திங்கள், 25 மார்ச், 2013

மிரட்ட பார்த்தால் பாடம் புகட்டுவோம்: காங்.,க்கு தி.மு.க., "போஸ்டர் எச்சரிக்கை'

தி.மு.க.,வினர் மீது, சி.பி.ஐ.,யை வைத்து மிரட்டப் பார்த்தால், தகுந்த பாடம் புகட்டுவோம்' என, புதுக்கோட்டை மாவட்ட, தி.மு.க.,வினர், "போஸ்டர்' மூலம், காங்.,சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை பிரச்னையை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, தி.மு.க., விலகியதை வரவேற்று, தமிழகம் முழுவதும், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புதுக்கோட்டையில், தி.மு.க.,வினருக்கு போட்டியாக, காங்., கட்சியினரும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு, புதுக்கோட்டை மாவட்ட, தி.மு.க.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, "சி.பி.ஐ.,யை வைத்து, தி.மு.க.,வினரை மிரட்டப் பார்த்தால், தகுந்த பாடம் புகட்டுவோம்' என, காங்., கட்சியினருக்கு, மாவட்ட, தி.மு.க.,வினர், "போஸ்டர்' மூலம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க.,வினரின் இந்த எச்சரிக்கை, மாவட்ட காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காங்., கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்டத் தலைவருமான வழக்கறிஞர், சந்திரசேகர் கூறியதாவது: காங்., கூட்டணி அரசில், 9 ஆண்டுகளாக அங்கம் வகித்து பலனடைந்த, தி.மு.க., தற்போது மத்திய அரசிலிருந்து விலகியவுடன், சோனியா மற்றும் காங்., கட்சியினருக்கு மிரட்டல் விடுத்து, "போஸ்டர்' ஒட்டியுள்ளது, வேதனையாக உள்ளது; இதுபோன்ற நடவடிக்கைகள், தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: