சனி, 16 டிசம்பர், 2023

ED அங்கித் திவாரி வழக்கு - விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: நீதிமன்றம்!

மின்னம்பலம் - Selvam :  அங்கித் திவாரி வழக்கு – விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: நீதிமன்றம்!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி அங்கித் திவாரி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்தநிலையில், ‘லஞ்சம் பெற்ற புகாரில் அங்கித் திவாரியை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை.

அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் விவேக் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில், “லஞ்சம் பெற்ற புகாரில் மத்திய அரசு அதிகாரிகளை மாநில அரசு காவல்துறை விசாரிக்க அதிகாரம் உள்ளது.

டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் மத்திய அரசு ஊழியர் லஞ்சம் பெற்ற புகார்களை மாநில காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். உச்சநீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதியளித்து பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செல்வம்

கருத்துகள் இல்லை: