கு உறைகிறதோ, இல்லையோ… பகுத்தறிவுவாதியாக இருந்துவிட்டு தற்போது புதிதாக அ.தி.மு.க.வுக்கு வந்துள்ள நாஞ்சில் சம்பத், திகிலுடன் இருப்பார்.
“சம்பத் அண்ணே…  நாக்கை வெட்டி கோயில் உண்டியலில் போடுங்க” என்று யாராவது சொன்னால் என்ன செய்வது?

கருத்துகள் இல்லை: