திங்கள், 25 மார்ச், 2013

ஊழல்வாதிகள் சொத்து: பறிமுதல் செய்தது பீகார் அரசு

பாட்னா: லஞ்சம், ஊழல் போன்ற, முறைகேடான செயல்களால் சம்பாதித்த, 20 அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை, பீகார் மாநில அரசு துவக்கியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக லஞ்சம் மற்றும் ஊழல் போன்ற முறைகேடான செயல்கள் மூலம் சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை, பீகாரை ஆளும், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணி அரசு இயற்றியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில், ருத்ரானந்த் ஜா மற்றும் ராம்புகர் சவுத்ரி ஆகியோரின் சொத்துகள், அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்பது ஆண்டுகளாக, "இந்திரா அவாஸ் யோஜனா' என்ற மத்திய அரசு திட்ட நிதியை, 30 கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிய, இருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வரிசையில், இந்த ஆண்டு, 20 ஊழல்வாதிகளின் சொத்துகளை முடக்க, பீகார் அரசு முன் வந்துள்ளது.
அவர்களில் பலர், அரசு அதிகாரிகள்; சிலர், ரவுடிகள் மற்றும் தாதாக்கள். இதுகுறித்து, மாநில போலீஸ் தலைவர், அபயானந்த் கூறுகையில், ""ஊழல்வாதிகளின் சொத்துகள் பறிமுதல் நடவடிக்கை துவங்கிவிட்டது; ஆறு, அரசு அதிகாரிகளின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடரும்; இதற்கான பணியை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொள்வர்,'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: