ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

இளங்கோவன்:கரூர் மாவட்டத்தை போல் எல்லா மாவட்டங்களிலும் பணத்தை அதிமுகவினர் பதுக்கி வைத்துள்ளார்கள்

கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகத்தில் ராகுல்காந்தி 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போலி நாடகம் காங்கிரசில் இருந்து சிறிது நாட்களுக்கு வெளியில் சென்றிருந்த த.மா.கா. தோழர்கள் மீண்டும் காங்கிரசுக்கு வந்திருக்கிறார்கள். இந்த வீடு(காங்கிரஸ் அலுவலகம்) அவர்களுக்கும் சொந்தமான வீடு தான். ஆகவே இந்த வீட்டுக்கு வந்துள்ள அவர்களை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக காங்கிரஸ் என்பது தமிழகத்தில் ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. மற்றவர்களெல்லாம் காங்கிரஸ் பெயரை வைத்துக்கொண்டு போலி நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நல்ல தேசிய உள்ளங்கள் மீண்டும் தாய்க்கழகத்தில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



இதையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ராகுல்காந்தி

கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குகிறது?

பதில்:- காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான முயற்சி நடக்கிறது. நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறோம். துணைத்தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 4 அல்லது 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய கேட்டிருக்கிறோம். அவரும் கண்டிப்பாக வருவார்.

குழப்பம்

கேள்வி:- காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பலருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குரல் எழுப்பப்படுகிறதே?

பதில்:- எல்லா கட்சிகளிலும் வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு சிறிது குழப்பங்கள் ஏற்பட தான் செய்தன. அதேபோல் தான் காங்கிரசிலும் ஏற்பட்டு இருக்கிறது. இது இயற்கை தான். சிலர் வருத்தத்துடன் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் சமாதானம் அடைந்து கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவார்கள்.

கரூர் மாவட்டத்தில்...

கேள்வி:- அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறதே? அதுபற்றி புகார் எதுவும் கொடுத்து இருக்கிறீர்களா?

பதில்:- இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையரை டெல்லியில் சந்தித்து சொல்லி இருக்கிறேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், கூட்டத்தில் இருந்து வெளியில் செல்ல விரும்பும் பொதுமக்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். போலீசார் அவர்களை தடுக்கக்கூடாது.

கேள்வி:- கரூர் மாவட்டத்தில் அதிகளவில் பணம் பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- கரூர் மாவட்டத்தில் மட்டுமல்ல. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் பணத்தை பதுக்கி வைத்து இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் பிடித்தது போல, மற்ற மாவட்டங்களிலும் பிடிக்க வேண்டும்.

தேர்தல்

கேள்வி:- தேர்தல் அமைதியான முறையில் நடக்க என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்றால், துணை ராணுவத்தை கொண்டு வருவதை விட, நேரடியாக ராணுவத்தை கொண்டு வந்து ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: