புதன், 6 டிசம்பர், 2023

செந்தில்குமார் MP: இந்தி பேசும் மாநிலங்கள் கோமூத்திர மாநிலங்கள்- நாடளு மன்றத்தில் புயல் கிளப்பிய தருமபுரி திமுக

மின்னம்பலம்  - christopher : திமுக எம்.பி.,க்கு எதிராக பாஜகவினர் அமளி... காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?
ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், வட மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்றது. மறுமுனையில் தென் மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு!
இந்நிலையில், கடந்த டிசம்பர் 4 அன்று துவங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் டிசம்பர் 5 கூட்டத்தில் இதுகுறித்து பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், “இந்தி நிலத்தில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் உங்களால் ஒருநாளும் நுழைய முடியாது”, என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் ‘கோ மூத்திர மாநிலங்கள்’ என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறது” என சர்ச்சைக்குரிய வகையிலான கருத்து ஒன்றையும் எம்.பி செந்தில்குமார் தெரிவித்தார்.அவரின் இந்த கருத்து, பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளிடமிருந்து கடும் எதிர்வினையை பெற்றது.

இந்த நிலையில், தனது எக்ஸ் தளத்தில், “சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த நான், தகாத முறையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த வார்த்தையை நான் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் பயன்படுத்தவில்லை.

அந்த வார்த்தை தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டு தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு!

இந்த விவகாரத்தில், திமுக எம்.பி செந்தில்குமாரை திமுக தலைவரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்ததாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

Adhir Ranjan Chowdhury: Lok Sabha privileges panel to probe Adhir Ranjan Chowdhury's 'misconduct' at meet on Friday - The Economic Times

காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!

இந்நிலையில், திமுக எம்.பி செந்தில்குமாரின் இந்த கருத்து தொடர்பாக, தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள, ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

மக்களவை காங்கிரஸ் தலைவரான அதிர் ரஞ்சன் சவுத்ரி, ” ‘கோ மூத்திர மாநிலங்கள்’ தொடர்பாக மக்களவையில் அவர் (செந்தில்குமார்) பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கோ மூத்திராவை நாங்கள் மதிக்கிறோம்”, என தெரிவித்துள்ளார்.

அதேபோல, காங்கிரஸ் எம்.பி-யான ராஜீவ் சுக்லா, “திமுக அரசியல் வேறு, காங்கிரஸ் அரசியல் வேறு. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தையும், கோ மூத்திராவையும் நம்புகிறது”, என எதிர்வினை ஆற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியுள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர் (செந்தில்குமார்) தான் பேசியதை திரும்ப பெற வேண்டும்”, என தெரிவித்துள்ளார்.

வரவேற்ற வைகோ

மறுபுறத்தில், மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, “அவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் சொல்வது சரிதான்”, என கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பாஜக எம்.பிக்கள் அமளி!

இவ்வாறு தொடர்ந்து திமுக எம்.பி செந்தில்குமாரின் கருத்துக்கு கண்டனம் எழுப்பப்பட்டு வந்தது.

இன்று (டிசம்பர் 6) தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்திலும் அது எதிரொலித்தது. அவருக்கு எதிராக மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தனது கருத்துக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும், தனது வார்த்தை யாரையாவது பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெர்விப்பதாகவும் கூறி மன்னிப்பு கோரினார்.

மகிழ்

கருத்துகள் இல்லை: