திங்கள், 9 ஜூலை, 2012

குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

குஜராத் கலவரத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்கள் எவை?.. லிஸ்ட் கேட்கும் சுப்ரீம் கோர்ட்! 

டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தின் போது இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

முன்னதாக 2002ம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவங்களில் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறியதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நரேந்திர மோடி அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில், குஜராத் கலவரத்தின்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மறறும் சேதப்படுத்தப்படட வழிபாட்டு தலங்கள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்க வேண்டும்.
கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும்.
குஜராத் கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் மீண்டும் கட்டவும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதையும் மாநில அரசு மதிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கை ஜூலை 30ம் தேதிக்கு நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் ஒத்தி வைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை நடந்தபோது குஜராத் அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க அரசின் நிதியை செலவிட முடியாது என்றார்.
 ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெள்ளத்தாலோ அல்லது நில நடுக்கத்தாலே ஒரு வீடு சேதமடைந்தால் அதற்கு நீங்கள் நிவாரணம் தருகிறீர்கள். அப்படி இருக்கையில் வழிபாட்டுத் தலத்துக்கு ஏன் தர முடியாது என்று கேட்ட நீதிபதிகள், கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம் என்று அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை: