திங்கள், 25 மார்ச், 2013

கோச்சடையன் சமணர்களை கழுவிலேற்றியவன்

 சைவர்கள் இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை செய்திருக்கிறார்கள். திருஞான சம்பந்தரிடம் வாதம் புரிந்து தோற்றுப்போனதால் பெருங்குன்றத்தைச் சேர்ந்த எட்டாயிரம் சமணர்களை கழுவிலேற்றியிருக்கிறார்கள்  nisaptham.com
சைவர்களை சமணர்கள் அடிக்க, சமணர்களை சைவர்கள் கொல்ல- இவர்களோடு ஒரே புராணமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பெரிய புராணம். பெரிய புராணத்திற்கு அடிப்படைக் காரணமான அறுபத்து மூன்று நாயன்மார்களும் இயேசுவுக்கு ஜூனியர்கள். இயேசு காலம் என்பது காலண்டர் பயன்படுத்தும் எல்லோருக்குமே தெரியும். 2000 வருடங்கள் ஆகிவிட்டது. நாயன்மார்கள் அதற்கப்புறம் முந்நூறு வருடங்களுக்கு பிறகுதான் ஸீனுக்கு வருகிறார்கள். கி.பி.300 லிருந்து கி.பி 865 வரை. அவர்களுக்கும் அப்புறம்தான் சுந்தரர் காலம் கி.பி. 840 வாக்கில். எதற்கு இந்த பெரிய புராண ஆராய்ச்சி?& சுந்தரர் எனக்கு சின்ன வயதிலேயே அறிமுகம். ஏதோ ஒரு படத்தில் விவேக்குக்கு போலீஸ் அதிகாரி அறிமுகமாகிய கதைதான்.
எனக்கு சுந்தரரை தெரியும். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது. அவிநாசியில்தான் சித்தி வீடு இருக்கிறது. அங்கு போகும் போதெல்லாம் ‘அந்தக் காலத்தில் சிறுவன் ஒருவனை முதலை விழுங்கிவிட்டதாகவும் சுந்தரர் ஏதோ பாட்டெல்லாம் பாட சிவபெருமானின் அருளால் பொற்றாமரைக் குளத்திலிருந்த முதலை அந்த சிறுவனை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கதை சொல்வார்கள். அந்தப் பொற்றாமரைக் குளத்தில் முதலை இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்திருக்கிறேன். முதலையெல்லாம் எதுவும் கண்ணில் பட்டதில்லை. தண்ணீரில்லாத அந்தக் குளத்தில் கக்கூஸ் போகும் யாராவது மனிதர்தான் கண்ணில் படுவார். இப்பொழுது இதே கதையை அச்சு பிசகாமல் என் மகனிடம் சொன்னால் அவன் முதலையைப் பற்றிய எந்த கவனமும் இல்லாமல் ‘பாட்டு பாடினால் சிவபெருமான் வருவாரா?’ என்கிறான். அறுபத்து மூன்று நாயன்மார்களையும் சோதனை செய்த சிவபெருமானை என் மகன் சோதனை செய்து கொண்டிருக்கிறான். ஆனால் பாருங்கள், அத்தனை நாயன்மார்களின் கதையிலும் சிவபெருமான் ஏதோ ஒரு வகையில் பிரசன்னமாகியிருக்கிறார். இதெல்லாம் நடந்து ஜஸ்ட் 1200 ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் யாருடைய கதையிலுமே சிவபெருமான் அட்டடெண்டன்ஸ் போடுவதில்லை. யுகங்களைத் தாண்டி வாழும் சிவபெருமானுக்கு 1200 ஆண்டுகளில் என்ன சிக்கல் வந்துவிட்டது என்று தெரியவில்லை. You are very bad guy சிவபெருமான்! கவனித்துப்பார்த்தால் நம் கதைகளில் சிவபெருமானும், விஷ்ணுவும் மற்றும் அவர்களது வாரிசுகளும் மட்டுமே கடவுளாக இருக்கிறார்கள். சைவம், வைணவத்தையும் விட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு சமணம் வலுவாக இருந்தது. இந்த மண்ணில்தானே சமண காவியமான மணிமேகலை பிறந்தது? அதன் பிறகு சமணர்கள் எங்கே சென்றார்கள் என்றால் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது விரட்டியடிக்கப்பட்டனர். காலங்காலமாகவே வெல்பவர்களின் பெயர்கள்தான் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. அப்படித்தான் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமான இடம் உறுதி செய்யப்பட்ட நம் வரலாற்றில் சமணர்கள் காலி செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காலத்திலிருந்தே இந்த சாமியார்கள் அலும்பு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வலுவாக இருந்த சமணர்கள் குரூப்பாக சேர்ந்து அப்பரை வைத்து கும்மியடித்திருக்கிறார்கள். அதற்கு மகேந்திரவர்மன் என்ற பல்லவனும் உடந்தை.  அப்பரை வதைத்தவர்கள் சம்பந்தரின் மடத்துக்கு தீயை வைத்திருக்கிறார்கள். காற்று ஒரே பக்கம் அடித்துக் கொண்டிருக்காது அல்லவா? இண்டர்வெல்லுக்கு முன்பாக ஹீரோ மனம் மாறுவது போல சமணனாக இருந்த மகேந்திரவர்மன் சைவனாக மாறிவிட்டான். அதன் பிறகு சமணர்களை துவம்சம் செய்திருக்கிறான். ரிவர்ஸ் கியரில் வண்டியை எடுத்தவன் சமணர்களின் கட்டடங்களையெல்லாம் அடித்து தரைமட்டமாக்கியிருக்கிறான். சமணர்களின் கதை கந்தலாகத் தொடங்கியது நெடுமாறன் என்றொரு மன்னன் இருந்திருக்கிறான். இவனுக்கு ரஜினிக்கும் சம்பந்தம் உண்டு. நெடுமாறனின் மகன் பெயர்தான் கோச்சடையன். நெடுமாறனும் converted தான். சைவத்திற்கு மாறிய பிறகு சமணர்களை கழுவிலேற்றியவன். சைவர்கள் சமணர்களை கழுவிலேற்றினார்கள் என்பதெல்லாம் பொய் என்றும், சைவர்கள் உத்தமர்கள் என்றும் இன்றைய இந்துப் பிரியர்கள் வரலாற்றை திருத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சைவர்கள் இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை செய்திருக்கிறார்கள். திருஞான சம்பந்தரிடம் வாதம் புரிந்து தோற்றுப்போனதால் பெருங்குன்றத்தைச் சேர்ந்த எட்டாயிரம் சமணர்களை கழுவிலேற்றியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நம்பியாண்டார் நம்பி பல இடங்களில் குறிப்பிட அதைத்தான் சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியெல்லாம் விரட்டியடிக்கப்பட்ட சமணர்கள் தமிழகத்தைவிட்டே காணாமல் போனார்கள். பிறகு புனையப்பட்ட கடவுள்களான சிவபெருமானும், விஷ்ணுவும் மட்டுமே தமிழகத்தின் கதைகளில் இடம் பிடித்துக் கொண்டார்கள். nisaptham.com

கருத்துகள் இல்லை: