வெள்ளி, 13 ஜூலை, 2012

டில்லியின் ‘கடுமை முகம்’ ஒன்று விஜயகாந்தை நோக்கி

கோபாலபுரம்-விஜயகாந்த்-டில்லி: முக்கோண ரகசியம் தெரியுமா? வில்லங்க முடிவு! 
ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்குமாறு, ‘தட்ட முடியாத நிர்ப்பந்தம்’ ஒன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் தரப்பால் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக, டில்லி வட்டாரத் தகவல்கள் உள்ளன. அதை விஜயகாந்த் எப்படி ஹான்டில் பண்ணப் போகிறார் என்பதைக் காண தமிழகத்திலும் சிலர் ஆவலுடன் உள்ளார்கள்.
அந்த ‘சிலர்’ யார் என்பதை ஊகிக்க முடிகிறதா? ஆம். தி.மு.க.-வில் உள்ளார்கள் அந்த ‘சிலர்’.
கடந்த வாரமே ஒதுவிதமான அழுத்தம் விஜயகாந்துக்கு டில்லியில் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. “ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டோமே.. இப்போது திடீரென பல்டி அடித்தால், பெரிய பப்ளிசிட்டி டிஸாஸ்டராக மாறிவிடும் அது” என விஜயகாந்துக்கு நெருக்கமான புள்ளி ஒருவர், டில்லிக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

அதையடுத்து, பிரணாப் முகர்ஜியே விஜயகாந்துக்கு ஆதரவு கோரி கடிதம் எழுதுவது என்று இரு தரப்பாலும் முடிவு செய்யப்பட்டது.
கடிதம் கையில் கிடைத்த பின்னரும் விஜயகாந்த் நழுவுகிறார் என்று சென்னையில் இருந்து ஒரு அம்பு வடக்கே போனது. அம்பு புறப்பட்ட இடம் கோபாலபுரம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இன்றைய நிலையில், டில்லியின் ‘கடுமை முகம்’ ஒன்று விஜயகாந்தை நோக்கி உள்ளது. அதை பொருட்படுத்தாமல் விஜயகாந்த் முடிவு எடுப்பதும், விடுவதும், அவரது மடியில் உள்ள ‘கனம்’ எவ்வளவு என்பதில் தங்கியுள்ளது.
முடிவைத் தெரிந்து கொள்ள டில்லியைவிட, கோபாலபுரத்தில்தான் மிக ஆர்வமாக உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: