புதன், 16 அக்டோபர், 2024

வயநாடு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ஆம் தேதி

மின்னம்பலம் -Selvam :  வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 15) அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்டார். மேலும், அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனால், ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்தநிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி உள்பட 14 மாநிலங்களில் உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு மாநிலங்களின் தேர்தல் எண்ணிக்கையானது நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

கருத்துகள் இல்லை: