சனி, 14 ஜூலை, 2012

சுய முன்னேற்ற நூல்களை எழுதிய கோபிக்கு தெரியவா இல்லை?


தமிழர்கள் சில விஷயத்தை பிடிக்காவிட்டால் கூட, திட்டிக்கொண்டே தொடர்ந்து செய்வார்கள். “கிரிக்கெட் மக்களை கெடுக்கிறது” என்று சொல்லிகொண்டே மேட்ச் பார்ப்பார்கள். சினிமாவை திட்டி கொண்டே, சினிமா செய்தி ஒன்று விடாமல் படிப்பார்கள். அந்த வரிசையில் இணையத்தில் மிக அதிகம் விமர்சிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா! என்ன தான் இந்நிகழ்ச்சியையும் கோபியையும் இணையத்தில் திட்டினாலும் நிறைய பேர் நிகழ்ச்சி பார்க்கின்றனர் என்பது நிதர்சனம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.

நீயா நானாவில் பங்கு பெற வேண்டுமெனில் உங்களுடைய அரை நாளை நீங்கள் இதற்குச் செலவழிக்கணும். நாம் செல்லும் போது நமக்கு முன் இன்னொரு நீயா நானா ஷூட்டிங் நடக்கும். அது முடிந்து, அதன் பின் கோபிநாத் சற்று ஓய்வு எடுத்து விட்டு மறுபடி ஷோ ஆரம்பிப்பதற்குள்ளேயே பல மணிகள் ஆகிடும். அதன் பின் நான்கைந்து மணி நேரம் ஷூட்டிங் நடக்கும்.
இப்படி அரை நாளை செலவழித்து ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எதற்காக? நம் முகம் டிவியில் தெரியவேண்டும் என்னும் எண்ணம். மேலும் நமக்கு தெரிந்த எல்லோருக்கும் நாம் பேசியது தெரிந்தால் அதில் ஒரு மகிழ்ச்சி. ஆனால், நாம் பேசி விட்டு வரும் நிகழ்ச்சி என்றைக்கு ஒளி பரப்பாகிறது என்ற தகவலை நீயா நானா அணி சொல்வது இல்லை. நீங்கள் பங்கேற்க உங்களை தொலை பேசியில் அழைத்த நபரை தொடர்ந்து விடாமல் அழைத்து கேட்டால், ஒருவேளை நீங்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி என்று வரும் என சொன்னாலும் சொல்லலாம்.
இதை விட கொடுமை,  இப்படி அரை நாள் செலவழித்து நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், பேசுகிற உங்கள் பேரை அவர்கள் போடுவதே இல்லை!
ஒவ்வொரு டிவியிலும் ஒவ்வொரு டாக் ஷோ ஒளிபரப்பாகிறது. சன் டிவியில் அரட்டை அரங்கம், ஜெயாவில் விசுவின் மக்கள் அரங்கம், ராஜில் அகட விகடம் என்று பல்வேறு டாக் ஷோக்கள் வருகின்றன. அவை அனைத்திலும் பேசுபவர் பெயரை போடவே செய்கிறார்கள். ஆனால் நீயா நானா மட்டும் பேச்சாளர் பெயரை போடுவதே இல்லை.
இதற்கு என்ன காரணம் சொல்ல நினைக்கிறது நீயா நானா அணி?
“இது ஒரு ரியாலிட்டி ஷோ; பேசுபவர் பெயர் போட்டால் பிரச்சனை” என்றா? எனில் அந்த வாதத்தை ஏற்க முடியாது. எப்போது ஒருவர் டிவியில் தன் முழு உருவம் காட்டுகிறாரோ அப்போதே அவர் பற்றிய முழு ஐடன்டிட்டி தெரிய வந்து விடுகிறது. எனவே பெயர் போடாவிட்டால், பேசியது நான் அல்ல என அவர் தப்பிக்க முடியாது
எனக்கு தெரிந்தவரை இதற்கு நிஜமான காரணம், நீயா நானா அணி இதனை தனி வேலையாக எடுத்து செய்ய விரும்ப வில்லை என்பதே. ஏற்கெனவே இருக்கும் பல வேலைகளில், பெயர்களை குறித்து வைத்து கொண்டு பேசுவோருக்கு நேரே பெயர் போட, சோம்பேறித்தனம். அதுதான் நிஜக் காரணம்!
ஆனால் அரட்டை அரங்கம், அகட விகடம் முதலிய ஆவேரேஜ் நிகழ்ச்சிகளில் இது முடிகிறது என்றால் தமிழின் நம்பர் ஒன் டாக் ஷோ என்று சொல்லி கொள்ளும்  நீயா நானா இதனை செய்ய தவறுவது ஏன்?
இதுவரை இருமுறை பேசியபோதும் நிகழ்ச்சி நடத்துவோரிடம் இந்த விஷயத்தை நான் எழுப்பியே வந்தேன். அப்போதெல்லாம் அவர்கள் “செய்றோம் சார். இது பத்தி பேசிக்கிட்டு இருக்கோம் ” என்றார்களே ஒழிய, மறுக்கவே இல்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசுவோருக்கு எந்த வெகுமதியும் கிடையாது! வெற்றி பெற்றோர் என இருவருக்கு மட்டும் பரிசு கொடுக்கபடுவதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி அன்று அந்த பரிசு தரப்படுவது இல்லை. அதன் பின் பரிசு சென்று சேர்கிறது எனில் மகிழ்ச்சியே. ஆனால் நிகழ்ச்சியில் பேசும் மற்ற பேச்சாளர்களுக்கு பணம் அல்லது வேறு எந்த பரிசும் இல்லை. உணவு கூட வெகு அரிதாக சாப்பாட்டு நேரம் என்றால் மட்டுமே ஏற்பாடு செய்வார்கள். பெரும்பாலும் இல்லை.
கடைசியில் பரிசு வழங்கும் போது கூட கோபி “ரெண்டாவது ரோவில் சிகப்பு சட்டை போட்டவருக்கு பரிசு” “முதல் ரோவில் ஜீன்ஸ் போட்ட பெண்ணுக்கு பரிசு” என்கிறாரே ஒழிய அவர்கள் பெயர் சொல்வதே இல்லை.
ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் விரும்பும் வார்த்தை அவரவர் பெயர்தான் என்பது சுய முன்னேற்ற நூல்களை எழுதிய கோபிக்கு தெரியவா இல்லை? என்ன கொடுமை சார் இது!
நீயா நானா நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் அதில் பேசும் பல வித மக்களின் பேச்சு மற்றும் அனுபவம் தான். ஆனால் அதற்கு உரிய மரியாதையை , அவர்கள் பெயர் போட்டு செலுத்த நீயா நானா தவறுவது என்ன விதத்தில் நியாயம்?
சமூக அவலங்களை தட்டி கேட்கும் நீயா நானா, தனது தவறை முதலில் திருத்தி கொள்ளட்டும் !
0
மோகன் குமார்

கருத்துகள் இல்லை: