வியாழன், 14 டிசம்பர், 2023

நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேருக்கு போலீஸ் காவல்!


minnambalam - Selvam : மக்களவையில் வண்ண வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட நான்கு பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.
மக்களவையில் நேற்று (டிசம்பர் 13) பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்த இருவர் வண்ண புகை குண்டு வீசினர். உடனடியாக அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே வண்ண வெடி குண்டுகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்ட இருவரையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா, மைசூர் மனோ ரஞ்சன், ஹரியானா நீலம் வர்மா, மகாராஷ்டிரா அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது. நான்கு பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.

அப்போது நான்கு பேரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நான்கு பேருக்கும் 7 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.  செல்வம்

கருத்துகள் இல்லை: