ஞாயிறு, 8 ஜூலை, 2012

ரேணிகுண்டா இயக்குனர்: பாலா, சேரன், லிங்குசாமி காணாமல் போய்விடுவார்கள்


 இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளிவந்த ’ரேணிகுண்டா’ படம் பெரிய வெற்றியடைந்தது. ரேணிகுண்டாவைத் தொடர்ந்துபன்னீர் செல்வம் இயக்கும் படம் ’18 வயசு’. ரேணிகுண்டா படத்தில் நடித்த ஜானி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 
நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிக்கும் இந்த படம், இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.  18 வயசு படம் பற்றி பேசிய இயக்குனர் பன்னீர் செல்வம் “ நான் இயக்கிக்கொண்டிருக்கும் 18 வயசு படம் ஒரு ரொமேண்டிக் ஸ்டோரி என்றாலும், அதில் புதுவித யுக்தியை பயன்படுத்தியுள்ளேன். 


படத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபலமடைந்துவிட்டன. பல லட்சங்கள் கோடிகள் என பணம் செலவு செய்து உலகத்தின் பல மூளைகளிலும் எடுக்கப்படும் படங்கள் 30 முதல் 40 ரூபாய் வரையில் தெருக்களில் கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் மற்ற மொழி படங்களை காப்பி அடித்து தமிழ் சினிமாவில் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். மற்றவர்களின் கதையை திருடி படம் எடுப்பவர்கள் தமிழ் சினிமாவில் கௌரவப்படுத்தப்படுகிறார்களே தவிர புதுவித படங்களை எடுக்கும் திறமையுள்ள படைப்பாளிகளை கண்டுகொள்வதே இல்லை. இந்த நிலை மாறினால் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும். 

மற்ற மொழி படங்களின் கதைகளை திருடி படமெடுப்பவர்களை கண்டிக்காமல் விட்டால், அடுத்த தலைமுறையும் இதையே பின்பற்றி பாலா, சேரன், லிங்குசாமி போன்ற படைப்பாளிகளை காணாமல் போக செய்துவிடுவார்கள். தமிழ் சினிமா ஆபத்தான நிலையில் உள்ளது” என்று கூறினார். 

ரீமேக் என்பது ரீடேக் அளவிற்கு சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில் தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் இதுபோன்ற செயல்களை எதிர்த்து ஒவ்வொருவராக கொதித்தெழுந்துகொண்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: