வியாழன், 12 மார்ச், 2026

ஈரான் அணுஆயுத தளம் தரைமட்டம்; வான் பாதுகாப்பு முடக்கம்: இஸ்ரேலிய இராணுவம் அதிரடி அறிவிப்பு!

 தினமணி : ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தரைமட்டம்; வான் பாதுகாப்புக் கட்டமைப்புகள் முடக்கம்: இஸ்ரேலிய இராணுவம் அதிரடி அறிவிப்பு!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிரான யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 
ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் இதயமாகக் கருதப்படும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை இஸ்ரேலிய வான்படை முற்றுமுழுதாக அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Brig. Gen. Effie Defrin) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
'தல்கான்' அணு ஆயுத நிலையம் தகர்ப்பு


ஈரானியத் தலைநகருக்கு அருகே அமைந்துள்ள 'தல்கான்' (Talkan) அணு ஆயுத ஆராய்ச்சி நிலையத்தின் மீது இஸ்ரேலியப் போர் விமானங்கள் மிகக் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன. அணு ஆயுதங்களுக்கான வெடிபொருட்களைத் தயாரிப்பதற்கும், அது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் இந்தத் தளம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேலினால் இந்தத் தளம் ஒருமுறை தாக்கப்பட்ட போதிலும், ஈரான் அதனை மீண்டும் புனரமைத்துச் செயற்படுத்தியதன் காரணமாக, தற்போது அது முற்றுமுழுதாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
80 சதவீத வான் பாதுகாப்பு முடக்கம்
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் ஈரானுக்குள் புகுந்து இஸ்ரேலிய வான்படை 60 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்களின் விளைவாக:
ஈரானின் 80 சதவீதமான வான் பாதுகாப்புக் கட்டமைப்புகள் (Air Defense Systems) செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
ஈரானின் தரைவழி ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைச் செலுத்து வாகனங்களில் (Launchers) 60 சதவீதமானவை அழிக்கப்பட்டுள்ளன.
ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் பலிஸ்டிக் ஏவுகணைத் தயாரிப்பு மற்றும் சேமிப்பு நிலையங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
லெபனான் எல்லையில் 'கோலணி' படையணி
யுத்தத்தின் திசையை வடக்கு நோக்கித் திருப்பும் ஒரு நகர்வாக, இஸ்ரேலின் தெற்குப் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த அதிமுக்கிய 'கோலணி' (Golani Brigade) படையணியினை உடனடியாக வடக்கு எல்லைக்கு (லெபனான் எல்லை) நகர்த்துவதற்கு இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். இது லெபனான் மீதான ஒரு பாரிய தரைவழித் தாக்குதலுக்கான ஆரம்ப அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, பெய்ரூட் நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிச் சீர்திருத்தக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கிருந்த ஹிஸ்புல்லாவின் வான்படைத் தலைமையகம் மற்றும் ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் கட்டளை மையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.
அதிபர் ட்ரம்ப் மற்றும் மொஜ்தபா கமேனி குறித்த கருத்து
யுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்திற்குப் பதிலளித்த எஃபி டெஃப்ரின், "ஒரு இராணுவமாக எங்களிடம் இன்னும் பாரிய இலக்குகள் (Target Bank) உள்ளன. ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் அடித்தளம் தகர்க்கப்படும் வரை இந்த யுத்தம் தொடரும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஈரானின் புதிய தலைவராகப் பேசப்படும் மொஜ்தபா கமேனி இஸ்ரேலிற்கு அச்சுறுத்தலாக அமையும் பட்சத்தில், அவரும் இஸ்ரேலிய இராணுவத்தின் நேரடி இலக்காக மாறுவார் எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: